நாக்குவழித்து நற்சுவை வெற்றிலை
பாக்குச் சுண்ணாம்புடன்
நாக்குவழியாய் நற்றமிழ்ப் பாடியவன்!
ஒற்றை வரிகளில்
ஓராயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிப்
பாக்களில் புதைத்தவனின்
உடல்தான் புதைக்கவோ
எரிக்கவோப் பட்டிருக்கலாம்; ஆனால்
அவனின் பாக்களைப் புதைக்கவோ எரிக்கவோ இயலா.
செக்கச் சிவந்த மேனி;
மிக்கச் சிறந்த ஞானி
மரபுக்குள் கட்டுண்டவன்;
புதுமைக்குள் புகுந்து விளையாடியவன்
வண்ணதமிழிலும் செய்யுள்
வனைந்தான்;
வாலிபத் தமிழிலும்
வாலிபால் விளையாடினான்!
மீனைத் தொடாத வகுப்பில் பிறந்தவனோ,
“நேற்று வைத்த மீன் குழம்பை”
போற்றும் அளவுக்குச் சுவைக்க வைத்தவன்!
இலங்கையில் சென்று
‘இடியப்பம் பொதியானம்”
பசியாற என்றெல்லாம்
வழக்குச் சொல்லை
வழங்கி வடித்தவன்
”ஊக்குவிப்பவனுக்கும்
ஊக்குவிப்பது வேண்டும்’
என்று ஊக்குவித்தவன்!
கண்மூடியதால்
மண்மூடியவர்கள்
அல்லர்; இவர்களை
மண்மூடியதால்
கண்மூடியவர்கள்” என்று
பூகம்பத்தில் மரணித்தவர்களை
ஈரடிகளால்
ஈரம் கசிய நினைத்தவன்!
ஈழத்தமிழர்களின்
ஈரத்தையும்
வீரத்தையும் பாடிய
சோழத்தமிழன்!
“தமியேன்” என்னும்
தமிழ்ச்சொல்லில்
தன்னடக்கம் இருப்பதை
தமியேனுக்குக் கற்று தந்த
தமிழன்!
1 Comment
உறையூர் வள்ளி · ஜூலை 19, 2016 at 14 h 35 min
இணையத்தில் படித்தது
திரைக்கு பாட்டு என்பதற்கு வாலியின் பின் வரும் ஒரு கவியரங்க கவிதையே மிக எளிமையாக விளக்கம் தரும்..,
இங்கே நான்
வண்ணமொழிப் பிள்ளைக்குக்
தாலாட்டும் தாய்;
அங்கே நான்
விட்டெறியும் எலும்புக்கு
வாலாட்டும் நாய்!
மேலும்…
எந்தப்பா சினிமாவில்
எடுபடுமோ? விலைபெறுமோ?
அந்தப்பா எழுதுகிறேன்;
என்தப்பா? நீர் சொல்லும்!
மோனை முகம் பார்த்து
முழங்கிட நான் முயற்சித்தால்
பானை முகம் பார்த்தென்
பத்தினியாள் பசித்திருப்பாள்
கட்டுக்குள் அகப்படாமல்
கற்பனைச் சிறகடிக்கும்
சிட்டுக்கள் நீங்கள்;
சிறியேன் அப்படியா?
மெட்டுக்குள் கருத்தரித்து
மெல்லவே இடுப்புநோகத்
துட்டுக்குத் தகுந்தவாறு
முட்டையிடும் பெட்டைக்கோழி!
மெட்டுக்கு தகுந்தவாறு வார்த்தைகளை கற்பனைகளை விதைப்பதில் வாலியின் திறமை தனித்திறமை !!!