அகரத்திற்கோர் பெருமை
நின் பெயரின் முதலெழுத்தை
முதல் எழுத்தாய்க் கொண்டதால்!
ஆக்கத்தின் திறவுகோல்
நின்னணுக் கரங்களிலும்
மழலைப் புன்னகையிலும்!
இந்திய தேசம் கண்டெடுத்த
விஞ்ஞானப் புதையல் நீங்கள்!
ஈன்ற வலியும் உதிரமும்
வீணாகவில்லை நின் அன்னைக்கு!
தேசத்தின் விடிவெள்ளியை அல்லவா
ஈன்றெடுத்தாள் அந்தத் தாய்!
உன் வழியில் பயணித்தே
வருகின்றனர் மாணவர் கூட்டம்!
உங்கள் கனவுகளை
நனவாக்கும் நாள் வெகுதூரம் இல்லை!
ஊருக்கு உழைத்த உத்தமர் நீர்!
உங்கள் பிரிவால்
எங்கள் இதயங்களில் கண்ணீர்!
எங்கள் தந்தையும் நீரே…
எங்கள் தோழனும் நீரே…
மாணவர்களுக்கு மாணவனும் நீரே…
மாற்றானுக்கு ருத்ரன் நீர்!
ஏவுகணை நாயகனே…
நீர் மண்ணில் புதைந்தாலும்
உங்கள் கனவுகள்
நாளும் பிறந்துகொண்டே இருக்கின்றன!
ஐயா நின் காலத்தில்
வாழ்ந்த பெருமை பெற்றோம்…
சரித்திர நாயகனே
உன் சப்தங்கள் இன்னும்
ஓயவில்லை எங்கள் செவிகளில்!
ஒரு நொடி கூட
ஓய்வாக இருக்கவில்லை !
ஒவ்வோரு நொடியையும்
இந்திய வளர்ச்சியின்
விதைகளாக்கினீர்!
ஓடும் பெட்டகம் நீர்!
ஆம்… துள்ளி ஓடும்
நடமாடும் அறிவுப்
பெட்டகம் நீர்தான் !
கடல்கடந்து பக்தர்களை
பெற்ற தெய்வமும் நீர்!
ஔவியம் (பொறாமை)
அறுத்தவர் நீர்!
குரானோடு கீதையையும்,
பைபிளையும் நேசித்தீர்!
அஃகினியின் பிரம்மன் நீர்!
கனவுகளுக்கும் பலம் உண்டென்பதை
உணர்த்திய ஆசான் நீர்!
நின் பிறப்பு சம்பவமாக இருந்தாலும்
இறப்பு “இனி எவரும்
தொடமுடியா சரித்திரமே”!
2 Comments
குமார் முருகேசன் · அக்டோபர் 16, 2016 at 16 h 30 min
“அ” முதல் “ஃ” வரை எஃகு மனிதரின் புகழ் பாடிய நின் வரிகளுக்கு இத்தோழனின் ஒரு சிறிய வாழ்த்திதுவே…..
வாழ்த்துகள் அம்பிகா…
அம்பிகா குமரன் · அக்டோபர் 16, 2016 at 16 h 31 min
எனது எழுத்துக்களுக்கும் ஓர் அங்கீகாரம்…
என் வாழ்வின் புதுவசந்தமாய் வந்த நட்பின் பரிசு…
நன்றி தோழா குமார்
நன்றி தமிழ்நெஞ்சம்