பேரொளி பிறந்தது
காரிருள் மறைந்தது!
பாரெலாம் தீன் ஒளி
பரவிப் பளிச்சிடப்
பூரணமாகி யோர்
புத்தொளி பிறந்தது!
காரணர் முஹம்மத்
எனுமொரு குழந்தை
ஆமினா வயிற்றில்
அழகாய்ப் பிறந்தது!
பாரினில் இந்தப்
பிறப்பிலை யென்றால்…
யாருமே இல்லை!
சூரியன், சந்திரன்
வானம் பூமி…
எதுவுமே இல்லை
எவருமே இல்லை!
பாரினில் ஒரு பகலவ னாக..,
பாலையில் ஒரு நீர்ச் சுனையாக..
அகிலத் திற்கெலாம் அருட் கொடையாக..
வல்ல நாயனின் தூதுவ ராக…
வள்ளல் நபிகளெம் வழிகாட்டி யாக..
மண்ணில் பிறந்தார்
மனிதப் புனிதராய்!
பேரொளி பிறந்து
காரிருள் மறைய..
மாறாதிருந்த நம்பிக்கை களில்
மாற்றம் வந்தது!
சம்பிரதாயம், சடங்குகள்
வணக்கம்..என்று
எங்கும் எதிலும் மாற்றம் வந்தது!
புரட்சி வெடித்தது
புதுமை பூத்தது
அறியாமை இருள்
அகன்று அழிந்தது!
இணைவைத் திருந்த
கொள்கையில் புரட்சி
ஏகத்துவம் அங்கெலாம் மலர்ச்சி!
சாந்தி மார்க்கம்
சமத்துவ தீபம்
ஏந்தி எழுந்தார்
ஏந்தலெம் நபிகள்!
ஏற்றத் தாழ்வுகள்
நிறப் பிரிவினை, பேதம்
போக்க எழுந்தவர்
பூமான் நபிகள்!
சிந்தனைப் புரட்சி
சிலைகள் உடைந்தன
மந்தையாய் இருந்தோர்
மலர்ந்தனர் மனிதராய்!
புத்திகள் கெட்டுப்
போதையில் உழன்றோர்..,
பித்துப் பிடித்து
விரும்பிய படியே
பெண்களைச் சுகித்தோர்..,
பெண் பிள்ளை கிடைத்தால்
வெட்டிப் புதைக்கக்
கட்டி இழுத்தோர்..,
இப்படி –
எத்தனை கொடுமைகள்?
எல்லாம் அகற்றிட
புத்தம் புதியதாய்ப்
போதனை புரிந்து
வெற்றி பெற்றவர்
வேந்த லெம் நபிகள்!
பேரொளி பிறந்தது
காரிருள் மறைந்தது!
மண்ணில் ஒரு புது
வெள்ளி முளைத்தது!
மானுடம் பூத்ததிம் மண்ணிலே!
சமதர்ம போதனை
சகோதரத் துவம்
மலர்ந்து விரிந்தது
மாநபி வரவிலே…..
விதவைகள் வாழ்வில்
விடிவு கிடைத்தது
மறுமை பற்றியோர்
எண்ணம் வந்தது!
அறியாமை உறக்கம்
அகன்று அங்கெலாம்
கல்விக் கண்கள்
விழித்துக் கொண்டன!
இல்லற வாழ்வு
அரசியல், ஆட்சி
எல்லா வற்றிலும்
புதிய சிந்தனை
புதிய கருத்துகள்
புதிய மார்க்கம்!
மனிதப் புனிதர்
மகான் நபி நாதர்
ஒரு
பூரண மனிதராய்
வாழ்ந்து காட்டினார்!
வரலாறு தன்னைப்
புதுப்பித்துக் கொண்டது!
இருபத்து மூன்று ஆண்டுகள்
இதற்குள் –
புதுமை செய்த
ஒரு பெரும் மகானாய்
அருமை நபிகளை
அண்ணாந்து பார்த்தது!