இளங்கதிர் எழவும் இறைகொளக் கருதி
இணைந்தெழும் புள்ளினம் போல
வளமுடன் வாழ மிகுபொருள் நாடி
வையகம் சுற்றிடும் நண்பீர்!
உளங்கொள வேண்டி உமக்கிது புகன்றேன்!
உணருமின் அன்புடன்! நீர்தாம்
விளங்குறும் ஊர்கள் எங்கணுய்ந் தாலும்
வியன்றமிழ் மறக்கலிர் என்றும்!

மலர்தொறும் நாடி மலிவுற வுண்டு
மகிழ்வுறும் வண்டினம் போலக்
கலைமொழிப் பண்பின் பலதிறங் கண்டு
களிபெற வலம்வரு பெரியீர்!
நலங்கொள வேண்டி நவின்றனன்! நீர்தாம்
நாடிய நாடெது வெனினும்
தலைமுறை யாகப் புகழுற வாழ்ந்த
தமிழ்க்கலை மறக்கலிர் என்றும்!

புற்றரை மேவிப் பொழுதுடன் இல்லம்
புகுந்திடும் ஆவினம் போலக்
கற்றிட வெண்ணிக் கடல்கடந் தேகிக்
கலைபல பயின்றபின் உவகை
உற்றிட மீளும் உறுதவ மாண்பீர்!
உமக்கிது சொற்றனன்! உள்ளம்
பற்றுமின்! உலகிற் பழையநம் தமிழ்ப்பண்
பாடதை மறக்கலிர் என்றும்!

ஈன்றவள் சிறக்க இடர்ப்பட எங்கோ
ஏகிடும் மக்களைப் போல
ஆன்றநன் பனூல்கள் ஆயுந ராக
அரசியல் தூதுவ ராகத்
தோன்றிய ஊர்கள் யாவையு நாடுந்
தூயவ ரேமனங் கொள்வீர்!
தோன்றிய நாட்குச் சான்றில தாய
தமிழகம் மறக்கலிர் என்றும்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...