எழுதத் துடிக்கிறது என் மனசு..
எழுத
காகிதம் காணாமல்
கனக்கிறது மனசு..
மெய்யான ஒன்றை
பேனா மையால் தான் எழுத வேண்டுமா..?
என்
இதயக் காகிதத்தில்
இரத்தத்தால் எழுதி வைத்த
கிறுக்கல்களை
மொழிபெயர்க்கிறேன்..!
நான் ஒரு இரட்டைப் பிறவி..
உயிர்ப் பலிகளுக்கு உடன் பிறப்பு
யுத்த பூமி என் பிறந்தகம் – அங்கு
செத்த உயிர்களே என் ஊர் மக்கள்..
உயிர் குடித்ததற்கு அத்தாட்சியாய்
ஈட்டி முனையின் ஈற்று விளிம்பில்
காய்ந்து கருத்துப் போன இரத்தம் போல
காய்ந்து கிடக்கிறது என் வாழ்க்கை..!
என்
தாயின் மரணம்
துப்பாக்கி முனையில்
தந்தையின் மரணம்
வாள் வீச்சில்
தங்கை மரணம்
ஷெல் வீச்சில்
தம்பியின் மரணம்
உயிர் தப்பி ஓடியவர்களின்
கால்களின் கீழே..
என் வார்த்தைகளின் மரணம்
வலிகளுக்குள்ளே..!
மனித
மனங்களின் மரணத்தால்
பிணங்கள் இரணமாகின
கழுகுகளுக்கு…
பிணங்களின் வாடையுடன்
பிணைந்து கிடக்கும் நான்…!
என் வாழ்க்கையின் முடிவு என்ன..?
இத்தனை உயிர்களை
குடித்த பூமிக்கு
நான் மட்டும் என்
சயனய்ட் ஆக மாறினேன்..?
உயிர் வேண்டுமா உயிர்..?
நல்ல உயிர்…
விலை எதுவும் இல்லை..
கையிருப்பு உள்ளவரை மட்டுமே..
உடன் வாருங்கள்..
என் உயிரினை எடுத்துச் செல்லுங்கள்..
எழுதத் துடிக்கும் என்
மனசை
மறித்து விடுங்கள்..
கொன்று தின்னும் நினைவுகளை
கொளுத்தி விடுங்கள்..