19 வயது முதல் 35 வயது வரை உள்ள அனைவருமே இளையோர் தான். அது மட்டுமல்லாமல்; துடிப்புடன், பயம் என்பதே இல்லாமல் பல எதிர்ப்புகளையும் தாண்டி முழு ஆற்றலுடன் எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பவன் இளைஞன். இத்தகைய மனபலத்தையும் ஆற்றலையும் படைத்த இளைஞன் இன்று தன்னை அறியாமலேயே நாகரிகம், ஃபேஷன், வாழ்க்கை சூழ்நிலை போன்ற காரணங்களால் தன்னையே அழித்து, தன் வாழ்வையே கேள்விக்குறியான ஒன்றாக மாற்றி வருகின்றான்.

இளைஞன் தடுமாறும் சூழல்:

இளம் வயது புதிய மாற்றம் ஏற்படும் காலம், பொதுவாக மன அழுத்தமும், கவலையும் நிறைந்த காலம் என ஐக்கிய நாடுகளின் ஓர் அறிக்கை விவரிக்கிறது. இளைஞர்களால் பொதுவாக மனஅழுத்தத்தையும், கவலையையும் ஆக்கபூர்வமான விதத்தில் சமாளிக்க முடிவதில்லை. அதற்கான அனுபவம் அவர்களிடம் சிறிதும் இருப்பதில்லை. இந்த நேரங்களில் சரியான வழிநடத்துதல் இல்லை என்றால் இளைஞர்கள் எளிதாக தீய வழிதனில் சென்று விடுவார்கள்.

குடும்ப சூழ்நிலை காரணம்:

“பல குழந்தைகள் இருக்கிறார்கள் ஆனால், எல்லாக் குழந்தைகளுக்கும் நல்ல தாயும் தந்தையும் கிடைப்பதில்லை” என்று திருத்தந்தை 23-ம் அருளப்பர் கூறுகிறார். கடந்த 30 – ஆண்டுகளாகத் தோன்றியிருக்கும் குழந்தை வளர்ப்பு முறைகள் கூட இன்று கட்டுப்படுத்த முடியாத இளைஞர்களையே தோற்றுவிக்கிறது என்று டாக்டர் ராபர்ட் ஷா கூறுகிறார்.

தாய், தந்தையிடையே நடக்கும் சண்டைகள் கூட குழந்தைகளை, இளைஞர்களை பாதிக்கிறது. உதாரணமாக அமெரிக்க குழந்தைகளில் 3 பங்குக்கும் அதிகமானோர் 18 வயதினை எட்டுவதற்கு முன்பே பொற்றோரின் விவகாரத்தால் பாதிக்கப்படுகின்றனர் என ஜர்னல் ஆஃப் இன்ஸ்ட்ரக்னல் சைக்காலஜி என்ற பத்திரிகை அறிக்கை செய்கிறது. மேற்கத்திய நாடுகளும் இது போன்ற புள்ளி விவரங்களை வெளியிடுகின்றன. இப்படி பெற்றோரின் கண்காணிப்பு இல்லாமல் வளரும் பிள்ளைகள் பெரும்பாலும் தனிமையை அனுபவிக்கிறார்கள், பிரச்சனையை விலைக் கொடுத்தே வாங்குகிறார்கள்.

வரம்புகள் இல்லாதது:

தெளிவான வரம்புகள் இல்லாதது இளம் குற்றவாளிகள் தோன்றுவதற்கு காரணமாக அமையலாம். “தான் கஷ்ட்டப்பட்டதைப் போன்று தன் பிள்ளையும் எந்த கஷ்ட்டத்தையும் அனுபவிக்கக் கூடாது” என்பதற்காக ‘கூடாது’ என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் எவ்வித வரம்புகளும் வைக்காமல் அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து இன்று வளர்க்கப்படும் பிள்ளைகள் “‘மற்றவர்களுக்கும் வாழ்க்கையும், உணர்ச்சிகளும், தேவைகளும், விருப்பங்களும் உண்டு என்பதை உணர வாய்ப்பில்லை’ ‘மற்றவர் இடத்தில் தன்னை வைத்து பார்க்கத் தெரியாத எந்த பிள்ளையாலும் அன்பு காட்டவும் முடியாது’”. அது மட்டுமல்லாமல் கண்டிப்பு இல்லாமல் வளர்க்கப்படும் பிள்ளைகள் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்துக் கொள்வது மிகக் கடினம் என்பதை பெற்றோர்கள் உணருவது இல்லை.

இணையமும் இளையோரும்:

பெரும்பாலான இளைஞர்கள் facebook, WhatsApp போன்ற சமூக வலை தளங்களுக்கு அடிமையாக மாறி தன் வாழ்வையே அழித்து வருகிறார்கள். 2004-ம் ஆண்டு துவங்கப்பட்ட facebook என்கிற சமூக வலை தளம் இன்று 800 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. இதன் நிறுவனர் Mark Zuckerberg அவர்கள் உரையாற்றுகையில் இந்த சமூக வலை தளத்தின் மூலம் இளைய சமுதாயத்தின் மறுமலர்ச்சியையும், எழுச்சியையும் மிக விரைவில் உலகமெங்கும் காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், இது போன்ற சமூக வலைதளங்களின் வீரியவேர்கள் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று தன் பாதையை அமைத்துக் கொள்ளும் என்று அன்றைய தினம் யாரும் அறிந்திருக்கவில்லை. நம் இளைஞர் சமுதாயம் அறிவார்ந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதில் எந்த தவறும் கிடையாது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல எந்த ஒரு பழக்கமும் நம்மை ஆளாமல் நாம் தான் அதனை ஆள வேண்டும் என்பதை அறியாத இளைஞர்களாய் தன் வாழ்வின் பெரும் பகுதியை facebook, WhatsApp – நண்பர்களுடன் chating செய்வதிலேயே கழித்து விடுகின்றனர். இது இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்காகவும் மாறியிருக்கிறது.

ஆடம்பரத்தை நாடும் இளையோர்:

உழைத்து சேர்த்த பொருளை யாருக்கும் செலவிடாமல் சேர்த்து வைக்கத் தெரிந்த தலைமுறை அதை என்ன செய்வது என்று தெரியாது இருந்த நேரத்தில் தான் மேலை நாட்டு கலாச்சாரம் நம் இளையோர் மத்தியில் ஊடுருவ ஆரம்பித்தது. அந்த நேரத்தில் தான் “தான் வாழ பிறரையும் வாழ விட வேண்டும் என்ற சிந்தனையை மறந்து சம்பாதித்த பொருளை நல்ல வழிதனில் செலவழிக்க வேண்டும் என்ற மனதுடன் கூடிய மனிதாபிமானம் இல்லாத” இளைஞர்கள் உருவாக்கப்பட்டனர். ஆடம்பரமாக சுயநலத்துடன் கூடிய வாழ்க்கை வாழ்ந்த இளைஞர்கள் தங்கள் சேமிப்பை இழந்தார்கள்.

Treet என்னும் பெயரில் மது:

தமிழகத்தில் மது அருந்துவோரின் சராசரி வயது 13 என்கிறது ஒரு புள்ளி விவரம்.

இன்றைக்கு திருமணத்திற்கு மது, இறப்புக்கு மது என இன்றை இளையோர்கள் தன்னுடைய வாழ்வில் நல்லது அல்லது கெட்டது என எது நடந்தாலும் தானும் மது அருந்தி தன் நண்பர்களுக்கும் Treet (மது) வைப்பது இன்றைக்கு ஃபேஷனாக மாறிவிட்டது. Treet என்னும் பெயரில் சின்னதாக அன்றைய தின மகிழ்ச்சியை அனுபவிக்க அல்லது துக்கத்தை மறக்க என அவர்கள் ஆரம்பிக்கும் மது பழக்கமானது நாளை தன் வாழ்வையே அழித்து விடும் என்பதை அறியாத இளைஞர்களாய் பெரும்பாலான இளைஞர்கள் மதுவை தன் வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றி வருகின்றான்.

உலக சுகாதர மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி 2 பில்லியன் மக்கள் மது பழக்கம் உடையவர்கள் எனவும், 75 மில்லியனுக்கு மேற்ப்பட்டோர் மது பழக்கத்தால் ஏற்பட்ட உடல் நோய்களால் அவதிப்படுகின்றனர். உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 2.5 கோடி பேர் மது காரணமான நோய்களால் இறக்கின்றனர். 15 முதல் 29 வயதுக்கு உட்பட்டோரில் 9% பேரின் இறப்புக்கு மதுவே காரணமாக அமைகிறது. கடந்த 30 ஆண்டுகாலமாக வளர்ந்து வரும் நாடுகளில் குறைந்து வரும் நிலையில் இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் அது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் 1950-களில் 23-ஆக இருந்த மது அருந்துவோரின் வயது 1990-களில் 19-ஆக குறைந்து இன்று 13-ஆக குறைந்துள்ளது.

இளைஞனே! நீ எதற்காக விளக்கில் விழும் விட்டில் பூச்சியாய் நீ உன் வாழ்வையே அழிக்கின்றாய். நீ சாதிக்க பிறந்தவன், உன் வாழ்க்கை உன் கையில், வாழ்வில் வரும் தடுமாற்றம் மாற்றத்தை விளைவிக்கும். பார்த்து பார்த்து அடி வைக்க இது பூக்கள் நிறைந்த பாதை(உலகம்) அல்ல, மாறாக முட்கள், வலிகள், சோதனைகள் அடங்கிய பாதை. இந்த பாதையை கடக்கும் சக்தி இளைஞனே உனக்கு உண்டு. இவ்வுலகில் உன் இலட்சியத்தில் தடுமாற்றம் இல்லாமல் போராடு வெற்றி நிச்சயம்.

சிந்தித்து செயல்படு!
இவ்வுலகு வியக்கட்டும் உன்னைக் கண்டு!