பாடல் – 42
கழகத்தால் வந்த பொருள்கா முறாமை
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் – ஒழுகல்
உழவின்கட் காமுற்று வாழ்தல்இம் மூன்றும்
அழகென்ப வேளாண் குடிக்கு.
(இ-ள்.) கழகத்தால் – சூதாட்டத்தினால், வந்த – கிடைத்த பொருள் – பொருளை, காமுறாமை – விரும்பாமையும்; பழகினும் – (பலநாள்) பழகினாலும், பார்ப்பாரை – பிராமணரை, தீப்போல் – தீக்கு அஞ்சி நடப்பதுபோல், ஒழுகல் – அஞ்சி நடத்தலும்; உழவின் கண் – பயிர் செய்தலில், காமுற்று – விருப்பம் செலுத்தி, வாழ்தல் – வாழுதலும்; இ மூன்றும் – ஆகிய இம்மூன்றும், வேளாண்குடிக்கு வேளாண்மையுடைய குலத்துக்கு, அழகு என்ப – (பெரியோர்) அழகு என்று சொல்வர்; (எ-று.)
(க-ரை.) சூதாடிப் பொருள் சம்பாதியாதிருத்தலும், பிராமணரை நெருப்புக்கு ஒப்பாக நினைந்து நடத்தலும், உழுது பயிர் செய்து வாழ்தலும் வேளாளர்க்குச் சிறந்த அறம் ஆகும்.
காமுறாமை, ஒழுகல், வாழுதல் என்பன பெயர்ச்செவ்வெண்ணாதலால், மூன்றும் என்னும் தொகையோடு ஈற்றில் முற்றும்மை பெற்றது. காமுறாமை : எதிர்மறைத் தொழிற்பெயர். பழகினும் : உம் : எதிர்மறை. கழகம் – சூதாடுமிடம், இடவாகுபெயராய்ச் சூதை யுணர்த்திற்று. தீப்போல் ஒழுகலாவது – குளிர் காய்வார் நெருப்பை மிக நெருங்காமலும் நீங்காமலும் ஒத்த இடத்து இருப்பதுபோல் பார்ப்பார் இடத்தும் நின்று நடத்தல். பார்ப்பார் – மறைநூல். பார்ப்பார் : காரண இடுகுறிப் பெயர்.