பாடல் – 33
கோலஞ்சி வாழுங் குடியுங் குடிதழீஇ
ஆலம்வீழ் போலும் அமைச்சனும் – வேலின்
கடைமணிபோற் றிண்ணியான் காப்பும்இம் மூன்றும்
படைவேந்தன் பற்று விடல்.
(இ-ள்.) கோல் அஞ்சி – (தன்) செங்கோலைப் பயந்து, வாழும் குடியும் – வாழ்கின்ற குடியும்; குடிதழீஇ – குடிகளைத் தழுவி, ஆலம் வீழ்போலும் – ஆலமரத்தின் விழுதைப்போல் (தாங்கவல்ல,) அமைச்சனும் – மந்திரியும், வேலின் – வேலினிடத்து, கடைமணி போல் – பூண்போல, திண்ணியான் – திட்பமுடையவனது, காப்பும் – காவலும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், படை வேந்தன் – படையையுடைய அரசன், பற்றுவிடல் – பற்றுவிடாது ஒழுகுக; (எ-று.)
(க-ரை.) அரசியலுக்கு அடங்கி நடக்கும் குடிகளையும், குடிகளை ஓம்புவதில் சூழ்கண்ணாக விளங்கும் அமைச்சனையும், குடியை நீங்காதபடி உறுதியாகக் காக்குந் தொழிலையும் அரசன் கைவிடலாகாது என்பது.
கோல் அஞ்சி – கோலை அஞ்சி : இரண்டாம் வேற்றுமைத் தொகை. கோலுக்கு அஞ்சி என்று நான்காம் வேற்றுமையாக்குவாரு முளர். வாழும் என்ற குறிப்பால் கோல் பொதுமையின் நீங்கிச் செங்கோலை யுணர்த்தியது. குடி – குடிப்பிறந்தோர். தழீஇ : செய்தென் வினையெச்சம் : தழுவு : பகுதி, தழுவி என்று இருக்க வேண்டியது விகுதிகெட்டு, பகுதி தழி எனத்திரிந்து உயிர்நீண்டு அளபெடுத்து வந்தது, சொல்லிசை யளபெடை, வீழ் : வீழ்வது எனக் காரணக்குறியால் வந்தது, இகர விகுதி புணர்ந்துகெட்டது, தொழிலாகு பெயருமாம். அமைச்சன் அரசனோடு இருப்பவன் என்ற பொருளில் அமாத்யன் என்ற வட சொற்றிரிபு என்ப. விடல் : எதிர்மறை வியங்கோள் வினைமுற்று ‘பற்றி விடல்’ என்ற பாடங் கொள்ளுமிடத்துக் கைக் கொண்டு விடாதிருக்க என்று பொருள் கொள்க.