மூவேந்தர் கண்டதமிழ் மொழியின் பிள்ளை!
மூடத்தின் முதல்எதிரி! அறிவின் எல்லை
பாவேந்தன் இவன்தானே கவிதை தன்னைப்
படைக்கலமாய் மாற்றியொரு புரட்சி செய்தான்!
மூடநெறிப் பழக்கங்கள் நோய்க ளாகி
முத்தமிழர் இனம்தன்னை அழித்த போது
காடாகி மூலிகையாம் கவிதை யாலே
கனித்தமிழர் இனம்காத்த கனக சுப்பன்!

சாதிமதப் பேய்களுக்கு எதிராய் நின்றான்
சவக்குழியைத் தோண்டிஅதைப் புதைப்போ மென்றான்!
பாதிவழிப் பயணத்தில் துணைஇ ழந்த
பாவையர்க்கு மறுவாழ்வை அமைப்போ மென்றான்!
நீதிவழிக் காதலுக்குத் தடைகள் செய்யும்
நீசருக்கு எரிமலையாம் இவரின் தோற்றம்!
நாதியற்ற இனம்போல தமிழர் வீழ்ந்தார்
நடுவழியில் இவன்பாட்டால் எழுந்து நின்றார்!

தான்கண்ட கனவுகளில் தானே யாகி
எந்நாளோ கவிதைகளாய் எழுந்து நின்றான்!
வான்கண்ட பரிதிஎன வந்த மேலோன்
வரலாற்றில் புதியதொரு உலக மானான்!
தேன்கொண்ட மலரிதயம்! மனித நேயம்
திரண்டமனம் பேராழி! அன்பின் கங்கை!
மான்கொண்ட விழிமாதர் உரிமை பேசும்
வரலாறாய் மீண்டுமவன் வரமாட் டானோ?


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...