காந்தியெனும் உத்தமரால் சுதந்திரத்தைக் கண்டோம்!
….. காவிவண்ணத் தியாகத்தை அவருருவில் கண்டோம்!
சாந்தியெனும் சத்தியத்தின் சீலராகக் கண்டோம்!
….. சரித்திரத்தில் வெள்ளைவண்ணத் தவஒளியைக் கண்டோம்!
காந்தியத்தின் மகிமையெல்லாம் கற்பதிலே கண்டோம்!
….. கருத்தானப் பசுமைவண்ணம் அவர்செயலில் கண்டோம்!
ஏந்தியுரைச் செய்திடுவோம் ஏற்றத்தைக் காண்போம்!
….. இயக்கமான சக்கரத்தை இதயத்தில் வைப்போம்!
வெள்ளையனே வெளியேறு விளங்கிடவே சொன்னோம்!
….. வென்றதனால் அந்நியனை விலகிடவே செய்தோம்!
நல்லமனம் சுதந்திரத்தை நயப்புறவே பெற்றோம்
….. நாட்டுநலம் காக்கின்ற நமதுரிமை கொள்வோம்
உள்ளமதில் காந்தியவர் உயர்வினிலே ஆண்டோம்
….. உருப்படியாய் ஒருநாடாய் உருவாக்கிக் கொண்டோம்
நல்லதமிழ் திறமனைத்தும் நாம்காக்க வேண்டும்
….. நல்லோர்கள் பார்வையிலே நனிசிறக்க வேண்டும்!
கற்றவரும் சமநோக்கில் கலந்திடவே வேண்டும்!
….. கலைபலவும் சிதையாமல் காத்திடவே வேண்டும்!
பெற்றவரும் தாய்மொழியைப் பெரிதுவக்க வேண்டும்!
….. பிள்ளைகளின் மனதினிலே பிணைத்திடவே வேண்டும்!
நற்றவரும் வாழ்த்துரைக்க நாடுயர வேண்டும்!
….. நலமான திட்டங்கள் நாடிடவே வேண்டும்!
உற்றவரும் மற்றவரும் ஒன்றாக வேண்டும்!
….. உன்னதமாம் சுதந்திரத்தை உயிராகக் காப்போம்!