பொன்னந்தி மாலையிலே
பொங்கிவரும் பாட்டு! – உன்
புன்னகையில் தான்மயங்கிப்
பூத்ததுள்ளம் கேட்டு!
தென்றலுடன் ஆடிடுதே
தென்னையிளங் கீற்று – பேசும்
செவ்வலகு கிள்ளையொன்று
சித்திரம்போல் வீற்று!!
செம்மஞ்சள் சூரியனும்
செல்லும் விடைபெற்று! – அந்த
செம்மாந்தப் பேரொளியோ
செம்பவளத் தட்டு!
நம்மிதயம் சேர்ந்திணையும்
நாளினில்கை தொட்டு – நம்
நற்றமிழில் சொல்லெடுத்து
நானிசைப்பேன் மெட்டு!
கூடடையும் தாய்வரவில்
குஞ்சுமுகம் பூக்கும் – அதன்
கொஞ்சுமொழி கேட்டவுடன்
கூர்விழியால் பார்க்கும்!
ஓடமொன்று அக்கரையில்
ஓசையின்றிச் சேர்க்கும்! – அதை
ஒட்டிவரும் சேல்கெண்டை
உள்ளமதை யீர்க்கும் !!
கார்மேகம் கண்டமயில்
கலாபம் விரித்தாடும்! – அந்த
காட்சியினைக் கண்டமனம்
காதலியை நாடும்!
சீர்மிகுந்த வெண்ணிலவை
திரையிட்டு மூடும் – முகில்
திங்களொளி பட்டதுமே
சேர்த்தணைக்கத் தேடும்!!
கோலநிலா மீன்களுடன்
கூடியெழில் காட்டும்! – அது
கும்மிருட்டு வந்தபின்னும்
குலவியொளி கூட்டும்!
சோலைமலர் வாசமது
துன்பத்தை ஓட்டும்!- என்
சுந்தரியே உன்நினைவோ
சொர்க்கத்தைக் காட்டும்!!
1 Comment
அதியமான் கார்த்திக் · செப்டம்பர் 28, 2017 at 20 h 36 min
அருமையான கவிதை. வாழ்த்துகள்!