மரபுக் கவிதை
என் க(வி)தை
நூற்றெண்பத்தொன்பது சீர் ஆசிரிய விருத்தம் (27×7 சீர்கள் ஓரடிக்கு) ×நான்கடி
பூவிழிப் பார்வை நோக்கினில் வீழ்ந்து
புதைந்திடு மகவை தனில்நானும்
பொற்றமிழ்ப் பெண்ணாள் பார்வையி லின்பம்
பொங்கிட வீழ்ந்து பொலிவுற்றேன்
புண்ணெனத் தாக்கும் உற்றவர் மற்றோர்
பொசுக்கியும் வாழ்வில் இடறாமல்
பொங்கியெ ழுந்தேன் என்முனே நின்ற
பொறுப்பையு ணர்ந்தே செயல்பட்டேன்
புண்மைகள் தீர நன்மைகள் சேரப்
போற்றிட லானேன் என்வாழ்வில்
பொற்பினைச் சேர்க்கும் கல்வியைக் கண்ணாய்ப்
பொங்கிடு மாவ லால்கற்றேன்
போதுமுன் கல்வி வறுமையைத் தீர்க்கப்
புறப்படு வாயே வேலைக்குப்
பூத்திடும் பசியைப் போக்கிடு மகனே
போபோ என்றார் என்னன்னை
போதெனு மிளமை இன்பங்கள் கழியப்
புரிந்தன வாழ்வின் உண்மைகள்
புரிந்தவப் போது கீழ்மைகள் மிஞ்சிப்
புகுந்தன பலவாய்த் துன்பங்கள்
புதைந்தவென் இன்ப நிலையினை மீட்கப்
பொருந்துவ தேதென வோர்ந்திட்டேன்
பொலிந்திட லுற்றே என்னுடைக் குடும்பம்
பூத்திட லொன்றே குறிக்கொண்டேன்
போதிய வுழைப்பும் போதிலா வுணவும்
புரிந்திடா வுணர்வும் வரப்பெற்றேன்
போற்றியுண் என்றார் உணவினை முன்னோர்
போற்றியும் உணவு கிடைக்கவிலை
போதுமோ என்றே ஏக்கமாய்க் கழியும்
புதிரென வயிறும் சோர்ந்ததுவே
போட்டிடும் உரமே பயிர்தனை வளர்க்கும்
பொசுங்கிடும் பற்றாக் குறையானால்
பூட்டிய அறையின் குப்பையாய் வயிறும்
பொசுக்கென நசுங்கி யுள்வாங்கப்
புதிரினை அவிழ்க்கும் வழிதனைக் கண்டேன்
புதுப்பய ணத்தைத் தொடர்ந்திட்டேன்
புதியவென் பயணம் புலர்ந்திடுங் கதிரின்
புத்துணர் வாக எழுந்ததனால்
பொசுக்கிய வறுமை உடனழிந் தொடப்
புனர்நிலை நோக்கி யேசென்றோம்
புயலெனச் சூழ்ந்த துன்பமாய்த் தன்னின்
பொறுப்பினை மறந்த என்தந்தை
புறப்பபட லானார் தனிமையில் வீழ்ந்தோம்
பொறுப்பினை நானே ஏற்றிட்டேன்
பொறுமையாய்ச் செய்யும் மின்பணி என்றன்
புழினை நாளும் கூட்டியதால்
பொசுங்கிய வாழ்வும் விரிகதி ரோனாய்ப்
புத்துணர் வெய்தி எழுந்ததுகாண்
பொறுப்புகள் தானே மனிதனின் நிலையைப்
புதுக்கிடும் கருவி?