பாடல் – 25
செருக்கினால் வாழுஞ் சிறியவனும் பைத்தகன்ற
அல்குல் விலைபகரும் ஆய்தொடியும் – நல்லவர்க்கு
வைத்த வறப்புறங் கொன்றானும் இம்மூவர்
கைத்துண்ணார் கற்றறிந் தார்.
(இ-ள்.) செருக்கினால் – (பெரியோரை மதியாமல்) இறுமாப்புடன் : வாழும் – வாழ்கின்ற, சிறியவனும் – அறிவில்லாதவனும்; பைத்து – படத்தைப் போன்றதாய், அகன்ற – விசாலமான, அல்குல் – நிதம்பத்தினை, விலைபகரும் – விற்கும், ஆய் தொடியும் – ஆராய்ந்தெடுத்த வளையலணிந்த வேசையும்; நல்லவர்க்கு – துறவறத்தார்க்கு, வைத்த – அமைத்த, அறப்புறம் – அறச்சாலையை, கொன்றானும் – அழித்தவனும்; இ மூவர் – ஆகிய இம் மூவருடைய, கைத்து – பொருளை, உண்ணார் – புசியார், கற்று – (அற நூல்களைப்) படித்து, அறிந்தார் – (அதன் பொருளை உள்ளபடி ) அறிந்தவர்; (எ-று.)
(க-ரை.) மதிக்கத் தக்க பெரியாரை மதிக்காதவன், விலைமாது, நல்லவர் பொருட்டு ஏற்படுத்தப் பெற்ற அறச்சாலையை அழித்தவன் ஆகிய இம் மூவரிடமும் அறிஞர் உணவு கொள்ளல் ஆகாது என்பது.
செருக்கு. மதம், செல்வக் களிப்பு, ஆல் : மூன்றன் உருபு; உடனிகழ்ச்சிப் பொருள். சிறியவன் என்பதில் சிறுமை அறிவின் மேல் நின்றது. கொல்லல் – அழித்தல், “இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு” என்ற திருக்குறள் 1048 இல் கொன்றது என்பதற்கு இன்னாதவற் றைச் செய்தல் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. பைத்து – பையையுடையது. பை – படம். கைத்து – கையிலுள்ளது : ஒன்றன் பாற் படர்க்கை வினையாலணையும் பெயர், கை : பகுதி, த் : சந்தி, து : ஒன்றன்பால் விகுதி. “வஞ்சத்தாற் பல்கின்பங் காட்டும் பரத்தையும்” என்ற பாடங்கொள்வதும் உண்டு.