மழை பெய்த மலைகளிலே
மறுகி ஓடும் நீரோடை;
குறுகிய தோர் காட்டாறு
கூடி வீழும் அருவிகளும்;
அடித்து வந்த மூலிகையின்
அளவற்ற நறு மணங்களுடன்;
பரவி ஓடி வந்தநதி
படர்ந்ததே சம வெளிகளிலே !
கரை கட்டும் சரிகைச்சேலை
காற்றிலசைந்து நடந்தார்ப் போல்;
மணல் படுகை மீதெல்லாம்
நதியாய் ஓடும் நீர்ச்சேலை.
இருகரையை வரிந்து கட்டி
இசைந்த பச்சைச் செழிப்பூட்டி;
இகமெல்லாம் இழையோடி நிற்கும்
இன்னுயிர்க் கமுதாகும் இன்நதியே !
ஓடிக் களிக்கும் நாளெல்லாம்
உவந்து நீரால் அமுதூட்டும்;
உலர்ந்து கிடக்கும் நாளினிலும்
ஊற்றா யிங்கு உவப்பளிக்கும்;
ஆடி அசைந்து கரைகளெல்லாம்
அமுதுக் கிண்ணம் ஆக்கியபின்;
தேடி ஓடிச் சேர்ந்தடையும்
தேர்ந்த ஆழி அன்பனுடன் !