கிளைகள் அடர்ந்த தனிமரம்தான் அது
தன் விழுதுகளை நம்பியே
நிமிர்ந்து நிற்கும் அரைநூற்றாண்டாக …
அதன்கிளைகள் மேல் பசிய இலைகளாகப் படர்ந்தன கிளிகள்…
லட்சோபலட்சம் பைங்கிளிகளின்
ஆராவாரிக்கும் சப்தம் எண்திசையெங்கும் பறக்கச் செய்கிறது.
கிளிகளின் கொஞ்சல்களும்
பழங்களைக் கொத்தியுண்ணும் இன்பமும்
தாய்வயிற்றில் உதைக்கும்குழந்தையெனக்
கொள்கிறது அந்த ஆலமரம்
நாற்புறமும் சாலைகளை சத்தமிட்டபடியே
குறுவண்டி பெருவண்டிகளெனப்
பெருகியோடும் பேராற்றின் நடுவே
அது செம்மாந்து நிற்பதை பார்த்தவர்கள்…
சிலர் புரியாமல் உமிழ்ந்து போகிறார்கள்
சிலர் பாவம் என உளறிப் போகிறார்கள்
தன்நிழலை நம்பியே நிமிர்ந்து நிற்கும்
அடர்ந்த வானமாகும் அந்த மரம்…
வனமாகவும் காட்சியளிக்கிறது…
வழிபோக்கர் களின் ஓய்விடமாகவும்
கைவிடப்பட்ட வர்களின் வாழிடமாகவும்
செல்லரித்த தன் அடிப்பகுதி
சிலவற்றின் படுக்கையிடமாகவும்…
நாற்சந்தியில் நிற்பதைப் பற்றி
ஒருபோதும் கவலை கொண்டதில்லை
மாறாகத் தாராளமாய்
வானம் தொட்டு வளர்க்க எண்ணும்
யாவரையும் யாவற்றையும்
உண்ணும் பழங்களையும் நிழலையும்
ஏன் தன்னையே தின்ன கொடுத்திருக்கும்
யாவர்க்குமாகிய அந்த ஆலமரம்
இன்றும் காட்சியளிக்கும் நாற்சந்தியில்
கிளியுடைய மீனாட்சியம்மனாக…