1.
கவியால் கோட்டையைக் கட்டிய கம்பனின்
கால்களைத் தொட்டுத் தொழுகின்றேன்!
புவியும் செழித்திடப் பூந்தமிழ்த் தோப்பைத்
புலமை தழைக்க உழுகின்றேன்!
  
2.
விருத்தக் கவிகள் விருந்தென இன்பம்
விளைத்திடும் என்றே..நான் உண்டேனே!
பொருத்த முடனே கருத்தைப் புனையும்
புதுமைத் திறனை..நான் கொண்டேனே!
  
3.
வில்லொளிர் வீரனும் சொல்லொளிர் சீதையும்
வெண்மிதிலை வீதியில் நோக்கினேரே!
நல்லொளி பாக்கள் நவின்றிடும் என்னுள்
நடையொளி காட்டியே தாக்கினரே!
  
4.
என்றும் உளதென இன்பத் தமிழினை
ஏத்திய கம்பனைப் போற்றிடுவேன்!
நின்றும் கிடந்தும் அமர்ந்தும் இருக்கும்
நெடியவன் சீரினைச் சாற்றிடுவேன்!
  
5.
போரும் ஒடுங்கும் புகழும் ஒடுங்காப்
புதுநெறி போற்றிக் களிக்கின்றேன்!
யாரும் உறவென யாதுமே ஊரென
ஈந்த தமிழை விளிக்கின்றேன்!
  
6.
நடையில் உயர்ந்துள நாயகன் சீரினை
நாடிட இன்பமே ஓங்கிடுமே!
கொடை மிகுந்த சடையனின் சீரினைக்
கொண்டிடத் துன்பம் நீங்கிடுமே!
  
7.
சிறியன சிந்தியான் செம்மையைச் செப்பிடச்
சிந்தனை ஓங்கிக் கமழ்ந்திடுமே!
பொறிகள் அடங்கிப் பொலிந்திடும் ஆன்மா
புவிமகன் தாள்மேல் அமர்ந்திடுமே!
  
8.
தோள்களைக் கண்டு தொடர்ந்திடும் காட்சியைச்
சொல்லிய பாட்டுக் கிணையேது?
தாள்களைக் கண்டு தழைத்திடும் தாய்த்தமிழ்
தந்திடும் இன்புக் கணையேது?
  
9.
தாயினும் நல்லான் தனிப்புகழ் நற்குகன்
சாற்றிய இன்மொழி காத்திடுவேன்!
வாயில் வனப்பாய் வடித்துளப் பாக்களை
மாண்புறப் பாடியே கூத்திடுவேன்!
  
10.
மானிடம் வென்ற மதுத்தமிழ்க் காவியம்
மாட்சியைச் சூடி வலம்வருவேன்!
தேனிடம் நாடித் திளைத்திடும் வண்டெனத்
தீந்தமிழ் பாடி நலந்தருவேன்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...