நாளைக்கு எக்கொனொமிக்ஸ் எக்ஸாம் எனக்கு, லைபிரரில புத்தகத்தோட சண்டை போட்டுக்கொண்டிருந்தன். எப்பவும் கடைசி நேரத்தில கஸ்டப்பட்டுகொண்டு நிற்கிறதுதான் என்டபழக்கம். இந்தபழக்கத்தை மாத்தணும் எண்டு விருப்பம்.. பல நாள் முயன்றும் முடியாமை.. இப்போது முயற்சியே செய்வதில்லை. தோல்விகளை சந்திக்க விருப்பம் இல்லை… அதுதான் என்ட வழமையான பழக்கங்களை மாத்த முயற்சிக்கிறதும் இல்லை.

என்னை போலவே ஒரு ஆள் முன்னால புக்கோட சண்டைபோட்டுகொண்டிருந்ததை பார்த்தன். எங்கேயோ பார்த்த கைகள் அவை.. முன்னால புக்கஸ்ட் இருந்தபடியால் முகம் தெரியல… ஆர்வக்கோளாறு எனக்கு… ஏன் வீணா கஸ்டப்படுவான். எழும்பி மேலால பார்த்தன்.

ம்ம்ம்.. மன்னிக்கவேணும். இந்த இடத்தில ஒரு சின்ன பிளாஸ் பாக். நாலு வருசத்துக்கு முன்னால முதல் நாள் எக்கொனிமிக்ஸ் கிளாஸ்லதடுமாறிய… தடுமாறவைத்த ஒரு பெண் தான் இப்ப முன்னால இருக்கிறது. வகுப்பில வாத்தி நித்திரை வர வைச்சதால… நோட்ஸை எடுத்து படிப்பம் வகுப்பு வேணாம் எண்டு அண்டே முடிவு பண்ணிட்டன். ஆனால் சில நேரங்கள்ல எண்ட முடிவை மறந்திட்டு கிளாஸுக்கு போய் இருக்கன். இந்தா…. இப்ப முன்னாடி இருக்காங்களே இவங்களை தரிசனம் பண்ணத்தான். முதல் நாள் கிடைச்ச அந்த பார்வை மனசில வந்தால் அன்னிக்கு நான் எக்கொனொமிக்ஸ் கிளாஸுக்கு போவன். ஆனால் நான் போன ஒரு சில நாட்களில் இவங்க வரல… எனக்கு ஏமாற்றம் தான் கிடைச்சுது. என்னைப் போலவே இவங்களும் கிளாஸுக்கு வந்து ஏமாந்திருப்பாங்களோ என்னவோ.. எனக்கு சொல்ல தெரியல… அவங்களும் என்னைப்போலவே அதே ஆர்வக்கோளாறில… என்னைபார்க்கணும் என்று வந்து ஏமாந்து பிறகு வரமாவிட்டாங்களோ என்னவோ… எனக்கு சொல்ல தெரியல.. மொத்ததில சொன்னால் அந்த முதல் நாள் கண் சந்திப்பில மனசில பதிந்த முகம்… அடிக்கடி பார்க்க தோன்றிய ஆனால் பார்க்கமுடியாத முகம் அது.

இதே மாதிரி போரட்டாம் அவங்களுக்குள்ளையும் இருக்குமோ என்று நினைத்ததுண்டு. கால ஓட்டம்… வெறு வேலைகளில் பிஸியாகிட்டன்..இதையும் மறந்திட்டன்.

ஆனால் அண்மைல ஒரு பாட்டில கண்டனான்… முதல் நாள் பார்வை அப்படியே இருந்தது. ஆனால் வேறு யார்கூடவோ இருந்தபடியால் நானும் போய் கதைக்கல…

ஓக்கேங்க பிளாஸ் பாக் முடிஞ்சுது. இப்ப மீண்டும் லைபிரரி…

எப்படியாவது போய் கதைக்கலாமா என்று மனம் சொல்லிச்சுது. என்னை மாதிரியே இவங்களுக்கும் என்கூட கதைப்பதில் ஒரு பிடிப்புஇருக்குமோ? ஹும்ம்ம்.. எனக்கு தெரியல.. ஆனால் அன்னிக்கு பாட்டில பார்த்ததை நினைவுபடுத்தியபோது… கட்டாயம் இவங்களுக்கும் இருக்கும் என்று எண்ண தோன்றியது. சரி இனி புக்கில கண்போகாதே…. சரி நினைச்சதை செய்து முடிக்கலாம் என்று நினைச்சிட்டு தற்செயலா போவது போல போய்.. தற்செயலா பார்த்து ஆச்சரியப்பட்டது போல றாமா பண்ணினன். பரிசா ஒரு புன்னகை கிடைச்சுது… அதையே வைச்சுக்கொண்டு அருகே போனன்..

” எப்படி இருக்கிறிங்க?” என்று கேட்டன்.
“ம்ம்ம் நல்லா இருக்கன்.. நீங்க எப்படி? என்னை நினைவிருக்கா?”என்று பதில் வந்திச்சு.

ஆகா….. முதல்ல நடந்த மனப்போரட்டத்துக்கு விடை கிடைச்சுது…. இவங்களும் என்னை நினைச்சிருக்காங்க..

“மறக்க முடியுமா….” எண்டு சும்மா மேலால விட்டன்..

அப்படியே கதை தொடர இடையில மறிச்சு….
“ஒண்னு தெரியுமா இது லைபிரரி இங்கே கதைக்க கூடாது” என்றாள்.

எனக்கு கொஞ்சம் சப்பென்று இருந்தது. இருப்பினும் அதையே சாக்க வைச்சு “ம்ம்ம்… தெரியும்… அப்ப கோப்பி ஸொப் போகலாமா? ” என்று கதை விட்டேன்.

பதில் ஒன்னுமே தரல …. பரீட்சைக்கு படிப்பவள் ஆச்சே.. என்னை போலவா என்று நினைத்து விட்டு..

“நாளைக்காவது போகலாமா?” என்று கேட்டேன்.

ம்ம்.. பதில் இல்லவே இல்லை..என்ன நினைக்கிறாள் என்று அறியமுடியவில்லை… அதிகமாக ஏதோ கேட்டுவிட்டோமோ என்றுஇருந்தது…. சப்புக்கு மேல் சப்பென்று ஆகிவிட்டது எனக்கு.

ம்ம்… சரி இனி எப்படியாவது சமாளித்தாக வேணுமே….
“நாளைக்கு இல்லா விட்டால்.. புதன்?? வியாழன்?? வெள்ளி?? எப்போ போகலாம்? ” சற்று கொமடி செய்வது போல் சமாளித்தேன்.

இப்போதும் பதில் இல்லை… புத்தகத்தை நோக்கி குனிந்தாள்… போகலாமா என்று நினைத்தவேளை..
” NOW ” என்று எழுதிவிட்டு மேலே பார்த்தாள்.

ம்ம்ம்.. எதிர் பார்க்காத பதில் தான்…. இருப்பினும்
” நாளைக்கு எக்ஸாம் ஆச்சே” என்று முக கூறியால் சொல்ல முற்பட்டவேளை…

“இன்று விட்டால் வேறு சந்தர்ப்பம் இல்லை…. நாளை எக்ஸாம் முடிந்ததும் நான் வீட்டுக்கு போகிறேன்” என்றாள்.

ம்ம்ம்….. “சரி போகலாமே…..” என்று விருப்பமில்லாதவன்.. படிப்பில் அக்கறை உள்ளவன்.. ஆனால் நீங்க கேட்டதுக்காக என்ற மாதிரி முகத்தில ஒரு அக்ஸனை வரவச்சன்.

வெளில ஒரே மழை.. இங்க தானே பகலா இரவா என்று தெரியாத அளவுக்கு காலநிலை இருக்கும். கொப்பி ஸொப்பை நோக்கி நடந்தம்…

*******************

மறுநாள் காலை… நான் எழும்ப லேட்டாகிட்டுது… எலாரம் அடிச்சது எனக்கு கேட்கல… அப்படி நல்ல நித்திரை. நேற்று மழைல நனைஞ்சது தலை ஓரமா இடிச்சுது. இனிக்கு எக்கொனொமிக்ஸ் எக்ஸாம் ஆச்சே… அப்படி ஒரு நினைப்பே இல்லாமல் எழும்புற மாதிரி இருந்தது. நோர்மலா என்றால் எக்ஸாம் டைம்ல எனக்கு எலாரம் அடிக்கு முதலே நித்திரை போய்விடும். ஆனால் இனிக்கு அப்படி இருக்கல…

கிடைச்சதை சாப்பிட்டுவிட்டு.. கிடைச்சதை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பினேன்.. மனசுக்குள்ள ஒரு பட்டாம் பூச்சிங்க.. அது தான்.. செட்டைல வேற வேற கலர் எல்லாம் இருக்குமே அது தான்… பறந்திட்டே இருந்திச்சு… எல்லாம் நேற்றையான் நினைவால தான்.

அவசரமா போய் எக்ஸாம் ஃகோலுக்கை போனன். என்ட இடம் மட்டும் தான் காலி.. மற்ற எல்லோரும் ஆயத்தமா உக்காந்து இருந்தாங்க.. பேப்பர் குடுக்க ஆரம்பிச்சாச்சு… ஓரமா உக்காந்திருந்த அவளுக்கு கண்ணால ஒரு வணக்கம் வைச்சிட்டு எக்ஸாம் எழுத ஆரம்பிச்சன்.

எக்ஸாம் எல்லாம் எதோ எழுதினன்…. எக்ஸாம் முடிஞ்சு வெளில வந்தன்… வாசலுக்கு பக்கத்தில அந்த பொண்ணு நின்னிட்டு இருந்தா..நான் வர ஒரு சிரிப்போட

“எப்படி எக்ஸாம்… நல்லா செய்திங்களா??” என்று கேட்டாள்…
“ஆமாங்க… நைட் படிச்சது எல்லாமே எழுதினன்” எண்டு கிண்டலா சொன்னன்.
அப்படியே கதை தொடர்ந்தது….. இடைல மறிச்சு..
“வாங்க இனிக்கும் கோப்பி சாப்பிட்டுகிட்டே பேசலாம்” என்று கேட்டன்.
” இனிக்குமா??” என்று சிரிச்சிட்டே கேட்டாள்.
“இல்லீங்க இது கோப்பி ஸொப் ” அப்படி சொல்லிட்டு கோப்பி ஸொப்ல போய் உக்காந்தம்.

தனது பழைய ஹைஸ்கூல் கதைல இருந்து… குடும்ப கதைல இருந்து எல்லாமே சொன்னாள். டைம் போனதே தெரியல.. ரொம்ப ரொம்பஅலட்டினாள்.. ஆனால் எனக்கு அலட்டுற மாதிரி தெரியல… அவள்ட கதையை விட அவள் கதை சொல்லுற விதத்தை ரசிச்சிட்டு இருந்தன்.. மனசுக்குள்ள மறுபடியும் அதே பட்டாம்பூச்சிங்க… பதிலுக்கு நானும் எண்ட கதைகள்ல கொஞ்சத்தை திருப்பி விட்டன். அப்படியே டைம் போட்டுது.

எனக்கு இன்னும் ஒரு எக்ஸாம் இருக்கு… எண்டு நினைவு படுத்தினன். இருந்து கதைக்கலாம் போல இருந்தது.. ஆனால் எக்ஸாம் ஆச்சே மிஸ் பண்ணமுடியுமா??

” சொரிங்க.. நான் போகணும் எக்ஸாம் இருக்கு” டைம் நெருங்கிட்டதால எழும்பி நின்னுகிட்டே கதைச்சன்..
” உங்க வீடு எங்கே?? ஹொலிடே க்கு என்ன செய்ய போறிங்க??”என்று கேட்டாள்.

‘இனிக்கு எக்ஸாம் முடிய 1வீக் இங்க தான் நின்னு ஏதாவது இன்ஜோய் பண்ணணும்.. அப்புறமா வீட்டை போறேன்… அங்கே போய் என்னசெய்கிறது என்று இதுவரை பிளான் இல்லை..’ அப்படி என்று எண்ட வீடு இருக்கிற இடத்தையும் சொன்னன்.

தானும் இருக்கிறது அதே சிட்டி தான் என்று சொன்னாள்….

‘ இனிக்கு நைட் வீட்டை வருவேன் எண்டு வீட்டை போன் பண்ணி சொல்லிட்டன்’ எண்டு சொன்னாள்… அதை எதோ சோகமா சொல்லுற மாதிரி எனக்குப்பட்டுது. அப்படி வீட்டை சொல்லாவிட்டால் நிண்டுவிடுவேன் என்று சொல்லுற மாதிரி இருந்திச்சு…எதோ சொல்லாமல் எனக்கு சொல்லுற மாதிரிப்பட்டுது….

‘ நாளைக்கு சேர்ந்தே விட்டை போகலாமே.. நில்லுங்களேன்’ என்று கேட்கலாம் போல இருந்தது.

ஆனால் கேட்டு பதில் எப்படி வருமோ என்று நினைச்சிட்டு கேட்கல…. முதலும் நான் தானே கேட்டேன்.. இம்முறை அவள் கேட்டால் என்னஎன்று கேட்கல…. அவளும் என்ன நினைக்கிறாள் என்று புரிய முடியல…. எக்ஸாமுக்கும் நேரம் நெருங்கீட்டு இருந்ததால

” ஹாவ் நைஸ் ஹொலிடே” எண்டு சொல்லிட்டு கையை குடுத்தன்..

ஏதும் எதிர் பார்ப்பதை சொல்லுவாளோ என்று பார்த்தன்….. ஹூம்ம்ம்… அப்படி ஒன்றையும் காணல.. எக்ஸாம் டைம் வந்திட்டதால அவசரமா விடை பெற்றுக்கொண்டு எக்ஸாம் போய் விட்டன்.

எக்ஸாம் முடிஞ்சு வந்து அங்க இங்க பார்த்தன்.. ஆள் நிற்குதா எண்டு.. லைபிரரி.. கோப்பி ஸொப்லயும் போய் பார்த்தன் காணவே இல்லை..

‘ இந்த இயர் தான் எனக்கு கடைசி’ என்று அவள் சொன்னது நினைவுக்கு வந்திச்சு.. ம்ம்ம்ம்…. இப்ப பெருசா பட்டாம் பூச்சி ஒன்னும்பறக்கல…

வீட்டை பெல் பண்ணினன்… ‘எனக்கு 1வீக் இங்க நிற்க இப்ப பிடிக்கல… இனிக்கு நைட் வீட்டை வாறேன்’ என்று சொன்னன்.. பஸ்ஸ்டேசனுக்கு போய் பஸ்டைம் பார்த்தன்… அப்பதான் ஒரு பஸ் போயிருந்தது.. இதில தான் இவள் போய் இருப்பாள் என்று நினைச்சிட்டு அடுத்த பஸ்டைம்மை பார்திட்டு, ரூம் போனன் அவசரம் அவசரமா எல்லாம் பாக் பண்ணினன்…

லெட்டர் பொக்ஸ் பார்த்தப்ப ஒரு லெட்டர் இருந்தது.. எதிர்பாராத லெட்டர் அது….அவள்ட லெட்டர் தான்..

‘ 1 வீக்கால வீட்டுக்கு வந்ததும் பெல் பண்ணுங்க” எண்டு டெலிபோன் நம்பரும் இருந்தது.

ஆகா… இப்ப வீட்டை போக எனக்கு இன்னும் உற்சகாமா இருந்தது… பாக்கை எடுத்திட்டு கிளம்பினேன்… ஒன்னு சொல்லி அடிக்கடிஅறுக்கிறேன் என்று நினைக்காதேங்க…

இப்ப மறுபடியும் பட்டாம்பூச்சிங்க……


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..