cow_PNG2135பாதம் தொட்டு பணிகிறேன்… படியுங்கள்.

பசுவாகிய எனக்கு, புணர்வதற்கு என் வீரக் காளை தேவை!…

உம்பளச்சேரி வகையைச் சேர்ந்த பசுவாகிய நான் ஆச்சாம்பட்டியில் உள்ள செம்மைவனத்தில் வாழ்கிறேன். ’வளத்தி’ என்று எனக்குப் பெயரிட்டிருக்கிறார்கள். வளங்களைத் தருபவள் என்று இதற்குப் பொருள் கொள்ளலாம்.

நான் சினையாக இருந்த போது இங்கு வந்தேன். செம்மைவனம் வந்து ஏழு நாட்களுக்குள் கிடாரி (பசு) கன்றை ஈன்றேன். இப்போது நான் உங்களிடம் கேட்பது மிக முக்கியமான உதவி.

உடலுறவைப் பற்றி மெத்தப் படித்த மனிதர்களாகிய நீங்கள் என்ன கருத்துகளைக் கொண்டிருக்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை.

நான் ஒரு மாடு. எனக்கு ஐந்தறிவுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. என்னையும் என் இனத்தவரையும் பொறுத்தவரை, உடலுறவு கொள்வது மிகுந்த இன்பம் தரும் செயல்.

பிள்ளை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் ‘கடமை’ என்று உங்களில் சில மேதாவிகள் உடலுறவைப் புரிந்து கொள்வதும் எனக்குத் தெரியும்.

என்னை செம்மைவனத்திற்கு வாங்கி வந்தவர் என்னிடம் பேசும் வழக்கம் கொண்டவர். மனிதர்களில் அவர் ’மூடர்கள்’ எனும் வகையைச் சேர்ந்தவர். ஆடு, மாடு, கோழி, மரம், செடி போன்ற உயிரினங்களோடு பேசுபவர்களை ‘மூடர்கள்’ என அழைப்பது நாகரிகர்களின் வழக்கம் என அவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

நான் கன்று ஈன்று நான்கு மாதங்களுக்கு மேல் கடந்து விட்டன. இன்னும் சில நாட்களில் எனக்கு உடலுறவு கொள்ள வேண்டிய தேவை உருவாகி விடும். இப்போதே எனது முலை காம்புகளில் பால் சுரப்பு குறைகிறது, முலை மடி இறுகத் துவங்கி விட்டது, பிறப்புறுப்பு அவ்வப்போது துடிக்கத் துவங்கி விட்டது. இந்த அறிகுறிகளை எல்லாம் உங்களிடம் சொல்ல வேண்டிய நிலையில் நானும் என் போன்ற மாடுகளும் இருக்கிறோம்.

பால் சுரப்பு நிற்கும் காலத்தில் எங்கள் அடி வயிறு பிசையும் உணர்ச்சி அதிகரிக்கும். அவ்வாறான உணர்ச்சி நிலைகளில் எங்களை அறியாமல் அடி வயிற்றிலிருந்து கத்தத் துவங்குவோம்.

பசியில் கத்துவதற்கும் காமத்தில் கத்துவதற்கும் எங்கள் குரலில் வேறுபாடுகள் இருக்கும். காமம் மிகும் போது எங்கள் கண்கள் வெறித்து, வால் மயிர்கள் சிலிர்த்து, பிறப்புறுப்பு புடைத்து இருப்பதை உங்களில் எத்தனைப் பேர் பார்த்திருப்பீர்களோ தெரியவில்லை.

சில காலம் முன்பு வரை இவ்வாறான அறிகுறிகளைப் பார்த்ததும் எங்களை வளர்ப்பவர்கள் எங்களை ஏதேனும் ஒரு காளையுடன் ஓட்டிச் செல்வார்கள். காமம் தீரத் தீர எங்களுக்கு புணர்ச்சி கிடைக்கும்.

காடுகளில் மேயும் போது கிடைக்கும் புணர்ச்சிகள் இன்னும் சிறப்பானவை. பசுக்களாகிய எங்கள் குரலில் எழும் காமம் மூட மனிதர்களிடன் உதவி கேட்பதற்கானது அல்ல.காளைகளை சுண்டி இழுப்பதற்காக என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இப்போதெல்லாம் எங்களுக்குக் காமம் மிகுந்தால் காளைகளிடம் ஓட்டிச் செல்வதில்லை. மருத்துவர்களிடம் கூட்டிச் செல்கிறார்கள்.

மருத்துவர்கள் மெத்தப் படித்தவர்கள், அறிவாளிகள், நாகரிகம் தெரிந்தவர்கள், விலங்கியல் பயின்றவர்கள், மேதைகள். காமம் எனும் உணர்வு, கன்று போடுவதற்காக மட்டுமே தோன்றுகிறது என்ற அதி புத்திசாலித்தனமான புரிதல் மருத்துவர்களுக்கு உள்ளது.

மனிதர்களில் ஆணும் பெண்ணும் கூடுவது பிள்ளை பெறுவதற்காகத்தானோ என்ற ஐயம் எங்களுக்கு இப்போது எழுந்துள்ளது. ஒருவேளை மனிதர்களுக்குக் காமம் என்ற உணர்வே அற்றுவிட்டதோ என்ற குழப்பமும் சமீப காலமாக உருவாகி உள்ளது.

மருத்துவர்கள் எங்கள் காமத்தில் இரசாயனக் கழிவுகளைக் கொட்டி அழித்து விட்டு, விந்தணுக்களை பிறப்புறுப்பில் பீச்சி விடுகிறார்கள். காளை செய்ய வேண்டிய வேலையை மருத்துவர்கள் செய்கிறார்கள்.

ஆனாலும் காளையைப் போன்ற வேலையை அவர்கள் செய்வதில்லை, செய்யவும் முடியாது.

அவர்கள் பீச்சி அடிக்கும் விந்தணுவுக்குச் சொந்தமான காளைகள் ஏதோ சில வெளிநாடுகளில் தோன்றியவை. அந்தக் காளைகளுக்கு பசுக்களின் யோனி மறுக்கப் படுகிறது. பசுக்களாகிய எங்களுக்கு காளைகளின் ஆண்குறிகள் மறுக்கப்படுகின்றன. இவ்வாறு ஆண்குறி, பெண்குறிகளுக்கிடையில் கூட அறிவியலைப் புகுத்தும் நாகரிக மனிதர்களின் காலத்தில் பிறந்ததை எண்ணி நானும் என் சக மாடுகளும் அவமானமும் துக்கமும் கொள்கிறோம்.

எங்கள் புணர்ச்சி உரிமையைப் பறித்துக் கொண்டு, நீங்கள் மட்டும் நன்றாக வாழ்ந்து விடலாம் என நம்புகிறீர்கள். உங்கள் நம்பிக்கையை நான் சிதைக்க விரும்பவில்லை. அதேவேளை, ஒரு செய்தியை உரைக்க வேண்டியுள்ளது.

எங்கள் புணர்ச்சியை நீங்கள் நிராகரித்த பின்னர், நாகரிகச் சமூகத்தில் உருவாகியுள்ள மலட்டுத் தன்மையின் அளவைக் கொஞ்சம் ஆய்வு செய்து பாருங்கள். உங்களுக்குத்தான் ஆய்வுகள் என்றால் ரொம்ப பிடிக்குமே!.

மலடு நீக்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை எவ்வளவு பெருகியுள்ளது எனப் பாருங்கள்.

ஆண் குறி நுழையாத எங்கள் யோனிகளின் சாபம், முலைக் காம்புகளில் வழியும் பாலின் வளத்தைச் சீரழித்துக் கொண்டுள்ளது.

காளையைப் புணர்ந்து பெற்ற கன்றுக்காகச் சுரக்கும் பால் வேறு, மருத்துவர் செலுத்தும் விந்துவில் பிறக்கும் கன்றுக்கான பால் வேறு மனிதர்களே!.

பிறப்புறுப்பு மரத்துப் போன பசுக்களின் எண்ணிக்கைதான் இப்போது அதிகம். அவற்றின் பாலைத்தானே அருந்திக் களிக்கிறீர்கள். அவற்றில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன என்று ஆய்வு செய்து முடித்தாயிற்று அல்லவா!. அவற்றில் உயிர் உருவாக்கும் ஆற்றல் இருக்கிறதா எனப் பாருங்கள் ஞான மேதைகளே!.

சத்தியமாகச் சொல்கிறேன், காய்ந்த யோனிப் பசுக்களின் பாலில் உயிராற்றல் இருக்காது.

புணர்ச்சி என்பது பிள்ளை பெறும் ‘வேலை’ அல்ல. மனங்கள் கூடிக் களித்து, உடலுக்குள் மழை பொழிந்து, கருப்பை நனைந்து, உயிர் வளரும் படைப்புத் தொழில். அந்தப் படைப்புத் தொழிலில் குறுக்கிட்டு விந்தணுக்களை பீச்சி விட்டால் கன்று பிறக்கும். அந்தக் கன்று இயற்கையான உடல் வலுவுடன் வாழாது, அக்கன்றுக்காகச் சுரக்கும் பாலில் உயிர் ஆற்றல் இருக்காது. இவ்வாறு பிறக்கும் கன்றுகள் யாவும் மருத்துவ மனைகளையும், இரசாயன தீவனங்களையும் நம்பித்தான் வாழ்கின்றன என்பது மெத்தப் படித்த உங்களுக்குத் தெரியுமா?.

நீங்கள் எப்படி மருத்துவமனைகளையும், இரசாயனம் கலந்த உணவுகளையும் நம்பி வாழ்கிறீர்களோ, அதே போலதான் செயற்கைக் கன்றுகள் வாழ்கின்றன.

எங்களுக்கு இழைக்கும் கொடுமைகளை உங்களுக்கும் வழங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் புத்திசாலிகள் என்பதால் உங்களுக்கு இந்தத் தகவல் வந்து சேரவில்லை.

இப்போதும் கூட உங்களில் பலர் இந்தத் தகவலை நம்பப் போவதில்லை. உங்களுக்கு ஆய்வறிக்கைகள் தேவை, சோதனைகள் தேவை. எங்களுக்கோ காளைகளின் விறைத்த குறிகள் தேவை.

பசுக்களைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு ஒரு மேதாவிக் கூட்டம் காளைகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டுள்ளது. காளைகளுடன் மனிதர்கள் ஆடும் விளையாட்டுகளைத் தடை செய்தது அக்கூட்டம். இப்போது காளைகளை வளர்ப்பது தேவையற்ற செயலாகவே மாறியும் விட்டது.

அந்தோ!!
ஒரு பக்கம், விந்து ஊசிகள் மறு பக்கம் காளை விளையாட்டுகளுக்குத் தடை. எங்களை வளர்க்கும் மக்களுக்கு நாங்கள் வெற்றுச் செலவினமாக மாறிப் போனோமே!.

பசு என்றால், உயிர் என்றும் பொருள். மாடு என்றால், செல்வம் என்றும் பொருள். உயிரின் ஆதி, செல்வத்தின் உருவம் நாங்கள்தான். காளை என்றால் உயிர்களின் குறியீடு.

ரிஷப காளை மீது இறைவன் அமர்கிறான் என்பது, எல்லா உயிர்களையும் அடக்கி ஆள்பவன் என்ற விரிந்த கருத்தின் உருவகம்.

உங்களுக்கு இவையெல்லாம் தேவையற்ற சேதிகள்தான். எந்தப் பாலில் எவ்வளவு கொழுப்பு உள்ளது என்பது உங்கள் கவலை. நாய்ப் பாலில் அதிக சத்து இருப்பதாக ஏதேனும் ஆய்வகம் அறிக்கை தந்தால், நாய்களின் முலைகளை நாசமாக்கி விடும் நவீனர்களின் கழிசடை சமூகம் இது.

எல்லாவற்றிலும் சத்து, ஊட்டம், உடல்நலம், மருத்துவ குணம் இருக்க வேண்டும் என்று அலைவது நவீனத்தின் மன நோய். சக உயிர்களைப் பற்றிய அறச் சிந்தனை துளியேனும் இருந்தால் எங்களுக்கு இந்தக் கொடுமை நேர்ந்திருக்காது.

உங்களில் மனசாட்சியை விற்று விடாத ஒரு சிலரை நோக்கி இக்கடிதம் வழியாக நான் உதவி கேட்கிறேன்.

காளை மாடுகள் யாவும் இப்போது இறைச்சிக்காக விற்கப் படுகின்றன.

ஏர் இழுத்த எங்கள் காளைகள், மலை மலையாகக் குவிந்த நெல்லைப் போர் அடித்த எங்கள் காளைகள், செக்குகளை இழுத்து எண்ணெய் வளம் பெருக்கிய எங்கள் காளைகள், வண்டிகளை இழுத்து கோடானு கோடி மக்களுக்கான வாகனங்களைத் தந்த எங்கள் காளைகள், ஏறு தழுவலில் ஓடி ஓடி விளையாண்டு இன்புற்ற எங்கள் காளைகள், காடுகளில் எங்கள் மீது ஏறி விழுந்து தடித்த குறிகளால் எங்கள் யோனிகளை விரித்துப் புணர்ந்து பெருமழை பெய்த எங்கள் காளைகள், இப்போது கசாப்புக் கடைகளில் நாசமாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

மாட்டிறைச்சி உண்பதும் உண்ணாததும் உங்கள் கொள்கை, உங்கள் உரிமை. பசுக்களாகிய நாங்கள் பால் கறப்பதால் தப்புகிறோம். காளைகளுக்கென வேலை ஏதும் உங்கள் நாகரிக சமூகத்தில் இல்லை. ஆகவே, ஆணாகப் பிறக்கும் எல்லா மாடுகளும் கறிக் கடைகளுக்கு மட்டுமே அனுப்பப்படுகின்றன.
ஒரு காலத்தில், உழைத்துக் களைத்து, இளைத்த மாடுகளைக் கறிக்கு வெட்டினார்கள். இப்போது கொழுத்துத் திரியும் காளைகளாகத் தேடித் தேடி வெட்டுகிறார்கள்.

உங்கள் சமூகத்தின் மேதைகளுக்கு பசுக்கள் வேண்டும். காளைகள் வேண்டாம். மாடுகளாகிய எங்களுக்கோ புணர்வதற்குக் காளைகள் வேண்டும். இதில் ஏதேனும் தவறு இருப்பதாக நினைக்கிறீர்களா அறிவார்ந்த மக்களே?.

இன்னும் சில நாட்களில் எனக்குப் புணர்ச்சி தேவைப்படும். நான் வாழும் ஊரில் காளைகள் இல்லை, மருத்துவர்கள் இருக்கிறார்கள். எனக்குக் காளையுடன் புணரும் வேட்கை எழுகிறது, மருத்துவர்களின் விந்து ஊசிகள் மீது வெறுப்பு மிகுந்து கொண்டுள்ளது.

என்னை வளர்ப்பவர் என்னிடம் இது பற்றிப் பேசினார். எ்ப்படியாவது காளை தேடித் தருவதாகக் கூறியுள்ளார். இதற்காக அவர் இறையிடம் வேண்டிக் கொண்டும் இருக்கிறார். என்னைப் புணர்வதற்காகவேனும் ஒரு காளை மாட்டை விலைக்கு வாங்கவும் அவர் தயாராக இருக்கிறார்.

என்னைப் போன்ற பசுக்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களுக்கெல்லாம் புணரும் உரிமை வேண்டும் என்பதற்காக இக்கடிதத்தின் வழியாக நான் உரையாடுகிறேன்.

எல்லா உயிரினங்களையும் உங்கள் பயன்பாட்டுக்கானவையாகப் பார்க்கும் வெறித்தனத்திலிருந்து விடுபடவே மாட்டீர்களா?.

ஒரு மரத்தைப் பார்க்கும் போது கூட, இந்த மரத்தால் என்ன பயன் எனக் கேட்கிறீர்கள்!. மாடுகளாகிய நாங்கள் மனிதர்களைப் பார்க்கும் போது, ‘இந்த மனிதர்களால் என்ன பயன்?’ எனக் கேட்டால் உங்களிடம் பதில் இருக்காது.

இந்தப் பூமியில் மனிதர்கள் இல்லாத காலம் மிக அதிகம். மாடுகள் இல்லாத காலம் மிகக் குறைவு.

நேரடியாகச் சொல்வதானால், இயற்கை பூமிக்கு மனிதர்களை விட நாட்டு மாடுகளைதான் அதிகம் பிடிக்கும்.

உங்கள் மலம் கூட புழுக்களுக்கு உணவாகாத வகையில், இரசாயனத்தில் கழுவி புதைக்கிறீர்கள். எங்கள் சாணத்தில் ஒவ்வொரு நாளும் கோடானு கோடி புழுக்கள் வாழ்ந்து மடிகின்றன.

புணராத கோழிகளிலிருந்து முட்டைகள் பெறுகிறீர்கள்.

மலட்டு விதைகளைத் தூவி பழங்கள் அறுக்கிறீர்கள்.

விதையற்ற பயிர்களை உணவாகக் கொள்கிறீர்கள்.

உங்களோடு பழகும் எல்லா உயிர்களிடமிருந்தும் புணர்ச்சி உரிமையைப் பறித்துக் கொண்டீர்களே படு பாவிகளா!.

எல்லா உயிரினங்களின் அடி வயிற்று சூட்டிலிருந்து கூறுகிறேன், ‘இதற்கெல்லாம் நீங்கள் கட்டாயம் நோயால், சாபத்தால் அனுபவிப்பீர்கள்’.

இப்போதும் அனுபவித்துக் கொண்டுதானிருக்கிறீர்கள். படும் பாடுகளுக்கெல்லாம் நாம் செய்த பாவம்தான் காரணம் என்று உணராமல், அனுபவிக்கிறீர்கள்.

இப்போதும் உங்களால் மாற முடியும். மலட்டுத் தன்மை கொண்ட எல்லா உணவுகளையும் நிராகரியுங்கள். விந்து ஊசிகளுக்கு எதிராகப் பேசுங்கள், செயலாற்றுங்கள். காளைகளைப் பாதுகாக்க ஏதேனும் செய்யுங்கள். பசுக்களை மட்டும் பாதுகாப்போரின் எண்ணிக்கை உயர்கிறது, காளைகளைக் காப்பவர்கள் குறைந்து கொண்டிருக்கிறார்கள். காளைகளைப் பாதுகாப்பதற்கென கூடிப் பணியாற்றுங்கள்.

பால்வளம், வெண்மைப் புரட்சி ஆகிய சொற்களைக் கொண்டு எங்கள் வாழ்வுரிமையைப் பறிக்கும் பாவத்தை இத்துடன் நிறுத்துங்கள். உங்கள் புள்ளி விவரங்களை விட எங்கள் உணர்ச்சிக் குமுறலுக்கு வலிமை அதிகம்.

நாங்கள் அப்படி என்ன பெரிதாகக் கேட்கிறோம்?!.

எங்களுடன் புணர்வதற்கு எங்கள் இனக் காளை வேண்டும் என்கிறோம். அந்தக் காளை எந்தப் பிறப்பாக இருந்தாலும் கவலையில்லை. கேவலம், நாங்கள் மாடுகள்தானே!.

“என் மக்கள்” கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்…


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »