வாசிப்பை நேசிப்பாய்
வளமாக்கும் அது உன்னை!
வார்த்தைகளில் சொல்ல
வாராத இன்பத்தைத்
தருமுனக்கு வாசிப்பு!
அவரவரே அனுபவித்து
உணர்கின்ற மகிழ்ச்சி அது!
அனுபவித்துப் பார்!
அதுவோர் புதிய சுகம்!
வாசித்துப் பார்
வாழ்வில் ஒரு திருப்பம்
ஒரு மாற்றம்
நீ பெறுவாய்!
உள்ளம் அமைதி பெறும்
ஆறுதல் நீ அடைவாய்
மூளை சுறுசுறுப்பாய்
இயங்கத் தொடங்கி விடும்
வாசித்துப் பார்!
நீயோர் புதிய உலகத்தில்
சஞ்சரிப்பாய்!
அது –
நீ படித்த நூல்தந்த உறவு!
ஆசிரியன் வடித்துத் தந்த உலகம்!
வாசித்துப் பார்…
உன் சிந்தையில்
மகிழ்ச்சி தோன்றும்
புதிய நடத்தைகள்
புதிய பாத்திரங்கள்
புதிய எஎண்ணங்கள்
உன்னில் நிரம்பும்!
வாசிப்பை நேசிப்பாய்…
கற்பனை அதிகரிக்கும்
உன் திட்டங்கள் செழுமை பெறும்
நீ…
மீண்டும் மீண்டும் பிறப்பாய்!
நடைமுறை உலகிற்குப்
பொருத்தமுடையவன் ஆவாய்!
புதியவனாய்…
நீ மாறி மாறிப் பிறப்பாய்!
வாசித்துப்பார்!
நீ ஒரு நூலில் மூழ்கி
வெளியே வருகிற போது
அந்த நூலின் நாயகனாய்
மாறி வருவாய்
வெற்றி தோல்வியை
சகிக்கும் மனிதனாய்
தேறி வருவாய்!
வாசித்துப் பார்…
உனக்குத் தனிமை தெரியாது!
சலிப்புத் தட்டாது!
அலுப்பு வராது!
தரமான தகுதியான நூல்களை
வாசித்துப் பார்!
கதை நூல்களை
சிறு வயதில் வாசி
பின்னர் வளர வளர
தொழில் நுட்பம், சமத்துவம்,
விஞ்ஞானம், ஆத்மீகம் என்று
ஒவ்வொன்றாய் வாசி
உன் வாழ்வுக் கட்டமைப்பில்
ஓர் ஒழுங்கைக் கண்டு
நீ அதிசயிப்பாய்!
வாசித்துப் பார்
உன் உணர்வுகள் தூய்மை பெறும்!
எண்ணங்கள் எழுச்சி பெறும்!
வாசி…
வாசித்தவற்றை வாழ்வில்
வழக்கப்படுத்திப் பார்!
எந்தச் சவாலையும்
சமாளிக்கும் ஆற்றல் வரும்
நீ வெற்றி பெறுவாய்!
வாசிப்பை நேசிப்பாய்
வளமாக்கும் அது உன்னை!