குமாருக்கு எல்லாமே ஃபேஸ்புக்தான். வீட்டில், அலுவலகத்தில், பஸ்ஸில்,டிரைனில்,பாத்ரூமில் என எந்நேரமும் ஃபேஸ்புக்கிலேயே வாழ்ந்தான். ஃபேஸ்புக்கிலேயே சுடுகாடிருந்தால் அவன் செத்தபிறகு அங்கேயே புதைத்துவிடலாம் என்கிற அளவுக்கு ஃபேஸ்புக்கையும் அவனையும் பிரிக்க முடியாது!

அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து படிய தலைவாரி, முகத்துக்கு பவுடரும் போட்டு.. கடவுளை வணங்கி, கந்த சஷ்டி கவசமும் பாடி திருநீரு பூசி கீபோர்டை தொட்டுக்கும்பிட்டுவிட்டு கனிணி முன் அமருவான் குமார். கையில் தினத்தந்தி பேப்பரை எடுத்துவைத்துக்கொள்வான். அதில் இருக்கிற ஒவ்வொரு செய்தியின் தலைப்பையும் டைப் செய்துகொள்வான். கீழே ஏதாவது மொக்கை கமென்ட் ஒன்று போட்டுவிடுவான். அதற்கு பெயர்தான் ஸ்டேடஸ்.

‘‘அனைவருக்கும் இலவச பால் – அம்மா அறிவிப்பு #செய்தி

குடுக்கறதுதான் குடுக்கறீங்க அமலாபாலா குடுங்க ஜாலியா இருக்கும்!’’
(அவன்போட்ட மொக்கை ஸ்டேடஸ்களில் ஒன்றுதான் இது)

இந்த மொக்கை கமென்ட்டை விகடன்,குமுதம்,குங்குமம்,மங்கையர்மலர்,விஜயபாரதம் என எதிலாவது வலை பெய்யுதே, வலை தூவுதே, வலைகள் ஓய்வதில்லை மாதிரி பக்கங்களில் வெளியிடுவார்கள். பத்திரிகைகளில் குமாரின் கமென்டுகள் இடம் பிடித்து பிடித்து.. இதன் மூலமாக அவனுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ். அதாவது ரசிகர்கள். அதில் பாதிக்கு மேல் பெண்களாம். இவனுடைய கமென்டுகளுக்காகவே விகடன் குமுதம் வாங்கி படிக்கிற பெண்கள் கூட உண்டு என குமாரே பெருமையாக வீட்டில் சொல்லிக்கொள்வான்.

சென்னை மாநகர மக்கள்தொகையில் பாதியில் பாதி இளம்பெண்களாக இருந்தாலும் குமாரிடம் யாருமே பேசமாட்டார்கள். அவனாலும் பேச முடியாது. கூச்ச சுபாவம். அதோடு பெண்களிடம் நேருக்குநேர் அவனால் ஒரு நிமிடம்கூட பேசமுடியாது. உளறிக்கொட்டுவான். ஆனால் இந்த ஃபேஸ்புக்,ட்விட்டர் முதலான லாகிரி வெப்சைட்டுகள் வந்தபிறகு நிறைய பெண்கள் இவனுக்கு கமென்ட்டு போடுவதும் சாட்டிங் செய்வதுமாகத்தான் இருந்தது. ஆனால் எந்த பெண்ணையும் ‘நம்பி’ பேசக்கூட முடியாது என்றும், அது பெண் பெயரில் இருக்கிற ஆணாக இருக்கலாம் என்றும் அஞ்சுவான் குமார்.
அதற்கு வலுவான பல காரணங்கள் இருந்தன. முக்கி முக்கி மூன்று நாள் அலுவலக வேலைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு கடலை போட்டு கடைசியில் காணாமல் போன பெண்கள் நிறையபேர். அல்லது இவனோடு பேசுகிற பெண்களுக்கு வயது 60ஐ தாண்டியிருக்கும். கலிகாலம். பல்லுபோன பாட்டிகள் கூட ஃபேஸ்புக் உபயோகித்து நம்ம பிராணனை வாங்குகிறார்களே என நொந்துகொள்வான். இருந்தாலும் ஒரு பெண்ணாவது உஷாராகிவிடாதா என்கிற ஏக்கம் யாகூ காலத்தில் தொடங்கியது.

இணையத்தில் பெண் பெயரில் உலவுகிறவர்களில் 90% பேர் ஆண்கள், மீதி 5 %பேர் வயதான பாட்டிகள் என்பது குமாரின் அவதானிப்பு. ஒன்றிரண்டு உருப்படியான ஃபிகர்கள் இருந்தாலும் அவர்கள் தமிழில் ஸ்டேடஸ் போடுபவர்களோடு பேசுவதில்லை.. ஆங்கிலத்தில் பீட்டர் விடுபவர்களையே நாடுகின்றனர் என நினைத்து நினைத்து.. பொருமுவான். மீறி ஏதாவது ஒன்றிரண்டு இளம்பெண்கள் அரிதாக பேசினாலும் எடுத்த எடுப்பிலேயே அண்ணா வணக்கம் என்று ஆரம்பிப்பார்கள். எவ்வளவு நாளைக்குதான் அவனும் நல்லவன் போலவே நடிப்பான்.

‘‘ஃபேஸ்புக்கில் காதல்.. இளம்பெண்ணோடு ஜாலியாக இருந்து ஏமாற்றிய காதலன்’’ மாதிரியான செய்திகளை தினத்தந்தி பேப்பரின் எட்டாவது பக்கத்தில் படித்து.. ‘’எப்படித்தான் இவனுங்களுக்குன்னே வந்து மாட்டுதுங்களோ.. நாம இவ்ளோ பேமஸா இருக்கோம்.. ஒரு பொண்ணாச்சும் நம்மகிட்ட பேசுதா..’’ என தேம்பி தேம்பி அழுவான். நமக்கு ஆயிரக்கணக்குல பெண் நண்பர்கள் இருந்தாலும் அவர்களோடு பேசினாலும் ஒரு பிரயோஜனமுமில்லை என்று உறுதியாக நம்பினான். இதனால் எந்தப்பெண் ரசிகை இவனோடு சாட்டிங் செய்தாலும் இவன் சலிப்பாகவே பதில் சொல்வான்.

அப்படித்தான் ஒரு சுபயோக சுபதினத்தில் அவள் குமாரை சாட்டிங்கில் அழைத்தாள்.

‘ஹாய்’

‘ஹாய்’

‘ஐயாம்.. (NAME) , உங்களோட தீவிர வாசகி!’

‘ஓஹோ’

‘உங்களோட பேசணும்னு எப்பவும் நினைப்பேன்’

‘பேசுங்க’

பேசும்போதே இன்னொரு விண்டோவில் அவளுடைய புரொபைல் போய் பார்த்தான். அதிக நண்பர்களில்லை. தன்னுடைய நிறைய படங்களை அப்லோட் செய்திருந்தாள். திருமணமாகதவள். பெண்ணும் பார்க்க லட்சணமாய் மங்களகரமாய் எடுப்பாக கிளி மாதிரிதான் இருந்தாள்.

பொதுவாக இந்த ஃபேக்ஐடி பெண்கள் யாராவது நடிகையின் படத்தையோ அல்லது குழந்தைகள், அழகான பெண் ஒவியங்களையோதான் புரொபைலில் வைத்திருப்பார்கள். ஆனால் இவளோ இவளுடைய படத்தையே வைத்திருக்கிறாள் போலதான் இருந்தது. நண்பர்கள் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது. மீண்டும் படங்களை பார்க்க தொடங்கினான். ஸ்டேடஸ்களை மேய்ந்தான்.

எல்லாமே கல்லூரி நண்பர்களோடு எடுத்த படங்கள்.. நிறைய கவிதை எழுதுவாள் போலிருந்தது. ஸ்டேடஸ்கள் எல்லாமே கவிதைகளாக கொட்டிக்கிடந்தன. அவையெல்லாம் அவ்வளவு ஸ்வாரஸ்யம் தரவில்லை. அவளுடைய புகைப்படங்கள் ஒரிஜினலா அல்லது டூப்ளிகேட்டா என்பதே குமாருக்கு பிரச்சனையாக இருந்தது. சில சமயம் பிக்காலிபயலுக தெரிந்த பெண்களின் ஒரிஜினல் புகைப்படங்கள் இவர்களுடைய போலி ஐடிகளுக்காக பயன்படுத்துவதுண்டு.

படங்களை வைத்து பொண்ணு கோவை பாரதியார் யுனிவர்சிட்டி என்பது புரிந்தது. பின்னாலிருக்கும் டிபார்ட்மென் பெயர் அவள் மேனேஜ்மென்ட் தொடர்பாக படிப்பவள் என்பதையும் உணர்த்தியது. சாட்டிங் தொடர்ந்தது.

‘‘நீங்க என்ன பண்றீங்க’’

‘‘நான் ஒரு கால் சென்டர்ல வேல பாக்கறேன்’

‘‘ச்சீய்ய்ய்.. என்னங்க நீங்க’

‘‘என்னங்க கால்சென்டர்ல வேலை பாக்குறது அவ்ளோ தப்பா..’’

‘‘சரியான தத்தியா இருப்பீங்க போலருக்கே!’’

குமாருக்கு ஏதோ தப்பாக தோன்றியது. என்னதிது பேச ஆரம்பிச்சி நாலாவது வரிலேயேவா ஒரு பொண்ணு இப்படி பேசுமா.. நிச்சயமா இது எவனோ பையன்தான்.. பாப்போம்.. என பேச்சை தொடர்ந்தான்.

‘‘என்ன பண்றீங்க’’

‘‘நான் பாரதியார் யுனிவர்சிட்டில.. எம்பிஏ’’

‘‘எந்த இயர்’’

‘‘ஃபைனல் இயர்’’

‘‘ஓஹோ’’
(புகைப்படங்களில் இருக்கிற விஷயமேதான், உண்மையான பெண்ணா இருக்கமோ)

‘‘உங்க ஸ்டேடஸ்னா எனக்கு உசிரு.. வூட்ல எல்லாருகிட்டயும் காட்டி சிரிப்பேன்’’

‘‘ஓஹோ’’

‘‘உங்களோட போட்டோஸ் பார்த்தேன்.. ரொம்ப க்யூட்டா இருக்கீங்க 😉 ’’

‘‘அப்படியா..?’’

‘‘உங்களோட பேசணும்னு எனக்கு ரொம்ப ஆசை ;-))) ’’

‘‘அதான் இப்ப பேசறீங்களே..’’

‘‘நாம பிரண்ட்ஸா இருக்கலாமா’’

‘‘இருந்துட்டு போங்க’

‘‘எனக்கும் உங்களை மாதிரியே ரொம்ப ஃபேமஸாகணும்னு ஆசை’’

‘‘அதுக்கு நீங்க நிறைய உழைக்கணும்’’

‘‘நீங்க எந்த ஊரு’’

‘‘சென்னை’’

‘‘உங்களை நேர்ல பாக்கணும்போல இருக்கு’’

‘‘பாக்கலாமே’’

‘‘எப்படி’’

குமாருக்கு இந்த பேச்சு உற்சாகம் கொடுத்தாலும் உள்ளுக்குள்தான் ஏதோ ஒன்று… நிச்சயமாக இது ஆணாகத்தான் இருக்க வேண்டும் என உள்மனது எச்சரித்தது. ஒருவேளை நிஜமாகவே பெண்ணாக இருந்துட்டா.. பொண்ணு வேற குஜாலா பேசுது.. மச்சான் இந்த சான்ஸு இனிமே கிடைக்குமா என குமாருடைய மனசாட்சி கிராபிக்ஸில் நிழலாக அருகில் அமர்ந்து கன்னத்தில் கைவைத்துக்கொண்டு ஜெமினிகணேசன் போலவே பேசியது.

‘‘உங்க போன் நம்பர் கிடைக்குமா..’’

‘‘ஸ்யூர்.. (PHONE NUMBER.) , டியர் உங்களுடைய எண்ணை கொடுத்தால் நானே கூப்பிடுகிறேன்..ப்ளீஸ்மா!’’

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. அடிப்பாவி.. கேட்டதும் கொடுத்துவிட்டாயே.. ஒரு இளம்பெண் தன்னுடைய செல்ஃபோன் எண்ணை இவ்வளவு எளிதாக கொடுத்துவிடுவாள் என குமார் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அந்த பெண்ணோடு சாட்டிங் பண்ண ஆரம்பித்து ஒருமணிநேரம் கூட முடியவில்லை. அதற்குள்ளாகவே இந்த அளவுக்கு முன்னேற்றமா? ஆனால் நிஜமாகவே கொடுத்துவிட்டாள். அதிலும் அந்த ‘டியர்’ அவனுடைய சமூகமே எதிர்பார்க்காதது! குமாருக்கு பதட்டமாக இருந்தது. இதயதுடிப்பு அதிகரிக்க.. வயிற்றுக்குள் என்னவோ செய்தது. 

அவளுக்கு உடனடியாக ஃபோன் செய்ய பயமாக இருந்ததால் தன்னுடைய எண்ணை அவசரமாக கொடுத்துவிட்டான். இருந்தாலும் அச்சச்சோ தப்பு பண்ணிட்டோமோ என மனதுக்குள் துடித்தான். 

‘‘யார் முதல்ல கால் பண்றாங்கனு பார்ப்போமா? ;-)’’

‘‘பார்ப்போம் பார்ப்போம்’’ என்றான்.

மொபைலுக்கு முதலில் ஒரு மெசேஜ் வந்தது. ‘‘ஹாய் இட்ஸ்மீ ()’’

என்ன பதில் அனுப்பவுது என்று தெரியாமல். இவனும் ஒரு ஹாயை அனுப்பினான். அடுத்த நொடி மிஸ்ட் கால். இதயதுடிப்பு பல ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரயிலுக்கு ஓப்ப அடித்து உதறியது.

அழைக்கலாமா வேண்டாமா.. ஒருவேளை பெண்குரலாகவே இருந்தாலும் இப்போது வருகிற கொரியன் ஃபோன்களில் ஆண்களே பெண்குரலில் பேசும் ஆப்சனெல்லாம் வருதே.. என அஞ்சினான். அந்தப்பெண்ணே அழைத்தாள், எடுத்துப்பேசினான்.

‘‘ஹல்ல்ல்லோ.. ‘’ ஒரு தேன்குரல்.

‘‘ஹலோ’’

‘‘யார்னு தெரியுதா…’’ மெலிதாக ஒரு சிரிப்பு வேறு.. அடடா!

‘‘தெரியுதுங்க! சொல்லுங்க’’ தொண்டை கம்முகிறது. வேர்த்துக்கொட்டுகிறது. ஏசியை கூட்டிவையுங்களேண்டா வெண்ணைங்களா!

‘‘நான்தான்.. (name) பேசறேன்”

‘‘சொல்லுங்க.. சொல்லுங்க.. நீங்க நிஜமாவே பொண்ணுதானா’’

‘‘நேர்ல வாங்க நிரூபிச்சுக்காட்றேன்’’

‘‘அய்ய்யோ என்னங்க கோபபடறீங்க.. ஏன்னா நிறைய பசங்க இப்படிதான் கொரியன் ஃபோன்ல பொண்ணுமாதிரி பேசி ஏமாத்துவாங்கனு டவுட்டுக்காக கேட்டேன்’’

‘‘நான் நிஜமாவே பொண்ணுதான்.. ஃபேஸ்புக்ல போட்டோஸ் பாக்கலையா.. உங்க அளவுக்கு இல்லாட்டியும் சுமாரா இருப்பேன்’’

‘‘பார்த்தேன்ங்க.. இருந்தாலும் இப்ப கூட எனக்கு நம்பிக்கையே வரல.. நிஜமாவே நீங்க பொண்ணுதானா’’

‘‘எனக்கு செம கடுப்பாகுது… ’’

‘‘தப்பா நினைச்சிகாதீங்க.. பொதுவா பொண்ணுங்கன்னா இன்டர்நெட்ல..’’

‘‘அதைவிடுங்கப்பா… சாப்டாச்சா’’

‘‘சாப்டாச்சுங்க! நீங்க’’

‘‘இனிமேதான்.. பசியில்ல’’

‘‘ஏன்’’

‘‘உங்களோட பேசறேன்ல.. படபடப்பா இருந்துது..’’

‘‘என.. ஒன்னுமில்ல ஒன்னுமில்ல’’

‘‘அப்புறம்’’

‘‘அப்புறம்’’

‘‘அப்புறம்’’

‘‘அப்புறம்’’

‘‘ம்ம்.. விழுப்புரம்.. எங்க இருக்கீங்க என்ன பண்ணிட்டுருக்கீங்க’’

‘‘நான் ஆபீஸ்ல இருக்கேன்ங்க….. நீங்க’’

‘‘நான் வீட்லதான் இருக்கேன்..’’

‘‘வீட்ல யாரெல்லாம்’’

‘‘அம்மா,அப்பா,தம்பி மட்டும்தான்.. இப்போதைக்கு நான்மட்டும் தனியாதான் இருக்கேன்’’

‘‘ஓஹோ’’

‘‘தனியா இருக்கேனு சொல்றேன்.. ஓஹோன்றீங்க’’

‘‘வேற என்ன சொல்றது’’

‘‘ம்ம்ம்.. ஒன்னும் சொல்ல வேணாம்’’

‘‘அப்புறம்’’

‘‘உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..’’

‘‘ஓஹோ’’

‘‘அப்புறம்’’

‘‘ஒன்னுமில்ல.. கொஞ்சம் வேலையா இருக்கேன், அப்புறம் பேசட்டுமா’’

‘‘ஓக்கே ஃப்ரீயாருக்கும் போது கூப்பிடுங்க!’’

என ஃபோனை கட்செய்தான் குமார்,. ஆனால் அவள் மெசேஜில் வந்தாள். ‘‘ஐ திங்க்.. ஐ லவ்..’’ என அனுப்பியிருந்தாள். பதறிப்போய்விட்டான் குமார். என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளுடைய புகைப்படத்திலிருந்த முகம் அவ்வளவு அழகு. அந்த முகம் கண்ணுக்கு முன்னால் வந்து வந்து சென்றது. அடிப்பாவிகளா இத்தனை நானா எங்க போயிருந்தீங்க.. ஒரே ஒரு பொண்ணு.. ஒரு பொண்ணு.. நம்மள லவ் பண்ணமாட்டாளானு ஏங்கி ஏங்கி.. ச்சே..
நிச்சயமாக இப்படி ஒரு பெண் தன்னை காதலிப்பதாக சொன்னாள் யாருக்குத்தான் கசக்கும். குமார் உடனடியாக ஃபோனில் அவளை அழைத்தான்,

‘‘ஹலோ’’

‘‘மெசேஜ் பார்த்தீங்களா’’

‘‘ம்ம்.. அதுக்குதான் கூப்டேன்’’

‘‘ம்ம்..’’

‘‘என்னால உன்னை லவ் பண்ண முடியாது.. ‘’

‘‘ஏன்..’’

‘‘ஏன்னா எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. ஐயாம் மேரீட்.. ஐயாம் மேரீட்‘’ என்று சொல்லிவிட்டு ஃபோனை கட்பண்ணிவிட்டு ரொம்ப நேரம் அழுதுகொண்டேயிருந்தான்.

‘‘அடிப்பாவிங்களா.. கல்யாணம் ஆகறதுக்கு முன்னால எவ்ளோ பேர்கிட்ட பேசிருப்பேன்.. எல்லாரும் அண்ணா அண்ணானு சொல்லிட்டு.. இப்ப வந்து லவ்வுன்றீங்களே.. என நினைத்து நினைத்து வெதும்பினான். அவள் மெசேஜ் அனுப்பியிருந்தாள். ‘‘அதுக்கென்ன… ’’ என அனுப்பியிருப்பாளோ.. அப்படி அனுப்பியிருந்தா எவ்ளோ நல்லாருக்கும்.. மனது பதைபதைக்க மேசேஜை பார்த்தான்.

‘‘சாரி அண்ணா!’’

என்றென்றும் அன்புடன்
அபு ஜைனப் (ஹாஜா மொஹைதீன்)


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..