மணமுடித்த மங்கையே நீவாழி!
மங்கலம்நிறை தங்கையே நீவாழி!
கனவுயாவும் நிறைவேறி நீமகிழ
காட்சிதரும் கண்மணியே நீவாழி!
புகுந்தவீடு புகழ்பெற்றல் போலுனது
பிறந்தவீடு மனமகிழவும் செய்திடணும்,
கண்ணிறைந்த கணவனவன் செயல்களிலே
கட்டாயம் உன்விருப்பம் கலந்திடணும்.
மாமனாரும் மாமியாரும் போற்றுகின்ற
மருமகளாய் எந்நாளும் திகழ்ந்திடணும்,
குடும்பத்தின் பொன்விளக்காய் நீயிருந்து
கோவிலாக வீட்டைநீ மாற்றிடணும்.
நாத்தனாரின் உறவுகளை வெறுத்திடாமல்
நீஅவர்க்கு உதவியாக இருந்திடணும்,
பெற்றவர்கள் உனதன்பில் மனமகிழ்ந்து
பேரின்பம் கண்டவரும் உணர்ந்திடணும்.
புன்முறுவல் பூக்கின்ற பொன்முகத்தில்
புத்தம்புதுப் பிரகாசம் பொழிந்திடணும்,
கண்மையோ கண்ணீரில் கரைந்திடாமல்
கவலைதனை மறைத்தின்பம் வழிந்திடணும்.
பொறுப்புள்ள தலைவியாக நீபெற்ற
புதல்வர்களை நன்முறையில் வளர்த்திடணும்,
வெறுப்புதனை எவர்மீதும் காட்டிடாமல்
விருப்பமுடன் குடும்பத்தை நடத்திடணும்.