தொடர் 5

எதுகையை கடந்த பகுதிகளில் பார்த்தோம்

எதுகை இருந்தால் மோனையும் கட்டாயம் அந்த இடத்தில் வரும். மரபு என்றாலே எதுகை மோனை பார்ப்பார்கள் என்பார்கள் கிராமத்து வழக்கில் “எகனை மொகனை” என்பார்கள்.

எதுகை என்பது காதணி எனலாம். காதணிகளில் பலவகைகள் உண்டு; தோடு, கம்மல், ஜிமிக்கி, மேல்தோடு, வளையம் என பலவகைகள் உள்ளன போல எதுகைகளில் பலவகைகளைக் கண்டோம்.

இப்போது மோனை மூக்கில் அணியும் அணிகலன்கள் போல. முக்குத்தி புல்லாக்கு என்று இதுவும் பலவகைப் படுவது போல மோனையிலும் எட்டு வகைகள் உண்டு.

மோனை

மோனை என்பது முதல் எழுத்து ஒன்றி வருவதே ஆகும்.

ஒரு எழுத்து அதே எழுத்தாலோ அல்லது அதே ஒலி தரும் இனவெழுத்தாலோ ஒன்று வர வேண்டும்

எடுத்துக்காட்டு

அ, ஆ, யா, அவ், ஐ

இ, ஈ, எ, ஏ

உ, ஊ, ஒ ஓ

இவை ஒன்றுக்கொன்று மோனைகள் ஆகும்.

அவையாவன.

  1. அடிமோனை
  2. இணைமோனை
  3. பொழிப்பு மோனை
  4. ஒருஉ மோனை
  5. கூழை மோனை
  6. மேற்கதுவாய் மோனை
  7. கீழ்க்கதுவாய் மோனை மற்றும்
  8. முற்று மோனை

1. அடிமோனை

நீங்கள் இது பெரும்பாலும் கவிதைகளில் குறிப்பாக விருத்தங்களில் அடுத்தடுத்த இரண்டு அடிகளுக்குப் பயன்படும். நான்கு அடிகளிலும் வந்தால் சிறப்பு. அடிதோறும் முதல்எழுத்து ஒன்றிவரின் அடி மோனை எனப்படும்.

எடுத்துக்காட்டு

அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
அப்பா இங்கே வா வா
அன்பை அள்ளித் தா தா

இங்கே 4 அடிகளிலும் அ மற்றும் ஆ எழுத்துகளே வந்துள்ளன. இதுவே அடி மோனை யாகும்.

2. இணை மோனை

இது ஒரு அடியில் அடுத்தடுத்த சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது இணை மோனை ஆகும்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

இக்குறளில்

அன்பும் அறனும்
பண்பும் பயனும்

சீர்களில் முறையே அ மற்றும் ப என்ற எழுத்து மோனையாக வந்துள்ளது

3. பொழிப்பு மோனை

இது பெரும்பாலும் எல்லோரும் பின்பற்றுவது. வெண்பாவில் வலியுறுத்தப் படும். இது முதல் மற்றும் 3 ஆம் சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வரும்.

எடுத்துக்காட்டு

வண்ணத் தமிழ்மகளை வணங்குவோம் எந்நாளும்
எண்ணம் சிறந்துநமக்(கு) எல்லாமும் கைகூடும்

இப்பாட்டில் வ மற்றும் எ என்ற மோனை பொழிப்பு மோனையாக வந்துள்ளதைக் காண்க.

மற்ற மோனைகளை அடுத்து காண்போம்>