செந்தமிழே ஆட்சிமொழி; பள்ளி யெல்லாம்
செந்தமிழே கல்விமொழி; தெருவி லெல்லாம்
செந்தமிழே பேச்சுமொழி; வீட்டி லெல்லாம்
செந்தமிழே மழலைமொழி; குவிந்தி ருக்கும்
செந்தமிழின் நூல்களெல்லாம் மொழிபெ யர்த்தும்
செந்தமிழில் பிறமொழிநூல் ஆக்கம் சேர்த்தும்
எந்தமிழை உலகமொழி ஆக்க லொன்றே
என்இலக்கு என்ஓட்டம் முயல்வேன் செய்வேன்!
மக்களுக்காய் ஆட்சிசெய்த மன்னர் நாட்டில்
மக்களாலே தேர்வுபெற்ற அமைச்ச ரெல்லாம்
தக்கபடி செங்கோலில் நடந்தி டாமல்
தன்னலத்தால் நாடுதனைச் சுரண்டு கின்றார்
சொக்கவைக்கும் சொல்பேசி செயலில் மாறும்
சொரணையில்லா அரசியலைத் திருத்து கின்ற
தக்கபணி செய்வதினை இலக்காய் வைத்துத்
தடையுடைத்தே ஓடுகின்றேன் வெல்வேன் வீழேன்!
இடையினிலே வந்தசாதி மதங்க ளாலே
இருந்திட்ட ஒற்றுமைதான் போயிற் றின்று
கடைச்சரக்காய் ஆனதிங்கே மனித நேயம்
காசிற்கே அன்புவாங்கும் நிலையா யிற்று
விடைகொடுத்து வன்முறைக்கு; சமத்து வத்தை
வீதியெல்லாம் நிலைநிறுத்த இலக்கு வைத்தேன்
நடைமாற்றி அதையடைய ஓடு கின்றேன்
நான்வெற்றி பெற்றிடுவேன் பொதுமை செய்வேன்!