பெரியார்


“மற்றவர்கள் திருப்தியிலும் சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதற்கெல்லாம் ‘இது காதல்ல’ ,’அது காதலுக்கு விரோதம்’, ‘அது காம இச்சை’, ‘இது மிருக இச்சை’, ‘இது விபச்சாரம்’ என்பன போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒருவிதப் பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால், அப்படிப்பட்டவர்கள் கூற்றையும், கூறும் காதலையும் சற்றுப் பார்த்துவிடலாம்”

உண்மையாகப் பெண்கள் விடுதலை வேண்டுமானால் ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்பந்தக் கற்பு முறை ஒழிந்து இரு பிறப்பிற்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்படவேண்டும். கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும்.

கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாய வேண்டும்.

கற்புக்காக மனதுள் தோன்றும் உண்மை அன்பை காதலை மறைத்துக் கொண்டு காதலும் அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்ற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்.

எனவே இக் கொடுமைகள் நீங்கின இடத்திலே மாத்திரமே மக்கள் பிரிவில் உண்மைக் கற்பை, இயற்கைக் கற்பை, சுதந்திரக் கற்பை காணலாமே ஒழிய நிர்பந்தங்களாலும் ஒரு பிறப்புக்கொரு நீதியாலும் வலிமை கொண்டவன் வலிமையற்றவனுக்கு எழுதி வைத்த தர்மத்தாலும் ஒருக்காலும் காணமுடியாது என்பதுடன் அடிமைக் கற்பையும் நிர்பந்தக் கற்பையும் காணலாம். அன்றியும் இம்மாதிரியான கொடுமையைவிட வெறுக்கத்தக்கக் காரியம் மனித சமுகத்தில் வேறொன்றும் இருப்பதாக என்னால் சொல்லமுடியாது.

இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரு மனைவியுடனும், ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து அந்தப்படி கட்டாயப்படுத்தப்பட்டும் வருகின்றது.

ஆனால் இந்தப்படி சொல்கிறவர்களை எல்லாம் உலக அனுபவமும், மக்களின் அனுபவ ஞானமும் இல்லாதவர்கள் என்றோ, அல்லது இயற்கையையும் உண்மையையும் அறியாதவர்கள் என்றோ, அல்லது உணமையை அறிந்தும் வேறு ஏதோ காரியத்திற்கு வேண்டி, வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றுதான் கருத வேண்டியிருக்கின்றது.

அன்றியும் இம்மாதிரி விசயங்களைப் பற்றிச் சொல்லும் பொழுது மற்றொரு விஷயம் என்னவென்று சொன்னால், காதலன் காதலியாக வாழ்வது என்ற தன்மையெல்லாம், வேறு ஒருவன் ஜோடி பார்த்து சேர்ப்பதும், பிள்ளைகளைப் பெறுவதற்கும், வீட்டு வாழ்க்கை உதவிக்கென்றும், இயற்கை உணர்ச்சிக்குமான பரிகாரத்திற்காகத்தான் சேர்க்கப்படுகின்ற ஜோடிகளாக இருந்து வருகிறதே தவிர, தாங்களாக, காதல் மிகுதியால், காதல் தெய்வத்தால் கட்டுவித்ததைக் காணுவது அரிதாகத்தானிருக்கின்றதுஇது எப்படியிருந்தாலும் எந்த ஒரு காரணத்திற்காக ஆனாலும், ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம், முதலாகியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ, மற்ற மூன்றாமவர்கள் யாராவது பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது என்றும் சொல்லுகிறோம்.

இன்னும் திறந்து வெளிப்படையாய் தைரியமாய் மனித இயற்கையையும், சுதந்திரத்தையும், சுபாவத்தையும், அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால், இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலிலே சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக்கடையில் பலகாரம் வாங்குவது போலவும், சாமான் வாங்குவது போலவும், அவவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும் இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும் அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகுமென்றும்தான் சொல்ல வேண்டும்.

காதல்காதலானது ஒரு ஆணுக்கொ, பெண்ணுக்கோ எப்படி உண்டாகிறது? இது தானகவே உண்டாகிறதா? அல்லது மூன்றாவது மனிதனுடைய பிரவேசத்தைக் கொண்டு உண்டாகிறதா? ஒருசமயம் தானகவே உண்டாவதாகயிருந்தால், எந்த சந்தர்ப்பத்தில், எந்த ஆதாரத்தின் மீது என்பவைகளைக் கவனித்தால் பெண் ஆணையோ, ஆண் பெண்ணையோ தானே நேரில் பார்ப்பதாலும் அல்லது தான் மூன்றாவது மனிதர்களால் கேள்விப்படுவதாலும் உருவத்தையோ, நடவடிக்கையையோ, யோக்கியதையையோ, வேறு வழியில் பார்க்க கேட்க நேரிடுவதாலுமேதான் உண்டாகக்கூடுமே தவிர இவைகள் அல்லாமல் வேறு வழியாக என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது.

இந்தப்படியும் கூட ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடத்தில் காதல் ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணிடத்தில் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம்.இந்தப்படியே ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடம் காதல் ஏற்பட்டு அந்த ஆணுக்கு அந்தப் பெண்ணிடம் காதல் ஏற்டாமல் போனாலும் போகலாம்.

எப்படியும் ஒரு மனிதன் ஒரு வஸ்துவைப் பார்த்த மாத்திரத்தில், கேட்ட மாத்திரத்தில், தெரிந்த மாத்திரத்தில், அந்த வஸ்து தனக்கு இருக்கலாம், வேண்டும் என்பதாக ஆசைப்படுகிறானோ, ஆவல் கொள்கிறானோ, அது போலத்தான் இந்தக் காதல் என்பதும் ஏற்படுவதாயிருக்கிறதே தவிர வேறு எந்த வழியாலாவது ஏற்படுகிறதா என்பது நமக்குப் புலப்படவில்லை.

எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை, அதாவது தனது இஷ்டத்தை, திருப்தியைக் கோரித்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதுவும் காதலர்கள் மனோபாவத்தைக் கவனித்தால் விளங்காமல் போகாது.

அதாவது அழகைக் கொண்டோ , பருவத்தைக் கொண்டோ , அறிவைக் கொண்டோ , ஆஸ்தியைக் கொண்டோ , கல்வியைக் கொண்டோ , சங்கீதத்தைக் கொண்டோ , சாயலைக் கொண்டோ , பெற்றோர் பெருமையைக் கொண்டோ , தனது போக போக்கியத்திற்குப் பயன்படுவதைக் கொண்டோ அல்லது மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவையான ஒரு காரியத்தையோ, குணத்தையோ கொண்டோ தான் யாரும் எந்தப் பெண்ணிடமும் ஆணிடமும் காதல் கொள்ளும் போது, இவன் அறிந்தது உண்மையாகவும் இருக்கலாம்; அல்லது அங்கு இருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டு இருந்தாலும் இருக்கலாம்; அல்லது வேஷமாத்திரத்தில் காட்டப்பட்ட ஒன்றினால் இருந்தாலும் இருக்கலாம்.

உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா? அல்லது கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா? பார்த்ததும் ஏற்பட்ட காதல் உயர்வானதா? அல்லது சிறிது நாள் பழகியபின் ஏற்படும் காதல் உய்ரவானதா? சரீரத்தைக் கூடச் சரியாய் தெரிந்து கொள்ளாமல் தூர இருந்து பார்ப்பதாலேயே ஏற்படும் காதல் நல்லதா அல்லது சரீரத்தின் நிலை முதலியவை தெரிந்து திருப்தி அடைந்த காதல் நல்லதா என்பனவற்றைக் கவனிக்கும் போது சரீர மாறுபாடாலும் , பொருத்தமின்மையாலும் எப்படிப்பட்ட உண்மைக்காதலும் ஏன் மாற முடியாது என்பதற்கு என்ன விடை பகர முடியும்? அல்லது உண்மையாகவே ஒருவன் ஒருத்தியுடன் காதல் கொண்டுவிட்டால், – ஒருத்தி தப்பாய்- அதாவது வேறு ஒருவனிடம் காதல் கொண்டுவிட்டதாய்க் கருத நேர்ந்தால், அது பொய்யாகவோ மெய்யாகவோ இருந்தாலும், தன் மனதுக்கு சந்தேகப்படும்படி வந்துவிட்டால் அப்போது கூட காதல் மாறாமல் இருந்தால்தான் உண்மைக்காதலா?

அல்லது தன் மனம் சந்தேகப்பட்டால், அதிருப்தி அடைந்தால் நீங்கிவிடக் கூடிய காதல் குற்றமான காதலா என்பத்ற்கு என்ன மறுமொழி பகர முடியும்?

அதுபோலவே மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும், வெறுப்புக் கொள்வதும், பிரிவதும் இயற்கையேயாகும்.பலவீனமாய் இருக்கும் போது ஏமாந்துவிடுவதும், உறுதி ஏற்பட்ட பின்பு தவறுதலைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்வதும், அனுபவ ஞானமில்லாத போது கட்டுப்பட்டுவிடுவதும், அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்வதும் இயற்கையேயல்லவா?

ஆகவே

  • ஆசையை விட, அன்பை விட, நட்பை விட, காதல் என்பதாக ஒன்று இல்லை என்றும்

  • அவ்வன்பு ஆசை, நட்பு ஆகியவை கூட மக்களுக்கு அஃறிணைப் பொருட்களிடத்திலும், மற்ற உயர்திணைப் பொருட்களிடத்திலும் ஏற்படுவது போலத்தானே ஒழிய வேறில்லை என்றும்

  • அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையில் இருந்து, யோக்கியதையிலிருந்து, மனப்பான்மையிலிருந்து, தேவையிலிருந்து, ஆசையிலிருந்து உண்டாவது என்றும்

  • அவ்வறிவும், நடவடிக்கையும், யோக்கியதையும், மனப்பான்மையும், தேவையும், ஆசையும் மாறக்கூடியது என்றும்

  • அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாற வேண்டியதுதான் என்றும், மாறக்கூடியதுதான் என்றும் நாம் கருதுகின்றோம்.

ஆகவே இதிலிருந்து நாம் யரிடமும் அன்பும், ஆசையும், நட்பும் பொருளாகக் கொண்ட காதல் கூடாதென்றோ, அப்படிப்பட்டதில்லை என்றோ சொல்ல வரவில்லை.

ஆனால் அன்பும் ஆசையும் நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும், திருப்திக்குமேயொழிய, மனதிற்குத் திருப்தியும் இன்பமும் இல்லாமல் அன்பும் ஆசையும் நட்பும் இருப்பதாய் காட்டுவதற்காக அல்ல என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே இதை எழுதுகின்றோம். இதுவும் ஏன் எழுத வேண்டியதாயிற்று என்றால் மற்றவர்கள் திருப்தியிலும் சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதற்கெல்லாம் ‘இது காதல்ல’ ‘அது காதலுக்கு விரோதம்’ ‘அது காம இச்சை’ ‘ இது மிருக இச்சை’ ‘இது விபச்சாரம்’ என்பன போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒருவிதப் பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால், அப்படிப்பட்டவர்கள் கூற்றையும், கூறும் காதலையும் சற்றுப் பார்த்துவிடலாம் என்றே இதைப்பற்றி எழுதலானோம்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »