மனிதனை நினைத்தால்
எல்லா உயிர்களும்
மலைத்து நிற்கும்!
பிறர் குறைகளைச்
சுட்டிக் காட்டுவதில்
வேறு எந்த உயிர்களும்
அவனை வென்றதாக
வரலாறு கிடையாது
என்பதால்!
அவன்
தன் பிழைகளை
என்றுமே
ஏற்றுக் கொண்டதில்லை!
இவன் கோபங்கொள்வான்
ஆனால்
ஏண்டா பாம்பு போல
சீறுகிறாய் என்று மற்றவரைப் பார்த்துச்
சொல்வான்!
அடிக்கடி
குணம் மாறுவான்
ஆனால் ஏன்தான் இந்தக்
குரங்கு சேட்டையோ என்பான்!
இவன் ஏமாற்றிப் பிழைப்பான்
தந்திரங்கள் செய்வான்!
ஆனால் அட குள்ளநரியே
என்று பிறரை அழைப்பான்!
தன் தவறுகளை
என்றுமே
ஒப்புக்கொள்ள மறுக்கும்
மனிதன்
இறைவனின் படைப்பில்
தனித்துவம் மிக்கவனாமே?
இந்த மனிதனா
இறைவனின் சாயலில்
படைக்கப்பட்டவன்?
மனிதனை
எந்த உயிர்களாலும்
புரிந்துகொள்ளவே
முடிவதில்லை!