வந்து சென்ற
எல்லா தடயங்களையும்
அழித்தாகி விட்டதென்ற
இறுமாப்பு

உன்
விஷமம் வழியும் விழியும்
நகைக்கும் வதனமும்
மனதில்
நீக்கமற நிறைந்துவிட்டதை
அறிந்ததும் அழிந்தது

தென்றல்
இனிதாய் வீசி
தொட்டுச்சென்ற கணத்தில்.

அது என்ன பார்வை

விழுங்கி விடுவதாய்
தெறித்து விழுவதாய்

எழவே இயலாத வண்ணம்
அமிழ்த்துவதாய்

தவிதவிப்பாய் தத்தளித்து
தத்தளிக்கச் செய்வதாய்

அன்பைப் பொழிவதாய்
காட்சியைக் காண விழைவதாய்

எத்தனை விந்தை செய்கிறது
உன் இரு விழிகளின்
ஒற்றைப் பார்வை

உடல் உறங்க
உள்ளம் உறங்க
உயிரும் உறஙிவிட

உன் நினைவு மட்டும்
பெரும்
ஊழிக்கூத்திடும்.

இரக்க மனத்தில்
ஒளிந்திருக்கும்
அரக்க குணம்

அனிச்ச மனம்
அன்பின் பாரம்தாங்காது
தவிக்க

மனம்
பதைபதைக்க
பரிதவிக்கவிட்டு

பாராமுகமாய்
செல்வாய்.

உயிர்ச்சிலை
எனதாய்
வந்தாய்

உயிரை
விழுங்கிவிடுவதாய்
பார்த்தாய்

உயிரைப்
பறித்துக்கொண்டு
சென்றாய்

உன்
மௌனத்தின் செய்திகளை
அறிந்துக்கொள்ள
உயிரைப் பின் தொடர்ந்து
மனமும் சென்றுவிட்டது.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...