என்ன முடியாதென்று
சோம்பிக் கிடக்கிறாய்…
எது உன் தடையென்று
மூடிப் படுக்கிறாய்…?
விழி உயர்த்திப்பார்
தெரியும் ஆகாய விளக்கு
தலை குனிந்து நிற்றல்
தமிழ்ப்பெண் வழக்கு…
காலையில் பறக்கிறதே
வெறும்வயிற்றுப் பறவை
மாலையில் பெறுகிறதே
மகிழ்ந்துண்டு நிறைவை…
மழைக்காலம் வருமுன்னர்
சேமிக்கும் எறும்பு
பிழையற்ற எண்ணத்தில்
பழியில்லை விரும்பு…
எட்டி உன் முன்னால்
பொங்குகிற கடலைப்பார்
வெட்டிச் சோறென்னும்
வெறும்பெயரை நீக்கிப்பார்…
பூக்கள் மலராமல்
முடங்கிக் கிடக்கிறதா
காக்கைக் கரைதலிலே
களைத்து இளைக்கிறதா…?
கன்று தாய்ப்பசுவை
முட்டாமல் பாலுண்டா
மண்ணை துளைக்காமல்
காலூன்றும் வேருண்டா…?
புல்லும் கன்றுக்குப்
பொழுதேனும் உணவாகும்
பூங்குருவி ஆனாலும்
பறந்துதான் இரைதேடும்…
உலகின் இயல்பெல்லாம்
உழைப்பின்றி வேறில்லை…
உள்ளத்தில் துணிவிருந்தால்
உயர்வன்றி கீழில்லை…
ஒவ்வொன்றும் ஒருதவம்
ஒவ்வொன்றும் ஒருவரம்
ஏறினால் எழுகையாம்
மீறினால் விழுகையாம்…