மூவேந்தர் கண்டதமிழ் மொழியின் பிள்ளை!
மூடத்தின் முதல்எதிரி! அறிவின் எல்லை
பாவேந்தன் இவன்தானே கவிதை தன்னைப்
படைக்கலமாய் மாற்றியொரு புரட்சி செய்தான்!
மூடநெறிப் பழக்கங்கள் நோய்க ளாகி
முத்தமிழர் இனம்தன்னை அழித்த போது
காடாகி மூலிகையாம் கவிதை யாலே
கனித்தமிழர் இனம்காத்த கனக சுப்பன்!
சாதிமதப் பேய்களுக்கு எதிராய் நின்றான்
சவக்குழியைத் தோண்டிஅதைப் புதைப்போ மென்றான்!
பாதிவழிப் பயணத்தில் துணைஇ ழந்த
பாவையர்க்கு மறுவாழ்வை அமைப்போ மென்றான்!
நீதிவழிக் காதலுக்குத் தடைகள் செய்யும்
நீசருக்கு எரிமலையாம் இவரின் தோற்றம்!
நாதியற்ற இனம்போல தமிழர் வீழ்ந்தார்
நடுவழியில் இவன்பாட்டால் எழுந்து நின்றார்!
தான்கண்ட கனவுகளில் தானே யாகி
எந்நாளோ கவிதைகளாய் எழுந்து நின்றான்!
வான்கண்ட பரிதிஎன வந்த மேலோன்
வரலாற்றில் புதியதொரு உலக மானான்!
தேன்கொண்ட மலரிதயம்! மனித நேயம்
திரண்டமனம் பேராழி! அன்பின் கங்கை!
மான்கொண்ட விழிமாதர் உரிமை பேசும்
வரலாறாய் மீண்டுமவன் வரமாட் டானோ?