கசப்பான திரிபுற்ற பொய்களைப் பூசி
வரலாற்றில் கடைநிலையில்
என்னை நீ எழுதலாம்;
அழுக்குக்குள் தோயும்படி
அழுத்தமாய் மிதிக்கலாம்
என்றாலும் நான் எழுவேன்,
சிறு புழுதியைப் போல!

எனது தோற்றமுனை வருத்துகின்றதா?
வாட்டமுற்று நீ வருந்துவதேன்?
என் வீட்டின் முன்னறை அருகிருந்து
முடுக்கிவிடத் தோதான – பல
எண்ணெய்க் கிணறுகளை
அடையப்பெற்றதுபோல் – நான்
நடப்பதைக் கண்டுதானோ?

நிலவினைப் போல்
பகலவன் போல் –
கடலதன் மேலெழும் அலைகளைப் போல்
கிளர்ந்தே உயர்ந்தெழும்
நம்பிக்கைகளைப் போல்
மேலும் நான் எழுவேனே!

தாழ்த்திய விழியுடன்
தலை கவிழ்ந்திருக்க,
அழுதழுது அரற்றியே
தொய்வுற்ற ஆன்மா,
கண்ணீர்த் துளியென
துவள்கிற தோளுடன்
நொறுங்கிய நிலையில் – எனைக்
காணவோ விழைகிறாய்?

என்னுடைய கொல்லை(ப்புறத்தில்)யில்
பொன்னுடை சுரங்கங்கள்
பெற்றதைப் போல நான்
வாய்விட்டுச் சிரிக்கிறேன்.
என்னுடைய ‘நிமிர்வு’ உன்னுள்
சீற்றத்தை விளைக்குதோ? – கடின
உழைப்பின் பயனென
அதனைக் கொள்ளாயோ?

சுடுமொழி கொண்டு நீ
என்னைச் சுடலாம்|
விழிகள் இரண்டினால்
வெட்டியும் போடலாம்
தீரா வெறுப்பினால்
எனை நீ கொல்லலாம்
ஆனால்,
வீசிடும் காற்றாய் – அதன்
பின்னும் நான் எழுவேனே!

வைரங்கள் கிடைத்ததாய்
கால்களை இணைத்து நான்
நடனத்தில் திளைக்கையில்,
என்னில் எழும் கிளர்ச்சி
உனைத் துன்புறுத்துகிறதோ?
ஒரு புதிராகத் தோன்றியே
வியப்பினில் ஆழ்த்துமோ?

வரலாற்று இழிவென்னும்
குடில்களைத் தாண்டி
நான் எழுவேன்!
வலிகளில் வேரோடிய
கடந்தகாலத் தடமிருந்து
நான் எழுவேன்!

நான் ஒரு கருங்கடல்,
ஆழ்ந்து அகன்றவள்
பொங்கியே ஆர்த்தெழும்
பேரலையானவள்!
பயமெனும் இருள்களைப்
புறந்தள்ளி எழுவேன்!

அற்புதமானதோர்
புலர்காலைப் பொழுதாய்
நான் மீள எழுவேன்!

என் முன்னோர்கள் தந்திட்ட
முதுசொம்கள் சுமந்து
அடிமைகள் சமுதாய
விடுதலையின் கனவாய் – நான்
எழுவேன்,
எழுவேன்,
எழுவேனே!

-மாயா அஞ்சலோ-
தமிழில்: லறீனா அப்துல் ஹக்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...