சீற்றமிகு கண்ணகியும்
பொறுமையாய் இருந்தவளே
தூற்றுகின்ற செய்கைகண்டு
துர்க்கையாய் மாறினாளே..
ஆற்றல் மிகு மொழி கூட்டி
போற்றும் வழி மலர்ந்தாளே
மாற்றம் ஒன்று வேண்டுமென
மதுரைக்குள் நுழைந்தாளே..
காத்திருந்த கணவனையே
காவெடுத்த மன்னனுக்கு
பூத்திருந்த காற்சிலம்பால்
ஆத்திரத்தைத் தந்தாளே
மன்னவனே யானாலும்
தன்கடமை பிழையாக
தன்னுயிரைத் தந்தானே
இதுவன்றோ தமிழென்று
இயம்பிடவே வந்த வெள்ளி
மானுடத்தின் அகராதியை
மக்களுக்குத் தந்திடவே
வேர்கொண்ட விடியலாகி
விவரப் பொழுதாகி
ஊர்அணைய உறுதிதனை
உளமாறச் சொன்னாயோ..
தலைமைக்குப் பண்பெல்லாம்
தன்வழியே சிறந்திட்டு
அதிகாரப் போதையின்றி
அன்பாலே மனம் கூட்டி
அகிலத்தை தனதாக்கும்
அற்புத விந்தைதனை
மறவாது காத்திடவே
மனதுக்குள் உரைத்தாயோ.
வேள்விக்குள் விடியலாகும்
வெள்ளிப் பூ விங்கே
கேள்விக்குள் பதிலாகி
காலைக்குள் மலர்ந்தாட
பெண்ணான வெள்ளிப்பூ
பெருமைக்குள் வந்திடவே
மண்ணாளும் தமிழ்போல
மகிமைக்குள் சிறந்திடுமே..