அவனை நான் அக்கா
என விளிப்பது அவனுக்கு பிடிக்கும்.
அவன் என் மூத்த சகோதரன்.
கொஞ்சம் கொஞ்சமாக
பெண்ணாகிக் கொண்டிருந்தான்.
படுக்கையில் விலகித்தெரிந்த
அவன் கொலுசுக் கால்களை
பார்த்துவிட்டு முதன்முதலில்
அதிர்ச்சியானவன் நான்தான்.
சலவை செய்த உணர்ச்சிகளை
அடுக்கி வைத்திருக்கும்
எங்கள் வீட்டு அலமாரியில்
அவனுக்கான பெண்ணுடை
இல்லவே இல்லை.
நான்தான் என்வீட்டின்
கதவாக இருந்தேன்.
என்னைத் திறந்து கொண்டுதான்
அவன் இறுதியாக வெளியேறிப் போனான்.
சக்தி சிலநேரம் தனித்திருக்கிறாள்.
சில நேரம் சிவனோடிருக்கிறாள்.
சக்தி சிவனோடிருக்கும்
வடிவம் அவன்.
புறப்படும்போது
பட்டுச்சேலை சரசரக்க
தலைநிறைய மல்லிகை சரத்தோடு
என் தலையில் கைவைத்து அவன்
ஆசிர்வதித்த போது,
என் கண்களில் வழிந்த கண்ணீர்
பூப்போல எடையற்றிருந்தது.
2 Comments
பெண்ணியம் செல்வக்குமாரி · ஆகஸ்ட் 14, 2017 at 6 h 08 min
இந்தக் கவிதை அரவாணியரின் உள்ளுணர்வுகளைப் புலப்படுத்துவதாக அமைகிறது. அவர்கள் உறவுக்காய், பாசத்திற்காய் ஏங்குபவர்கள், தினசரி வாழ்வுக்கு அல்லாடுபவர்கள். அவர்களின் வலியையும் எடுத்துரைத்த கார்த்திக் திலகனை பாராட்டுகிறேன்.
கவிவாணன் · ஆகஸ்ட் 14, 2017 at 13 h 24 min
என் கண்களில் வழிந்த கண்ணீர்…
எடை மிகுந்து குளமாகியது!
பாராட்டுகள் கார்த்திக்…