எல்லாவற்றையும் பணத்துக்காகச் செய்யத் தொடங்கினால், பணம் இருக்கும் மனிதர்களே இருக்க மாட்டார்கள். எல்லாவற்றையும் பெருமைக்காகச் செய்யத் தொடங்கினால், பெருமை நிலைக்கும் மனித வாழ்வு நிலைக்காது. சின்னஞ்சிறிய செயலையும் அன்புவழிப்பட்டு செய்தால், உடல் அழிந்த பிறகும் பெயர் நிலைக்கும், சந்ததி தழைக்கும்.

நமது பல்லாயிரம் ஆண்டுகால மரபில், வேளாண்மையை முழுத் தொழிலாக நம் முன்னோர் செய்ததே இல்லை. உணவு படைக்கும் துறை என்பதால், வேளாண்மையில் வணிக நோக்கம் மிகக் குறைவாகவும், பொது நோக்கம் கூடுதலாகவும் இருந்தன. இதனால், இயற்கை விதிகளுக்குப் புறம்பான தொழில்நுட்பங்களை நம் முன்னோர் கையாளவில்லை.

நமக்கு ரசவாதம் தெரிந்திருந்தது. நம் சித்தர்கள் தாவரங்களில் இருந்து உலோகங்களைப் பிரித்து எடுத்தவர்கள்தான். ஒவ்வோர் உயிரினத்திலும் உள்ளீடாக இருக்கக்கூடிய உயிர்வேதி மூலக்கூறுகளைப் பற்றிய பாடம் நமக்கு நிச்சயமாகப் புதியது அல்ல . சுண்ணாம்புக் கீரை என்ற தாவரத்தில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) கூடுதலாக இருப்பது கிராமத்து மனிதர்களுக்கு நன்கு தெரியும். எந்த ஆய்வகத்திலும் அமிலங்களை ஊற்றி, நுண்ணோக்கிகளைக் குவித்து, இந்தத் தாவரத்தில் சுண்ணாம்புச் சத்து உள்ளது எனக் கண்டுபிடிக்கப்படவில்லை. நமக்கே உரித்தான மரபுவழிபட்ட மெய்யறிவின் விளைவாகக் கிடைத்த கொடைகள் இவை.
பிரண்டை மற்றும் குப்பைமேனித் தாவரங்களைப் பற்றி, நவீன மருத்துவத் துறை இப்போது பக்கம் பக்கமாக எழுதுகிறது. இவற்றின் உள்ளீடாக உள்ள உலோகங்களையும் வேதிப்பொருட்களையும் பாடல்களில் எழுதிவைத்து, சீடர்களுக்குக் கற்றுத்தந்தவர்கள் நம் முன்னோர்.

தாவரங்களின் உள்ளிருக்கும் வேதிப் பொருட்களையும் உலோகங்களையும் புரிந்துகொண்டு அவற்றின் இயற்கையான குணங்களைச் சிதைத்து விளைச்சலை உயர்த்தும் பொருளாதார நடவடிக்கையில் நம் முன்னோர் இறங்கவில்லை . ஒருவர் கொலை செய்யாமல் இருப்பதால், அவருக்கு வீரம் இல்லை என்று பொருள் அல்ல. நமது மரபில் வேளாண் தொழில்நுட்பங்களில் வேதிப்பொருட்களை ஈடுபடுத்தவில்லை என்பதால், நம் முன்னோர் அறியாமையில் வாழ்ந்தனர் என்று பொருள் அல்ல.

பன்னாட்டுக் குளிர்பானங்களின் நச்சுப் பிடியில் மக்கள் சிக்கத் தொடங்கியபோது, இயற்கை ஆர்வலர்கள் இளநீரை முன்வைத்தனர். இளநீரின் சத்துக்கள் மற்றும் சிறப்புகள் குறித்த பரப்புரைகள் வேகமாக அரங்கேறின. மாநகரங்களில் இளநீர் பருகும் வழக்கம் தேவைக்கு அதிகமாக உயர்ந்தது. நவீனர்களின் சொற்களில் கூறவேண்டுமானால், இளநீர் உற்பத்தியில் பணம் கொழிக்கத் தொடங்கியது. இளநீர் ஏற்றிய வாகனங்கள், நகரங்களிலும் மாநகரங்களிலும் ஆயிரக்கணக்கில் வலம் வந்தன. நம் நாட்டில் இவ்வளவு இளநீர் இயற்கையான முறையில் விளைய வாய்ப்பு இல்லை . இதற்காக உயர் விளைச்சல் தென்னை நாற்றுகள் களம் இறக்கப்பட்டன. இந்த நாற்றுகளால், பூச்சிகளை, நோய்களைத் தாக்குப்பிடித்து வளர முடியாமல்போனது. மோசமான நோய்கள், வழக்கத்தைவிட அதிகமான வண்டுகள், பூச்சிகளின் தாக்குதல் போன்றவற்றால் தென்னந்தோப்புகள் நலிவடைந்தன.

பணம் கொட்டும் தொழிலாக ஒருபக்கம் இளநீர் மாறிவிட்டது. மறுபக்கம், தென்னை மரங்கள் நோயுற்று வாடின. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, நம் வேளாண் சமூகம் கையாளும் இரக்கமற்ற செயல்களில் மிகச் சிலவற்றை மட்டும் இப்போது பகிர்ந்துகொள்கிறேன் .
மோனோகுரோடோபாஸ் (monocrotophos) எனும் நஞ்சு, அமெரிக்காவிலும் வேறு பல நாடுகளிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. காரணங்களை விளக்கினால், குலைநடுக்கம் வரும். அதன் சுருக்கத்தைக் குறிப்பிடுகிறேன். ‘நம் உடலில் நரம்பு மண்டலத்தைச் சிறப்பாக இயக்கும் சுரப்பிகளில் ஒன்று கோலினெஸ்டெரேஸ் (cholinestérase) என்பது. மோனோ குரோடோபாஸ் நஞ்சுகள் இந்த கோலினெஸ்டெரஸ் சுரப்புகளை முடக்கிவிடுகின்றன. இதன் விளைவாக, நரம்பு மண்டலம் பதற்றமடைகிறது. திடீரென உடல் ஆட்டம்கொள்ளுதல், அதிவேக மாக மூச்சுவாங்குதல், துடித்தல், வெட்டி இழுத்தல், வலிப்பு வந்து துடித்தல், படபடப்பு, கட்டுப்படுத்த இயலாத நடுக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றி துடித்துச் செத்துவிழுதல் நிகழும் வாய்ப்பை மோனோகுரோடோபாஸ் உருவாக்குகிறது . `தாவரங்களில் உள்ள பூச்சிகளும் வண்டுகளும் இவ்வாறு செத்துவிழ வேண்டும் ‘என்பது நவீன மேதைகளின் கண்டுபிடிப்பு.

` சின்னஞ்சிறு உயிரினங்களை இவ்வளவு குரூரமாகக் கொலைசெய்வது பாவம் அல்லவா? என்ற அறச்சிந்தனை நம்மிடம் இருந்திருந்தால், இந்த நஞ்சு தொடக்கத்திலேயே விரட்டியடிக்கப்பட்டிருக்கும். `உற்பத்தி உயர வேண்டும். பணம் கொழிக்க வேண்டும் ‘என்ற எண்ணத்தோடு செயல்பட்டதன் விளைவாக, இப்போது தென்னைமரங்களின் உயிர்நாடியாக மோனோகுரோடோபாஸ் கலந்த நஞ்சுகள் மாறிவிட்டன.

தொடக்கத்தில் தென்னைக் குருத்துகள் மீது இந்த நஞ்சைத் தெளித்தார்கள். இப்போது, ஒரு நெகிழிப் பையில் நஞ்சை ஊற்றி நீர் கலந்து, தென்னைமரத்தின் வேர்களைச் சீவிவிட்டு அவற்றில் கட்டிவிடுகிறார்கள். நெகிழிப் பையில் உள்ள நஞ்சு, ஒரு மணி நேரத்தில் முழுதாக தென்னை வேர்களால் உறிஞ்சப் படுகிறது. இந்தச் செயல்முறையின் வழியாக, மரம் முழுவதும் நஞ்சாக மாற்றப்படுகிறது.
வேர்கள், நிலத்தில் இருந்து நீரை உறிஞ்சி இளநீருக்கு வழங்குகின்றன. அந்த இளநீர் நமக்கு அருமருந்தாக இருந்தது. வீடுகளில் கறிவேப்பிலைச் செடி வளர்ப்போர், அந்தச் செடிகளின் வேரில் தயிர் ஊற்றுவது நமது கிராமங்களில் இருந்த வழக்கம் . தயிரை வேர்கள் உறிஞ்சினால், கறிவேப் பிலையின் மணம் கூடுதலாக இருக்கும். வேர்களுக்கும் நமக்குமான உறவை நம் சமூகம் புரிந்துகொண்ட விதம் இதுதான். அது நவீனச் சிந்தனை இல்லாத `மூடர்களின் ‘காலம். இது பகுத்தறிவும் நவீனக் கல்வியறிவும் செழித்து வளர்ந்துள்ள காலம். அதனால், வேரில் நஞ்சு ஊற்றுகிறார்கள்.

வேர்களில் மோனோகுரோ டோபாஸ் நஞ்சைக் கட்டிய பிறகு, `இரு மாதங்களுக்கு அந்தத் தென்னையில் இருந்து காய், இளநீர் எதையும் பறிக்கக் கூடாது ‘என்ற கட்டுப்பாடு வேளாண் துறையினரால் விதிக்கப்பட்டுள்ளது. வேறு பல நஞ்சுகளும் தென்னை வேரிலும் தண்டிலும் செலுத்தப்படுகின்றன. அவற்றைச் செலுத்தினால், ஆறு மாதங்களுக்கு காய் பறிக்கக் கூடாது. கூர்மையான ஆயுதங்களைக் கொடுத்துவிட்டு, `வலிக்காமல் குத்த வேண்டும், ரத்தம் சிந்தாமல் அறுக்க வேண்டும் ‘என்பது போன்ற உபதேசங்களை அந்த ஆயுதங்களின் மேல் அச்சிட்டு விற்பனைசெய்வது நவீன அறிவாளிகளின் நேர்மை .

தென்னையில் நிகழும்` பசுமைப் புரட்சி’ மோனோ குரோடாபாஸுடன் முடியவில்லை. சல்ஃபோனமைடு (sulfamides) எனும் வேதி நஞ்சுக்கான மாத்திரைகளை தென்னைமரத்தில் பதிப்பது, வேளாண் துறையில் அரங்கேறும் மற்றொரு புரட்சிகரத் தொழில்நுட்ப நடவடிக்கை. தென்னையின் குருத்துகளில், பாளைகளில் இருக்கும் வண்டுகளை அழிப்பதற்காக சல்ஃபோனமைடு நஞ்சு வில்லைகளைப் பயன்படுத்துகிறார்கள். தென்னைமரத்தின் தண்டுப் பகுதியில் ஒரு துளையிட்டு அதன் உள்ளே மாத்திரைகளைப் பதித்து , அந்தத் துளையை சிமென்டால் அடித்துப் பூசிவிடுவது இந்தத் ‘தொழில்’நுட்பம். இவ்வாறு செய்த சில நிமிடங்களில், தென்னைமரத்தின் உச்சியில் இருந்து வண்டுகள் செத்து விழும் என்று பரவலாகப் பேசிக்கொள்ளும் அளவுக்கு வீரியமிக்கது சல்ஃபோனமைடு நஞ்சு .

சல்ஃபோனமைடு மாத்திரைகள் பதிக்கப்பட்ட தென்னைமரங்கள் செத்து, இற்று விழத் தொடங்கும் நிலை இப்போது உருவாகிவிட்டது. புரிகிறதா உங்களுக்கு? தன் மீது திணிக்கப்பட்ட நஞ்சுகளின் அளவைத் தாள இயலாமல், அவ்வளவு கம்பீரமான தென்னைகளே செத்துக்கொண்டுள்ளன.

கொப்பரைத் தேங்காய்க் கிடங்குகளிலும் பசுமைப் புரட்சியின் எண்ணற்ற செயல்பாடுகள் நிகழ்கின்றன. அவற்றில் முக்கியமான தொழில்நுட்பம் ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.

கொப்பரைத் தேங்காய் என்றால், எண்ணெய்த் தன்மை யுடன் உள்ள முற்றிய, காய்ந்த தேங்காய். கிடங்குகளில், கொப்பரைத் தேங்காய்கள் குவியல் குவியலாகக் கொட்டி வைக்கப்பட்டிருக்கும். நாளடைவில் ஈரப்பதம் உருவாகி, தேங்காய் மீது கருமை படியத் தொடங்கும். அதாவது, தேங்காய்கள் மீது கறுப்பு வண்ணத்தில் பூஞ்சைகள் வளரும். இந்த நிலையில், தேங்காய்களை வெயிலில் காயவைத்தால், பூஞ்சைகள் கட்டுப்பட்டுவிடும். இந்த நவீனப் புரட்சிக் காலத்தில் வெயிலில் உலர்த்துவது, பழைமையான, முட்டாள்தனமான அல்லது நடைமுறைக்கு ஒவ்வாத தொழில்நுட்பம் அல்லவா! அதனால், கந்தகம் அடங்கிய வேதி நஞ்சுகளை (Sulphar) கொப்பரைக் கிடங்குகளில் பயன்படுத்துகிறார்கள்.

பெரிய வட்டமான இரும்புச்சட்டியில் நெருப்புத் துண்டுகளை நிரப்பி, அதில் கந்தக மாத்திரைகளைப் போட்டு, சட்டியை சல்லடை போன்ற இரும்பு மூடியால் மூடினால், மிக அதிக அளவில் புகை வரும். கொப்பரைத் தேங்காய்க் குவியலை ஒரு தார்ப்பாயால் மூடிவைத்து, அதன் உள்ளே கந்தகப் புகைகொண்ட சட்டியை வைத்துவிடுகிறார்கள். தீயுடன் சேர்ந்த கந்தகப் புகை மிக வீரியமான உயிர்க்கொல்லி. இவ்வாறான கந்தகப் புகையில் மூட்டம் போடப்பட்ட தேங்காய்கள் கருமை நிறம் நீங்கி , பளிச்சென்ற வெண்மை நிறத்தில் இருக்கும்.

இந்தக் கால பொதுச் சமூகத்துக்கு, வெண்மை நிறம் மிகவும் பிடித்தமானது அல்லவா? சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதுதானே, நவீன அறிவியல் துறையின் ஒரே ஒரு குறிக்கோள்! கந்தகத் தேங்காய்களில் இருந்து எண்ணெய் பிழிந்த பின்னர், அந்தத் தேங்காய் எண்ணெயும் வெண்மை நிறத்தில் உள்ளது. உண்மையான / இயற்கையான தேங்காய் எண்ணெய், மங்கலான பழுப்பு வண்ணத்தில்தான் இருக்கும்.

`தென்னைமரத்தின் உச்சியில் ஏறிய குரங்குகள், தேங்காய்களைப் பறித்து இளநீர் பருகிவிட்டு, அங்கு இருந்து தாவி அருகே இருந்த பாக்கு மரங்களில் இறங்கின. பாக்குக் கொட்டைகளை மென்றுவிட்டு, கீழே இருந்த பலாமரத்தில் குதித்தன. பலாப்பழங்களைச் சிதைத்து உண்ட அந்தக் குரங்குகள், அருகே இருந்த வாழைமரங்கள் மீது இறங்கின. செழித்துப் பழுத்திருந்த வாழைப்பழங்களைத் தின்றுவிட்டு, அருகே இருந்த குளத்தில் குதித்து நீந்திக் கரையேறின ‘என்பது நமது சங்கப் பாடல்களில் உள்ள அந்தக் காலத்துத் தோட்டங்களின் காட்சி . கலித்தொகை, சீவகசிந்தாமணி ஆகிய தொகுப்புகளில், இவ்வாறான அடுக்குமுறைத் தோட்டங்களின் விவரணைகள் சிறப்பாகப் பதியப்பட்டுள்ளன.

தென்னையின் வேரில் நெகிழிப் பையுடன் நச்சுநீர், தண்டுப் பகுதியில் சிமென்ட் பூச்சுடன் நச்சு மாத்திரைகள், பாளைகளில் நச்சுக் குருணைகள், தென்னையின் கீழே வெட்டப் பட்டுள்ள குழிகளில் பிராய்லர் கோழிப் பண்ணைக் கழிவுகள் . இதுதான் இப்போதைய தோட்டங்களில் காட்சிப் பதிவு. இவ்வளவுக்கும் பிறகு வந்து சேரும் இளநீரையும், தேங்காய்களையும், எண்ணெயையும்தான் இந்தச் சமூகத்தில் வாழும் கோடிக்கணக்கான மனிதர்கள் உணவாக உட்கொள்கின்றனர்.

தீயுடன் இணையும் கந்தகம் மற்றும் மோனோகுரோடாபாஸ், சல்ஃபோனமைடு நஞ்சுகள் எல்லாம், தென்னைப் பொருட்கள் வழியாக இந்தச் சமூகத்தில் அன்றாடம் பரவிக்கொண்டுள்ளன. இவற்றைக் கண்காணிக்க எந்த ஏற்பாடும் இல்லை; கட்டுப்படுத்த எந்த வழிமுறையும் இல்லை; தடுக்கும் சிந்தனையோ துளிகூட இல்லை.

உண்மை என்னவென்றால், இவற்றை இனி கட்டுப்படுத்தவோ, ஒரேயடியாக ஒழிக்கவோ இயலாது. வேதிப்பொருட்களைத் தடைசெய்தால், இப்போதைய விவசாயிகளில் பெரும்பாலானோர் விவசாயத்தில் இருந்தே விலகிச் செல்வார்களே தவிர, உடனடியாக மரபுமுறைக்குத் திரும்ப மாட்டார்கள். ஏனெனில், கடந்த 60 ஆண்டுகால பசுமைப் புரட்சியின் விளைவாக, அவர்களது மனங்களும் நிலங்களும் பக்குவம் இழந்துவிட்டன.

தென்னைச் செடிகளை, நம் மரபு `தென்னம் பிள்ளை ‘என அழைத்தது. பணத்துக்காகவும் வேறு பல போலித்தனங்களுக்காகவும் `பிள்ளைகளை’ப் பலியிடும் காலம்தானே இது!

செய்தி:  ம.செந்தமிழன்

நன்றி: கு.புகழேந்தி திரு


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

கட்டுரை

யாளி – 4

யாளிகள் பற்றி 2010 ல் தணிகை குமார், மணி எழுதிய நாவல் பலதரப்பிடம் இருந்து நன்மதிப்பைப் பெற்றது. யாளி மிருகத்தை தேடி செல்லும் இளைஞர்கள் பற்றி சுவரசியமாக பல செய்திகளுடன் வெளியடப்பட்டது. யாளி பற்றிய பலருக்கு அறிமுகமும்,  » Read more about: யாளி – 4  »

கட்டுரை

யாளி – 2

யாளியை வியாழம், சரபம் என்றும் அழைக்கிறார்கள். இது, அன்றில் பறவை போலவும், அனிச்சம் செடியினம் போலவும் வாழ்ந்து மறைந்துபோன உயிரினம் ஆகும். யாழிகளின் வகைகள்:- ••••••••••••••••••••••••••••••••• சிம்ம யாளி மகர யாளி கஜ யாளி ஞமலியாளி பெரு யாளி என யாழிகளின் வகைகள் இருக்கின்றதாம்..!  » Read more about: யாளி – 2  »

கட்டுரை

யாளி – 1

யாளி என்பது தமிழ் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். இதை வியாழம், என்றும் அழைக்கிறார்கள். இவற்றைப் பொதுவாக தமிழ் கோயில்களின் தூண்களில் காணலாம். தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும்.

 » Read more about: யாளி – 1  »