பாடல் – 50
கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும்
உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும்
இல்லிருந் தெல்லை கடப்பாளும் இம்மூவர்
வல்லே மழையருக்குங் கோள்.
(இ-ள்.) கொள்பொருள் – தான் கொள்ளுதற்குரிய பொருளை, வெஃகி – விரும்பி, குடி அலைக்கும் – குடிகளை வருத்துகின்ற, வேந்தனும் – அரசனும்; உள்பொருள் – உண்மை நிகழ்ச்சியை, சொல்லா – சொல்லாமல், சலம் மொழி – பொய் சொல்லுகின்ற, மாந்தரும் – மனிதரும்; இல் இருந்து – (ஒருவனுக்கு மனையாளாய்) வீட்டிலிருந்து, எல்லை – (அவன் சொல், மனையென்னும் இரண்டின்) எல்லையை, கடப்பாளும் – கடந்து நடப்பவளும்; இ மூவர் – ஆகிய இம் மூவரும், வல்லே – விரைந்து, மழை அருக்கும் – மழையைக் குறைக்கின்ற, கோள் – கோள்களாம்; (எ-று.)
(க-ரை.) குடிகொன்று இறைகொள்ளும் கொடுங்கோல் மன்னனும், பொய் பேசுகின்றவனும், பெண் தன்மையை மீறி நடக்கின்ற பெண்ணும் இருக்கும் நாட்டில் மழை பெய்யாதென்பது.
கொள் பொருள் : வினைத்தொகை. இறை – வரி. உள் பொருள் : பண்புத்தொகை. சொல்லா : மல் ஈறு தொக்க வினையெச்சம். வல்லே : இடைச்சொல். அருக்கும் : பிறவினைப் பெயரெச்சம், அருகு : தன்வினைப்பகுதி; கோள் – வலி; தங்கள் இயக்கத்தால் ஒருவனுக்கு நன்மையேனும் தீமையேனும் வருவிக்கும் கிரகங்களுக்கு ஆதலால், பண்பாகு பெயர்.