நடைபயிற்சி மேற்கொள்ளும் காலை நேரம்
—-நல்லிருட்டு விலகியொளி படரும் நேரம்
விடைகொடுத்து சோம்பலுக்கு நடந்த போது
—-விழிகள்தாம் கண்டதொரு பணத்தின் தாளை !
கடைக்கண்ணால் இருபுறமும் பார்த்த வாறு
—-கால்விரலால் எடுத்ததனைக் காணும் போது
கிடைத்தத்தாள் ஐம்பதென்று தெரிந்து கொண்டு
—-கீழ்ச்சட்டைப் பைக்குள்ளே மறைத்து வைத்தேன் !

இயல்பாக நடப்பதற்குத் தொடங்கும் போதோ
—-இருநண்பர் அருகினிலே வந்து சேர்ந்தார்
கயல்முள்தான் பல்லிடுக்கில் சிக்கிக் கொண்டு
—-கடுகடுப்பைத் தருவதைப்போல் நெஞ்சிற் குள்ளே
முயலாமல் கிடைத்தந்தப் பணத்தாள் குத்தி
—-முகந்தன்னில் காட்டியது திருட னென்றே
அயல்வந்த அவர்களிடம் கிடைத்த செய்தி
—-அறிவித்த பின்னேதான் அமைதி பெற்றேன் !

என்னசெய்ய கிடைத்திட்ட அப்ப ணத்தை
—-எல்லோரும் தேநீரை அருந்த லாமா
என்றநண்பர் கருத்தேற்று சென்ற போது
—-எதிரிருவர் எம்முடனே சேர்ந்து கொண்டார்
முன்சென்ற இருவரிதைக் கேட்டே எங்கள்
—-முதுகோடு தாங்களுமே சேர்ந்து கொள்ள
பின்னிருவர் தேநீரின் கடையில் சேரப்
—-பிட்டிற்கு மண்சுமந்த கதையா யிற்று !

கிடைத்ததுவோ ஐம்பதுரூ தாளோ ஒன்று
—-கிளைபரவி சேர்ந்தவரோ ஒன்ப தின்மர்
வடையெடுத்த காகத்தின் சோகம் போன்று
—-வந்தாற்போல் போயிற்று இரட்டிப் பாக
கிடைத்தாலும் சொந்தமில்லா பொருளை ஏற்றால்
—-கிடைத்ததுபோல் ஏமாற்றும் சூதாட் டம்போல்
விடைபெற்றுப் போயிற்றென் பொருளைச் சேர்த்து
—-விளைவெனக்கு நற்பாடம் உங்க ளுக்கும் !


1 Comment

கி.தெய்வேந்திரன் · ஆகஸ்ட் 31, 2016 at 16 h 21 min

வரவு 50
செலவு 100 …..

நாளைல இருந்து நடை பயிற்சியே வேண்டாம் (நடைபாதையில் கேட்பாரற்று இருக்கும் பொருளே) ….

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...