பாடல் – 36
ஊனுண் டுயிர்கட் கருளுடையே மென்பானுந்
தானுடன்பா டின்றி வினையாக்கு மென்பானுங்
தாமுறு வேள்வியிற் கொல்வானும் இம்மூவர்
தாமறிவர் தாங்கண்ட வாறு.
(இ-ள்.) ஊன் உண்டு – ஒன்றின் மாமிசத்தைத் தின்று, உயிர்கட்கு – உயிர்களிடத்தில், அருள் உடையேம் – தயவுடையோம், என்பானும் – என்று சொல்வானும்; தான் உடன்பாடு இன்றி – தான் (யாதொரு முயற்சிக்கும்) உடன்படாமல், வினை ஆக்கும் – ஊழ் (எல்லாம்) செய்யும், என்பானும் – என்கிறவனும்; காமுறு – (ஒரு பயனைப்பெற வேண்டிச் செய்ய) விரும்புகின்ற, வேள்வியில் – யாகத்தில், கொல்வானும் – (ஓருயிரைக்) கொலை செய்வானும்; இ மூவர் – ஆகிய இம் மூவரும், தாம் கண்ட ஆறு – தாங்கள் அறிந்தபடியே, தாம் அறிவர் – தாங்கள் அறிந்தவராவர்; (எ-று.)
(க-ரை.) தன் உடலைப் பெருக்கும் விருப்புடன் உயிரைக் கொன்று தின்றும் எனக்கு உயிர்மீது இரக்கமுண்டு என்று பகர்வதும், எல்லாம் விதியினால் வருகிறதென்று சொல்லிச் சோம்பி இருப்பதும், இம்மைப் பயன் கருதிச் சில சடங்குசெய்து உயிரைக் கொல்வதும் நூல்களின் உண்மை யுணராதவர் செய்கைகளாம்.
உயிர்கட்கு : உருபு மயக்கம். உடன்பாடு : முதனிலை திரிந்த தொழிற்பெயர். வினை – ஊழ்; முன்வினைப்பயன் ஒருவன் தனக்குள் தானொன்றைக் கருதும்போது தன்னைத் தன்மைப்பன்மையாக வைத்துக் கூறுதல் மரபாதலால் உடையேம் என்பது வழாநிலை. காமுறு வேள்வியாவது – தான் விரும்பிய பொருளை அடையும் பொருட்டுச் செய்யப்படும் யாகம். அறநூலின் கருத்தை அறிவுடையோர்பாற் கேட்டு உண்மை உணர்ந்திலராதலால், தாங் கண்டவாறு தாம் அறிவர் எனப்பட்டது. ஆக்கும் என்ற குறிப்பால் வினை ஊழை உணர்த்தியது.