அஞ்சலி

ஆயுதப்பு ரட்சியெலாம் அன்றும் இன்றும்
      அகிலத்தில் மாற்றங்கள் செய்ய வில்லை,
காகிதப்பு ரட்சியால்தான் கணக்கிலா மாற்றம்
      காண்கின்றோம் கண்கூடாய் குருதி யின்றி,
ஓய்வறியா உழைப்பாளி காகிதம் மனோவோ
      உழைத்தபடி உயிர்விட்டார் என்றால் உண்மை
வாய்ப்பேச தான்முடியும் வாய்ப்போ இல்லை
      வலுவிழந்த உறுப்புகளால் வலிந்து செய்ய.

மரபணுவின் கோளாறால் மாற்றம் வந்து
      மனோபாரதி உடலுக்கோ மருந்து மின்றி
உறவென்றி ருக்கின்ற உறுப்புக ளெல்லாம்
      உணர்வற்றுப் போனதாலே உறக்க மில்லை,
சிரமங்கள் பலவந்து பந்தி வைக்க
      சீக்கிரமே நோயுற்று சிந்தை நொந்தார்,
வரவிருக்கும் நாட்களையெலாம் வாழ்ந்து தீர
      வறுமையுடன் போராடி வாழ லானார்.

ஊனமுற்றார் உடலாலே என்று நாடு
      உணர்த்துகின்ற போதினிலும் மனதில் என்றும்
ஊனமில்லா உழைப்பாளி அவர்போல் யாரும்
      உலகத்தில் இலையென்று சொல்வோம் நாமே!
மானமிகு மனோபாரதி மறைய வில்லை
      மகத்தான நூல்கள்வழி வாழு கின்றார்,
கானக்குயில் பாட்டாக அவரின் வாக்கு
      காற்றோடு கலந்தபடி மூச்சால் பேசும்.

மாதங்கள் மூன்றினிலே மகிழத் தக்க
      மகத்தான இருநூறு புத்த கங்கள்,
தோதாக முடித்துவிட்டு துயிலும் நீந்து
      துணையான நட்புக்குத் துயரம் ஈந்தார்,
சேதாரம் அவருடலில் சிரமம் தந்தும்
      சிறிதளவும் காட்டாது சினமும் கொள்ளார்,
ஆதாரம் இவர்வாழ்வை அகிலம் ஏற்கும்
      அன்பர்நாம் கரங்குவிப்போம் நூலாய் வாழ்க!


2 Comments

செல்வகுமாரி · செப்டம்பர் 27, 2017 at 3 h 41 min

மனசு கனக்கிறது…

N.G.Retnam · அக்டோபர் 2, 2017 at 5 h 15 min

மனோவின் இழப்பு வுளரும் தமிழ் எழுத்தாளர்களுக்கு பேரிளப்பாகும். அவரைப் போல் ஒருவர் மீண்டும் பிறப்பது அரிது.
தமிழ் உள்ளவரை அவர் பெயர் வாழும்….!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...