எழுதத் துடிக்கிறது என் மனசு..
எழுத
காகிதம் காணாமல்
கனக்கிறது மனசு..
மெய்யான ஒன்றை
பேனா மையால் தான் எழுத வேண்டுமா..?
என்
இதயக் காகிதத்தில்
இரத்தத்தால் எழுதி வைத்த
கிறுக்கல்களை
மொழிபெயர்க்கிறேன்..!

நான் ஒரு இரட்டைப் பிறவி..
உயிர்ப் பலிகளுக்கு உடன் பிறப்பு
யுத்த பூமி என் பிறந்தகம் – அங்கு
செத்த உயிர்களே என் ஊர் மக்கள்..

உயிர் குடித்ததற்கு அத்தாட்சியாய்
ஈட்டி முனையின் ஈற்று விளிம்பில்
காய்ந்து கருத்துப் போன இரத்தம் போல
காய்ந்து கிடக்கிறது என் வாழ்க்கை..!
என்
தாயின் மரணம்
துப்பாக்கி முனையில்
தந்தையின் மரணம்
வாள் வீச்சில்
தங்கை மரணம்
ஷெல் வீச்சில்
தம்பியின் மரணம்
உயிர் தப்பி ஓடியவர்களின்
கால்களின் கீழே..
என் வார்த்தைகளின் மரணம்
வலிகளுக்குள்ளே..!

மனித
மனங்களின் மரணத்தால்
பிணங்கள் இரணமாகின
கழுகுகளுக்கு…

பிணங்களின் வாடையுடன்
பிணைந்து கிடக்கும் நான்…!
என் வாழ்க்கையின் முடிவு என்ன..?
இத்தனை உயிர்களை
குடித்த பூமிக்கு
நான் மட்டும் என்
சயனய்ட் ஆக மாறினேன்..?

உயிர் வேண்டுமா உயிர்..?
நல்ல உயிர்…
விலை எதுவும் இல்லை..
கையிருப்பு உள்ளவரை மட்டுமே..
உடன் வாருங்கள்..
என் உயிரினை எடுத்துச் செல்லுங்கள்..
எழுதத் துடிக்கும் என்
மனசை
மறித்து விடுங்கள்..
கொன்று தின்னும் நினைவுகளை
கொளுத்தி விடுங்கள்..


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...