ஒவ்வொரு நாளிரவும்.. விஜி குழந்தைக்கு கதை சொல்வது வழக்கம்.. அதில் சொந்தக் கதை.. சோகக் கதையும் இருக்கும்..
அப்படியொருநாள்.. விஜி தனது ஆறுமாத குழந்தையிடம் கதை சொல்லிக்கொண்டிருந்தாள்.. குழந்தையும் குஷியாக காலக் கைய ஆட்டி.. தரையை காலால் உதைத்து.. கால் தண்டையின் பரல்கள் சத்தமிட.. பொக்கைவாயைக் காட்டி சிரித்துக் கொண்டிருந்தது.. அம்மாவிடம்.. ம்.. ம்.. சொல்லி கதை கேட்டுக் கொண்டிருந்தது..
இந்த வர்ணனைகளை நான் எழுதுவதற்குள்.. கதை விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்தது.. “எங்கம்மா.. அதான் உன் பாட்டி எனக்கு கல்யாணச் சீர்வரிசையில் அழகான வெள்ளித்தட்டு ஒன்றைக் தந்திருந்தாங்க.. அந்த தட்டோட கதை சொல்லவா..?!
தீபாவளிக்கு தீபாவளி தவறாமல் அந்த தட்டு..இந்திப் படிக்கப் போகும்.. யார் கிட்ட.. சொல்லு பார்ப்போம்..
அடகுக் கடை சேட்டு கிட்ட.. ஒவ்வொரு முறையும்.. சேட்டு தட்டின் பின்னாடிப் போட்ட சாக்பீஸ் கோடுகள் இன்னமும் ராமர் அணில் முதுகில் போட்ட வரிகளாய்.. இறந்த கால வாழ்க்கையின் அழிக்க முடியாத சுவடுகளாய் இருக்கு.. தெரியுமா.. என்று சொல்லி பெருமூச்சுடன் நிறுத்தினாள்…
குட்டிப் பாப்பா ரத்னா.. ம்ம்.. ம்ம்.. அம்மாவ பார்த்து கேவ.. கதை கேட்கணுமா செல்லக் குட்டிக்கு.. .. சொல்றேன் கேளு..
ஆனா கடைசி வரை எங்க அப்பா..அதான் உங்க தாத்தா தட்டை மூழ்க விடலயே.. வெளிர் சிவப்புக் நிறத்தில் ஏல ரசீது எல்லா வருசமும் வரும்.. வந்தவுடனே கடைசி நேரத்திலயாவது தாத்தா ஓடிப் போய் வட்டியவாது கட்டி விடுவார்.. அசல் மீண்டும் குட்டிப்போடும்.. பத்து வெள்ளித் தட்டுகளின் விலை கொடுத்தாலும்.. பாட்டி மனசு வருத்தப்படக் கூடாதுன்னு தாய் வீட்டு சீதனத்தை அ(டை) டகு காத்து..(குட்டிப் போட்ட வட்டி) குஞ்சு பொறிக்க வைத்த தாயுமானவர்..அப்பா..” யென நிறுத்தினாள்..
அதற்கு மேல் விஜிக்கு வார்த்தை வரலை..அழத் தொடங்கியிருந்தாள்..
அம்மா அழுவதைப் பார்த்து.. குழந்தையும் அழத் தொடங்கியது… சிறிது நேரத்தில் இருவரும் உறங்கி விட்டனர்..
சரி.. கதாசிரியரா கடைசி வரிகள நானே எழுதிடறேன்.. விஜியின் தந்தை மகளை மட்டும் தாரை வார்க்க வில்லை.. தங்க மகளுக்காக வெள்ளித் தட்டையும் தாரை வார்த்து விட்டார்.. (பரிசளித்தார்.) .
