படிதாண்டாப் பத்தினியாய் அடுப்புக் குள்ளே
—– பகலிரவும் அடியாளாய்ப் பணிகள் செய்தே
அடிவுதைகள் ஏளனங்கள் பட்ட போதும்
—– அழுகையினைத் துயரத்தை விழுங்கிக் கொண்டு
கடிவாளக் குதிரையாகச் சுமையி ழுத்துக்
—– கல்லெனினும் புல்லெனினும் கணவன் என்றே
படிப்பின்றி இருந்தநிலை மாறிப் போகப்
—– பட்டத்தால் பகுத்தறிவு பெற்றா லின்று !
எண்ணத்தில் வலிமையின்றி இருந்த பெண்ணோ
—– எழுச்சிப்பா பாரதியின் புதுமைப் பெண்ணாய்க்
கண்ணீரைச் சிந்திமூலை அமர்ந்தி ருந்த
—– காட்சிமாற்றி எழுந்திட்டாள் துணிச்ச லோடே
தண்ணீரில் எதிர்த்துநீந்தும் மீனைப் போலத்
—– தரையினிலே அடக்குமுறை எதிர்த்து வென்று
விண்மீதில் பறக்கின்றாள்! விவேகத் தோடு
—– விதைக்கின்றாள் சாதனைகள் துறைகள் தோறும் !
தட்சணையால் முதிர்கன்னி ஆன தெல்லாம்
—– தகர்த்தெறிந்து எதிர்வினாவால் பணிய வைத்தாள்
பட்டுக்கும் பொன்னுக்கும் கையை ஏந்திப்
—– பணிந்தநிலை மாற்றிபணம் ஈட்டு கின்றாள்
கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமை ஏற்றுக்
—– கண்வியக்க அதிகாரம் செலுத்து கின்றாள்
கட்டுடையும் நீர்க்குமிழி போலி ருந்த
—– காலம்போய் உடையாத குமிழி யானாள் !