செந்தமிழின் பேரெழிலைத் தீட்டிடுவார்! நற்கவியால்
முந்தைத் தமிழ்மரபை மூட்டிடுவார்! – சிந்தையெலாம்
விந்தை புரிந்திடுவார்! மேன்மையுறும் பாட்டரசர்
சந்தம் இனிக்கும் தழைத்து!

கம்பன் கவிகாக்கும் காவலர்! போற்றியே
நம்மின் தமிழ்காக்கும் நாவலர்! – செம்பொன்னார்!
அம்மையப்பன் தாள்போற்றும் அன்புடையர்! பாட்டரசர்
உம்பர் உவக்கும் உயிர்!

தொல்காப் பியர்கழகம் தோற்றிய நற்கவிஞர்!
ஒல்காப் புகழ்கண்ட உத்தமர்! – நல்லோர்கள்
செல்வழியே சென்றிடுவார்! செந்தமிழ்ப் பாட்டரசர்
சொல்லென்றும் வெல்லும் சுடர்ந்து!

செந்தமிழர் வாழ்வு செழித்தோங்கும்! சீர்மிகு
செந்தமிழ்க் காப்பியங்கள் செம்மையுறும்! – விந்தையெழில்
நன்மணியாய் மின்னும் வனப்பூறும்! பாட்டரசர்
பன்னூற்கள் கூட்டும் பயன்!

தொன்னூல் மரபியலில் தோய்ந்திட்டார்! நற்றமிழை
நன்னூல் வழியே நவில்கிறார்! – மின்னிடும்
இன்னூல் வடிக்கின்றார்! ஈடிலாப் பாட்டரசர்
பொன்னூல் அளிக்கும் புகழ்!

வண்ணமயில் கூத்தாடும் வான்மழை மண்சேரும்!
எண்ணமெழில் பூத்தாடும்! இன்னமுதாய்ப் – பண்ணூறும்
கண்ணன் கழற்போற்றிக் கண்குளிரும் பாட்டரசர்
மண்ணலம் காப்பார் மகிழ்ந்து!

இலக்கண நல்விருதை ஏற்றவராம்! நன்னூல்
இலக்கியம் வாழ்வியலாய் ஈந்தார்! – நிலைத்திடும்
மண்ணின் மொழிப்போர் மறவராம்! பாட்டரசர்
கண்ணின் ஒளியே கவி!

நற்றமிழ்ப் பாவலராம்! நம்மொழித் தொண்டராம்!
வற்றா வளர்தமிழின் மாகடலாம்! – பற்றுடனே
பொற்றமிழ் தேரோட்டிப் போற்றுகின்ற பாட்டரசர்
கற்றவர் போற்றும் கவி!

பொன்னாளாம்! பூக்கும் புகழ்நாளாம்! எண்ணம்போல்
மின்னும் பிறந்தநாள் மேன்மையுறும்! – அன்பூறும்
முத்தமிழால் வாழ்த்துகின்றேன் முன்னவரை! பாட்டரசர்
எத்திசையும் காண்க எழில்!

சீரோங்கும் வைணவச் செல்வர் குலம்வாழி!
பாரோங்கும் பைந்தமிழ்ப் பா..வாழி! – நீரோடும்
நட்பாலே நன்னெய்தல் நாடன் நலமிசைத்தேன்!
பட்டாகப் பாக்கள் படைத்து!

பாவலர் நெய்தல் நாடன்
01/07/2019


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »