பாடல் – 49
ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது
வைதெள்ளிச் சொல்லுந் தலைமகனும் – பொய்தெள்ளி
அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர்
இம்மைக் குறுதியில் லார்.
(இ-ள்.) ஏவு – (பெற்றோரால்) ஏவப்பட்ட, ஆதும் – எந்தக் காரியத்தையும், மாற்றும் – தன்னால் முடியாதென மறுக்கின்ற, இளங்கிளையும் – புதல்வனும்; காவாது – மனைவியைக் காவாமல், வைது – திட்டி, எள்ளி – இகழ்ந்து, சொல்லும் – பேசுகின்ற, தலைமகனும் – கணவனும்; பொய் – பொய்ம் மொழியை, தெள்ளி – ஆராய்ந்து சொல்லி, அம்மனை – தான் வாழ்கின்ற வீட்டின் செல்வத்தை, தேய்க்கும் – அழிக்கும், மனையாளும் – மனைவியும்; இ மூவர் – ஆகிய இம் மூவரும், இம்மைக்கு – இப் பிறப்பில், உறுதி யில்லார் – எவருக்கும் பயனில்லாதவர் ஆவர்; ‘(எ-று)
(க-ரை.) ஏவிய சொற் கேளா மக்களும், மனைவியைப் போற்றாக் கணவனும், வீட்டுப் பொருளை வீணே அழிக்கின்ற மனைவியும் இம்மையில் எவருக்கும் பயனற்றவர்.
ஏவாதும் ஆற்றும் இளங்கிளை என்று கொண்டு சொல்லாத காரியத்தையும் தன் விருப்பம்போல் செய்கின்ற புதல்வன் எனலுமாம். ஆது : யாது என்பதன் மரூஉ; உம் : இழிவு சிறப்பும், முற்றுப் பொருளும் தர நின்றது. எள்ளி : எள் என்னும் முதனிலையடியாகப் பிறந்த வினையெச்சம். தலைமகன் – கணவன். இம்மைக்கு என்பதில் இழிவு சிறப்பு உம் தொக்கது; கு : உருபு மயக்கம். மனை தன்னிடத்திலுள்ள செல்வத்தை யுணர்த்தலால் இடவாகு பெயர். தேய்க்கும் : பிறவினைப் பெயரெச்சம். தேய் : தன்வினை பிறவினை இரண்டுக்கும் பொது. உறுதி : தொழிலாகு பெயர்.