பசுந்தளிர் வனப்புடன்
பரவசம் தந்த அந்த
பச்சை மரத்தவள்
பட்டுப் போய் பாவியாய் நிற்கிறாளே
பரிதாபமாய்
வண்ணமலர்களை அழகாக மலரச் செய்தவள்
வாசம் நேசம் தந்து
வாழ்வும் கொடுத்தவள், இன்று
வாடி வதங்கிய நிலையில்
நின்று, நிமிர்ந்து, நெஞ்சை நிமிர்த்தியவள்
நிலையாமையின் பிடியில்
நிலை தடுமாறி
நிர்க்கதியாய் நிற்கிறாள்
அவள் விதைகளில் உதித்த அவள் செடிகள்
ஆற்றாமையின் வலி தெரியாது
ஆணவத்துடன் கேலி செய்து கூத்தாடுவது
அடடா, இது நியாயமா ?
கருணையில் கனிந்து, கனிகளாய் ஈந்து
கருத்தோடு கவனமாய் காத்திட்டவள்
கவலையோடும் கண்ணீருடனும்
காத்திருக்கிறாள்
பட்ட இடத்தில் தான் படும்
பட்ட மரத்தில் வெட்டுகள் விழும்
பழிகளை சுமந்தபடி விதியையும் நொந்தப்படி
பார்த்திருக்கிறாள்
பசுமையை தொலைத்த
பட்டுப்போன மரமாய்