இரவிவர்மா ஓவியமா
இராமன்கதைக் காவியமோ ?
வானவர்க்கும் கிடைக்காத
வந்திருக்கும் திரவியமோ ?
மின்னலுக்கு ஆடைகட்டி
மேதினியில் உதித்ததுவோ ?
கன்னலுக்குத் தேன்பாய்ச்சி
காலிங்குப் பதித்ததுவோ ?
வெடித்திருக்கும் வெள்ளைரோஸ்
விவரிக்கும் பேரழகோ ?
கொடுத்துவைத்த கோமகனும்
குடியமரும் தேரழகோ ?
முல்லைமலர் போலிருக்கும்
மூக்குத்திப் பொன்னழகோ ?
உள்ளமதை வெளிப்படுத்தும்
உயர்வானக் கண்ணழகோ ?
இதழ்பூசும் வண்ணமது
இதயத்தைக் கவர்ந்ததுவோ ?
விதவிதமாய்க் காதணிகள்
விருந்துக்கு வந்தனவோ ?
விழிபேசும் மொழிகேட்டு
வழிகூட மறந்ததுவோ ?
ஒளிவீசும் பார்வையிலே
உயர்காதல் திறந்ததுவோ ?