கண்களில் நூறு கவிதைகள்
கனவுகளை விதையாக்கி
காதலின் இனிமைக்காய்
காலம் கனியட்டும் என்று காத்திருப்பு!
வரன் தேடி வரம் தந்தவர்கள்
வளமான வாழ்வை பரிசளிக்க
உத்தமர் ஒருவனை தேடியே
உயிரின் துணையாக இணைத்தனர்!
மங்கை அவள் ஆனந்தத்தில்
மனிதாபிமானத்தை தேடியவள்
ஏமாற்றத்தில் உழன்றால்
எதிர்பார்ப்புக்களை இழந்தாள்!
இல்லாள் அவள் இல்லத்தை
இயன்றவரை இயக்கி வைத்தாள்
இதயத்தில் வலி சுமந்தாள்
இயந்திரமாய் அவள் சுழன்றாள்!
ஆறுதலை தேடியவள்
ஆதரவு இன்றி தனியானாள்
அடைக்கலம் தந்தவனே
அடிமை விலங்கை பூட்டி விட்டான்!
பெண்ணாக பிறந்ததினால்
பெரும்பாவி எனப்பெயர் எடுத்தாள்
உற்றவர் தேடி தந்த உறவு
உதவாத உறவாக மாறியதே!