மனதிற்குள் ஒருமாபெரும் கேள்வி:

மங்காத ஒளியாக,
அணையாத நெருப்பாக,
களையாத மேகமாக,
ஓயாத அலையாக,
நிற்காத தென்றலாக,
மறையாத சூரியனாக,
தேயாத பிறையாக,
தீராத தாகமாக,
நிறையாத பசியாக,
வாடாத மலராக,
வற்றாத ஆறாக,
வடியாத கடலாக,
கொட்டாத அருவியாக,
குளிராத வசந்தமாக,
சுவாசமில்லாத மூச்சாக,
நேசமில்லாத மனதாக,
உறக்கமில்லாத விழிகளாக ,
விழிப்பில்லாத விடியல்களாக!
இன்னும் இன்னும் ….

படைத்தவனைக் காணவேண்டும்!

ஐந்துவயதில் உள்மனதில் உருவானது!
அவ்வப்போது தலைதூக்கும்,
ஒவ்வொருமுறையும்
வெவ்வேறு கோணங்களில்
ஆராயச் சொல்லும்!

ஓர்நாள் உணர்ந்தேன்
என்னை உருவாக்கியவனை!

என்முதல் பசிக்கு
அமுதம் ஊட்டியவள்,
தாகம் எடுக்கும் முன்பே
தயாராகக் காத்திருக்கும்
அவள்கையில் எனக்கான
ஊற்றுப்பாசனம்!

தன்ஒற்றைவிரலைப்
பிடிக்கக் கொடுத்து,
உலகத்தைக் காட்டியவள்!

கடைசி உருண்டையில்
சத்துள்ளது என்பதை
முதல்வாய்ச் சோற்றில்
கூறி ஏமாற்றியவள்!

தன்விரல்பட்ட ஒவ்வொரு
சோறிலும் சத்துள்ளது என்று
அறியாது ஏமாந்தவள்!

பாதத்தில் சொர்க்கத்தை
வைத்துக் கொண்டு
தலைக்கனமில்லாமல்
நடைபோடுபவள்!

கண்களில் கருணையை
நிரப்பிக்கொண்டு
கர்வமில்லாமல்
உலாவருபவள்!

அக்னிகளைத் தான்
தாங்கிக்கொண்டு
“அம்மா” என்ற ஒற்றை வார்த்தையில்
நிழலாக நிற்பவள்!

கல்லாகிப்போன
பிள்ளைகளைக்கூட
பித்தாகிக் காத்து
நின்ற பெத்தவள்!

ஒவ்வொரு நொடியிலும்
உணருகிறேன்,
பார்க்கிறேன்,
முத்தங்கள் பெற்றிருக்கிறேன்
மடியில் துயின்றிருக்கிறேன்!

அம்மா என்னும் பெயரில்
இறைவனை உணர்த்திய
தாயே!
சேயாக என்னை
இவ்வுலகத்திற்குக் கொண்டுவந்து,
சிறகுகள் கொடுத்து
பறக்கச்செய்த உனக்கு,
என்னநான் செய்துவிடப் போகிறேன்?

எத்தனையோ
எழுதுகிறேன் உனக்காக!
ஏனோ இன்னும்
வெற்றிடமாகத்தான்
உணருகிறேன்!

எல்லாம் சொல்லிக்
கொடுத்தீங்களே அம்மா!
பெத்தக் கடன்தீர்க்க
ஒத்தை வார்த்தை சொல்லிக்கொடுக்க
ஏன் மறந்தீர்கள்?

நன்றிக்கடன் தீர்க்க
நான்என்ன புனிதம்செய்து
நிரப்பிடப் போகிறேன்?

மீண்டும் கேள்விகள் நிறைந்த சேயாக,
நிறையாத வெற்றிடமாக
நிற்கிறேன் அம்மா!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்