முற்றிலும் சிற்பங்களோடு
முறுவலுடன் ஆடும் உறிமாலை,
பொன்னகை பூட்டி அலங்காரம்
புன்னகை சிந்தும் உற்சவரும்,
மின்னிடும் விளக்குகள் சொலிக்க
வண்ணக் கோலங்கள் நிறைந்த ரதவீதி,
சுற்றிடும் உயர்ந்ததோர் தேரே
நீர் சுற்றிடும் சூட்சுமம் அறிவீரா?
உருண்டிடும் சக்கரம் சுழல
உருவிலே சிறிய தொன்று,
உரமதாய் உன்னைத் தாங்க
ஊரெல்லாம் சுற்றி வருவீரே!
பெற்றவர் அச்சினில் ஆணி
பெருந்தேர் மக்களெனப் போற்ற,
உற்சவர் என்றவர் குறிக்கோள்
ஊர்வலம் சுற்றிடக் கண்டீர்!
அழகினுக் கோர் அலங்காரம்
ஆக்கியே தள்ளியே ரசிப்பர்,
அவர்களின் காலக் கழிவில்
தள்ளியே ரசிக்கும் பிள்ளை…!
அச்சிடை உருவிட ஆணி
அனைத்துமே குலையக் கீழ்சாயும்
எந்நிலை நாமுயர்ந்த போதும்
அந்நிலை அச்சாணி யாரெவரோ?
என்றென்றும் மறவாதே நீயும்
எந்நாளும் உருளலாம் நற்தேராய்!