செந்தமிழே ஆட்சிமொழி; பள்ளி யெல்லாம்
        செந்தமிழே கல்விமொழி; தெருவி  லெல்லாம்
செந்தமிழே பேச்சுமொழி; வீட்டி லெல்லாம்
        செந்தமிழே மழலைமொழி; குவிந்தி ருக்கும்
செந்தமிழின் நூல்களெல்லாம் மொழிபெ யர்த்தும்
        செந்தமிழில் பிறமொழிநூல் ஆக்கம் சேர்த்தும்
எந்தமிழை உலகமொழி ஆக்க லொன்றே
        என்இலக்கு என்ஓட்டம் முயல்வேன் செய்வேன்!

 

மக்களுக்காய் ஆட்சிசெய்த மன்னர் நாட்டில்
        மக்களாலே தேர்வுபெற்ற அமைச்ச ரெல்லாம்
தக்கபடி செங்கோலில் நடந்தி டாமல்
        தன்னலத்தால் நாடுதனைச் சுரண்டு கின்றார்
சொக்கவைக்கும் சொல்பேசி செயலில் மாறும்
        சொரணையில்லா அரசியலைத் திருத்து கின்ற
தக்கபணி செய்வதினை இலக்காய் வைத்துத்
        தடையுடைத்தே ஓடுகின்றேன் வெல்வேன் வீழேன்!

 

இடையினிலே வந்தசாதி மதங்க ளாலே
        இருந்திட்ட ஒற்றுமைதான் போயிற் றின்று
கடைச்சரக்காய் ஆனதிங்கே மனித நேயம்
        காசிற்கே அன்புவாங்கும் நிலையா  யிற்று
விடைகொடுத்து வன்முறைக்கு; சமத்து வத்தை
        வீதியெல்லாம் நிலைநிறுத்த இலக்கு வைத்தேன்
நடைமாற்றி அதையடைய ஓடு கின்றேன்
        நான்வெற்றி பெற்றிடுவேன் பொதுமை செய்வேன்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »