வண்டுகடி பூ நிற
மதிப்பெண் அட்டை நீட்டி
” கையெழுத்து வாங்கிட்டு
வரச்சொன்னாங்க சாரு ”
அழுக்குடன் வெய்யிலில் கிடந்ததால்
மடமடத்து நிற்கும்
பாவாடை கசக்கி நிற்பேன்.

“எதுக்குத்தா .. இதுல என்ன போட்டிருக்காக? ”

“நான் எவ்வளவு மார்க் வாங்கியிருக்கேன்னு
போட்டிருக்காங்க ”

“ஆமா .. அதாம் நமக்குப் படியளக்கப் போவுது..
கோட்டையில பொண்ணுபொறந்தாலும்
போட்ட புள்ளி தப்பாதுனு
எங்கிட்டுப் போயி இழுபடப் போவுதோ ..
அங்கிட்டு வீசிட்டு
ஆவுற சோலியப் பாப்பியளா ”
கொல்லையிலிருந்து
முள் நறுக்கிக்கொண்டு
கத்தும் அம்மா

” நீ கையெழுத்துப் போட்டா நேரமாயிரும்
மை தடவுறேன் … ரேக வையுப்பா ”

” நான் என்ன கையெழுத்துப் போடத் தெரியாதவனா ?
கையெழுத்துப் போட்டுத்தான் ஓட்டுகூட போட்டேன் ”
பேனா பதிப்பார், கலப்பை போல் அழுத்தி…

அட்டை கிழிந்து அடி வாங்கும் பயத்தில்
துடிக்கும் மனசு

உச்சி வெயிலில் ” பட்” டென வெடிக்கும்
உளுத்தம் நெத்தாய்
“சடக்” கென முகம் நிமிர்த்தி
சந்தேகம் கேட்பார்

” வழிவிட்டான் மவன் சன்னாசின்னுதானத்தா
போடணும் ? ”

” வ போட்டு புள்ளி வச்சு
ஒம் பேர எழுதுப்பா நேரமாவுது ”

” அந்த சிலேட்டுப் பலகையை எடுத்து
எம்பேர எழுதுத்தா
பாத்து பாத்து வெரசா எழுதிர்றேன் ”
மாடொன்றைத்
தவறவிட்டு வந்து
பண்ணையார் முன் நிற்கும்
மேய்ப்பவராய்த்
தாழும் அவர் குரல்

” இதுக்குத் தான் அப்பவே சொன்னேன்
ரேகை வையுன்னு ”

எழுதி வைக்கும் பெயரைப்
பாத்து பாத்து எழுதிக் கொண்டிருக்கும் போது
போதாமல் போய்விடும் இடம்

” அடுத்த கோட்டுல மடிச்சி எழுதவா ”

அழுகை வந்துவிடும் எனக்கு
” அடுத்த பரிச்சைக்கித்தான்
அங்க எழுதணும் ”
அட்டையைப் பறித்துக் கொண்டு
அவர் பெயரில் குறையும்
ஓரெழுத்தையோ .. ரெண்டெழுத்தையோ
மதகில் அமர்ந்து நானே எழுதி
“போன தடவை மாதிரி
எல்லார்கிட்டயும் காட்டி
சொல்லிச் சிரிக்காம இருக்கணுமே
சுப்ரமணிய சாரு ”
கவலையோடு நுழைவேன் வகுப்பிற்குள்

o


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...