“என்னங்க இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கும் இல்ல உங்க அம்மா இருக்கணும் யாருனு நீங்களே முடிவு பண்ணிக்கங்க”

“என்ன மகா என்ன பண்ணுச்சி அந்த கிழவி… நீ ஏன் டென்சனாகுற… ”

” எனக்கு பிடிக்கல அவ்வளோதான்… சீக்கிரம் நானா அவங்களானு முடிவெடுங்க… ”

” நான் இதுக்கொரு முடிவு கட்றேன்… நீ கிளம்பு செல்லம் நாம சினிமாவுக்கு போய்ட்டு அப்படியே ஒரு நல்ல ஓட்டலுக்கு போய் நைட் டின்னர் சாப்பிட்டு வந்துடலாம் “என்று அவளை அணைத்தாவாறே சொன்னான் மகேஷ்!

***

மறுநாள் காலை…

” அம்மா நீ சீக்கிரம் கிளம்புமா ”

” எங்கடா மகேஷ்??? ”

” உன்ன ஹோம்ல சேர்த்துடுறேன் மா… அங்க உனக்கு எல்லா வசதியும் கிடைக்கும்… உன்னபோல நிறைய பேர் இருப்பாங்க அவங்க கூட நீ சந்தோசமா இருக்கலாம் மா… ”

” மகேஷ் எனக்கு இங்க என் பேரக்குழந்தைங்க கூட இருக்கறதுதான்டா சந்தோசம்… உங்கப்பா சாகும்போது உனக்கு வயசு எட்டு.. உன்ன வளர்க்க நான் பட்ட கஷ்டம் சொல்லி புரியாது… எல்லா கஷ்டமும் தீர்ந்து இப்போதான் நான் பேரக்குழந்தைங்க கூட கொஞ்சம் சந்தோசமா இருக்கேன்டா… என் கடைசி காலத்த இங்கயே கழிச்சிட்டு போயிடுறேன்டா… ”

” உன்ன இப்போ விலக்கம்லாம் கேக்கல நான் உயிர வாங்காம கிளம்பு “என்று கொஞ்சம் அதட்டல் தோனியில் மகேஷ் சொல்ல கலங்கி நின்றாள் மரகதம்!

***

இரண்டு மாதங்கள் உருண்டோடின…

மகேசும் மகாவும் கடைத்தெருவுக்கு சென்று திரும்பும் வேளையில்… எதிரே வந்த லாரி மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட மகேஷ் சிறு காயத்துடன் தப்பியிருந்தான்…

மகாவிற்கு பலத்த அடிபட்டு சுகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்!

***

“டாக்டர் என் மனைவி எப்படியிருக்காங்க டாக்டர்… ”

Icu வில் இருந்து வெளியேறிய டாக்டரிடம் அழுகுரலில் கேட்டான் மகேஷ்!

” உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல…ஆக்ஸிடன்ட்ல சிதறின சில கண்ணாடி துண்டுகள் அவங்க விழித்திரைய பலமா கிழிச்சிருக்கு… அவங்களுக்கு பார்வை வர வாய்ப்பில்லை… ”

” அய்யோ டாக்டர் மகாவுக்கு கண்பார்வை கிடைக்க ஒண்ணுமே பண்ண முடியாதா? ”

” ஒரு வழியிருக்கு இறந்தவங்க யாரோட கண்ணையாவது அவங்களுக்கு உடனே பொருத்தினா பார்வை கிடைக்க வாய்ப்பிருக்கு… நாங்க ஐ பேங்க்ல சொல்லியிருக்கோம் நீங்களும் உங்க சைட்ல ட்ரை பண்ணுங்க… ” என்று சொல்லி நடந்த டாக்டரை கலங்கும் கண்களோடு பார்த்து கொண்டிருந்த மகேசின் சொல்போன் சிணுங்கியது!

மரகதம் இருக்கும் ஹோம் நம்பர் திரையில் வர… ‘நானே கடுப்புல இருக்கேன் இந்த கிழவி வேற பேரனை பார்க்கணும் பேசனும்னு உயிர வாங்குது சே சனியன கை கருவி விட்டாலும் நம்மள விடாது போல’ என்று முணுமுணுத்துக்கொண்டே மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்தான் மகேஷ்!

***

ஒரு மணிநேரம் கழித்து டாக்டர் வேகமாய் மகேஷிடம் வந்து…

“மகேஷ் யூ ஆர் சோ லக்கி… உங்க மனைவிக்கு கண் கிடைச்சிடுச்சி… இப்போவே ஆபரேஷன் செஞ்சிடலாம்… நீங்க நர்ஸ்கிட்ட கேட்டு பார்மாலிட்டிஸ்லாம் முடிச்சிடுங்க ”

” ரொம்ப நன்றி டாக்டர்… ரொம்ப நன்றி ” டாக்டரின் கைகளை பிடித்து கண்ணீர் விட்டான் மகேஷ்!

***

மூன்று மணிநேரம் கழித்து ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்தார் டாக்டர்…

” டாக்டர் என் மனைவி எப்படியிருக்காங்க ”

” ஆபரேஷன் நல்லபடியா முடிந்தது மகேஷ்… இன்னும் ஏழுநாள் கழித்து கட்டு பிரிச்சிடலாம்… அவங்க மயக்கம் தெளிய ரெண்டு மணி நேரமாகும் அதுக்கப்புறம் நீங்க போய் அவங்கள பாருங்க… ”

***

மகா மயக்கம் தெளிந்து கட்டிலில் படுத்திருந்தாள்…

” மகா உனக்கு ஒண்ணுமில்ல மகா நிச்சயம் பார்வை திரும்பிடும்னு டாக்டர் சொல்லிருக்காங்க… ”

” ம்ம்ம்…. நாம அத்தைய தனியா தவிக்க விட்ட பாவமோ என்னவோ இப்படி நடந்துடுச்சி…

திரும்ப அவங்கள கூப்பிட்டு வந்துடுங்க நம்ம கூடவே வச்சுக்கலாம்…. நான் கட்டு பிரிச்சி முதல்ல பார்க்கறது அவங்க முகமாத்தான் இருக்கணும்…! ”

” சரி மகா காலையிலே அம்மா போன் பண்ணங்க… சன்டே நான் அவங்கள பார்க்க போகும் போதே பேரக்குழந்தைய பார்க்கணும் போல இருக்குனு கேட்டாங்க…. அதுக்குதான் போன் பண்ணி தொல்ல கொடுக்கறாங்கனு நான் சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டேன் இதோ இப்பவே அம்மாவுக்கு போன் பண்ணி கிளம்பி ரெடியா இருக்க சொல்லிடுறேன் மகா… ”

***

மகேஷ் ஹோம் க்கு போன் பண்ண மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டது!

” ஹலோ மேடம் நான் மரகதம் அம்மாவோட மகன் பேசறேன் அவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்! ”

” என்ன சார் இப்படி பண்ணிட்டிங்களே… படிச்சவங்கதானே நீங்க காலையில அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சி… கடைசியா மகனையும் பேரனையும் பார்க்கணும்னு சொன்னாங்க… உங்களுக்கு போன் பண்ணா கட் பண்ணிட்டு சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டிங்க… அவங்க மரணத்தோட போராடி உயிர விட்டாங்க… அவங்க கடைசி ஆசைய கூட நிறைவேற்றாத நீங்கலாம் என்ன மனுசங்களோ….

அப்புறம் ஒரு விசயம் எங்க ஹோம்ல யாராச்சும் இறந்துட்டா அவங்க கண்களை தானமா கொடுக்கறது பழக்கம்… உங்களுக்கு போன் பண்ணா நீங்க எடுக்கல அதனால நாங்களா முடிவு பண்ணி கண்ண தானமா கொடுத்துட்டோம்…
உங்க அம்மா உயிரோட இருக்கும் போது உங்கள பார்க்க ஆசப்பட்டாங்க… அவங்க கண் சுகம் ஆஸ்பிட்டல்ல ஒரு லேடிக்கு வச்சிருக்காங்க ஒரு வாரம் கழிச்சி அவங்க கண்ணையாவது போய் பாருங்க அவங்க ஆத்மா நிம்மதியாகும்! ”
போனை காதிலிருந்து தரையில் தவறவிட்டு அம்மாாா என்று அழுதபடியே ஓடி மருத்துவமனையின் அறிக்கையை தேடி பிடித்து பார்த்தவன் அதிர்ந்தான்…

அவள் மனைவி மகாவிற்கு கண்தானம் கொடுத்தவர் என்னும் அறிக்கையில் மரகதம் என்றிருந்தது!

***

இறந்தும் நம்மை வாழ வைப்பது அன்னை மட்டுமே!

முகத்தில் வரிகள் விழுந்ததால்….
முகவரி மாறிப்போனதோ…..
முதியோர் இல்லத்திற்கு!
மனைவி சொல்லே மந்திரமாம்….
சில காமப் பேய் பிடித்தவனுக்கு!

Categories: சிறுகதை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

சிறுகதை

என் காதல் ரோசா

‘‘தானேத் தன்னான்னே ஏய்
தானேத் தன்னான்னே
நல்லா தடம் பாத்து
நடவு நடு
தானேத் தன்னான்னே
தை மாசம் அறுக்கனுமே
தானேத் தன்னான்னே
தாளம்போட்டு நடவு நடு
தானேத் தன்னான்னே
நல்லா தரை பாத்து
வெளயனுமே
தானேத் தன்னான்னே..!’’

என்று அழகாய் மெட்டெடுத்து,

 » Read more about: என் காதல் ரோசா  »

சிறுகதை

அந்த ஒரு நிலவு

அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள்.

 » Read more about: அந்த ஒரு நிலவு  »

சிறுகதை

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான்.

 » Read more about: ரெட்டைக் கிணறு  »