உந்தன் பாதம்
எந்தன் வேதம்,
உந்தன் கொலுசு
எந்தன் இன்னிசை.
ஆடும் கால்கள்
ஆனந்த ஊற்று,
ஓடும் பரல்கள்
உயிரின் ஓசை,
வண்ணப் பூச்சு
வடிவின் வீச்சு,
மின்னிடும் மெட்டி
மனதின் பேச்சு,
வெள்ளிக் கொலுசு
அள்ளுது மனசை,
துள்ளும் அதனின்
துடிக்கும் ஓசை,
வெல்லும் இசையிடம்
வெஞ்சமர் புரியும்.
பாதம் மட்டுமே
பார்க்கப் போதும்,
குளிர்ந்த பாதம்
கோபுர அடித்தளம்,
மிளிறும் விரல்கள்
மின்மினிப் பூச்சிகள்.
சிவந்தத் தாள்கள்
செவ்வியக் கவிதை.
அவையிடம் இருந்தே
அதிசயம் பிறக்கும்.