குரல்: பாத்திமா பர்சானா
பட்டம் பெற்றவரே
பார் போற்றும் பெருந்தலையே,
தரையைத் தொடாமலே
வானில் நீர் பறந்தீரோ ….
தயங்கித் தயங்கியே
திக்கெட்டும் தட்டுகிறேன்,
ஒரு பக்கக் கதவுக்கும்
துளியாச்சும் கேட்கலயா ….
மல்லிகைப் பூவுக்கு
மணம் பூசத் தேவையில்லை,
பக்கத்தில் கடதாசி
ஏன் உனக்குத் தெரியவில்லை ..
கள்ளிக் காட்டுக்கு
கனத்த மழை தேவையில்லை,
காசித் தும்பைக்கு
ஐந்து துளி ஊத்துமையா ….
ஆலம் விழுதுக்கு
அரை வாளி கணக்குமில்லை,
முளைக்கும் நாத்துக்கு
ஒரு குவளை தாருமையா …
எட்டி எட்டி உதைக்காதே
எலிப் பொறியில் கால் வைக்காதே,
கண் தெரியாக் கண்ணி வெடி
கழுத்தறுக்கும் மறக்காதே …..
எறும்பென்று நசுக்காதே
ஏழனமாய்ப் பார்க்காதே,
ஈ நுளைந்து அரசழிந்த
சரித்திரம் நீ படிக்கலயா ….
போடியார் வயித்தில் நீ
பிறந்ததனால் பணக்காரன்,
ஏழை வயித்து மகன்
உனை ஜெயிப்பான் மறக்காதே.
நானிங்கு தவிப்பதுவும்
நீ இன்று ஜொலிப்பதுவும்,
நாளைக்கே இடம் மாறும்
தட்டி என்னைக் கழிக்காதே …