மாக்கோலம் போடுகின்ற மங்கையே – உன்
மனக்கோலம் என்னாயிற்று சொல்வாயே!
கலர்க்கோலம் போடுகின்ற காரிகையே – உன்
கனவுக்கோலம் என்னாயிற்று சொல்நீயே!
அதிகாலைத் துயிலெழுந்த அழகியே – உன்
அடிமனதில் உறங்குபவர் யாரோ?
பதுமையாய் முகங்காட்டும் பாவையே – உன்
பவளவிதழில் பந்திவைப்பவர் எவரோ?
மல்லிகையைச் சூடியிருக்கும் மாதவியே – உன்
மாமனவனை நினைக்கையிலே புன்சிரிப்போ?
கைவளையல் போட்டிருக்கும் கண்மணியே – உன்
கண்ணாடி வளையலுக்குள் காதலனா?
பாவாடைத் தாவணியில் பரிமளமே – உன்
பார்வையிலே விழுந்ததுவோ எவர்மனமே!
பூவாடை வீசிவரும் பொன்மகளே – உன்
பூர்வஜென்மப் புண்ணியமே இவ்வெழிலே!
வாசலுக்கு வந்திருக்கும் வளர்மதியே – உன்
வாழ்க்கையிலே கரம்பிடிப்பார் எவர்மலரே!
பூரணமாய் ஜொலிக்கின்ற புதுமலரே – உன்
புன்னகையில் குடியிருப்போர் சொல்நிலவே!