வடுகப்பட்டி ஈன்றெடுத்த வைர முத்து
வாழ்வாங்கு வாழியவே ! வாழ்வில் என்றும்,
துடிப்போடு கவியெழுதும் துள்ளல் உண்டு
துணையாகும் இவரெழுத்து துன்பம் போக்கும்,
படிக்கின்ற வரிகளெல்லாம் பாமரன் போற்றும்
பண்பாட்டின் தலையூற்றைப் பதமாய்ச் சொல்லும்,
வடிக்கின்ற கவியெல்லாம் வாழ்வின் அமுதம்
வற்றாது அவர்புகழோ வானும் வாழ்த்தும்.
திரைத்துறையில் நீராடி தீந்தமிழ்ச் சொல்லில்
தினம்விளையா டிவரும்நம் தெள்ளுத் தமிழின்
நறைபழுத்தச் சொல்லாளன் நாட்டின் செல்வம்
நயமாக எடுத்துரைக்கும் நல்லேர் உழவன்,
குறையில்லாத் தமிழ்மொழியைக் கோலோச் சியென்றும்
குன்றாமல் தம்புகழைக் குன்றில் வைத்தார்.
உரையாற்றும் போதினிலும் உயர்தமிழ் மொழியை
உயிராக எண்ணுகின்ற உண்மைக் கவிஞன்.
புதினங்கள் பலவற்றைப் புதியாய் எழுதி
புரையோடிய இலக்கியத்தில் புதுமை சேர்த்து
கதியானார் தமிழுக்குக் கண்ணா யிருந்து
கருத்தானச் சிறுகதைகள் களத்தில் ஈந்து
பதியானார் கவிஞர்க்குப் பலவாய் நின்று
பைந்தமிழின் புகழ்ப்பாடி பாரைக் கவர்ந்து
நதியாக அவரெழுத்து நம்மைக் கூட்டி
நானிலத்தில் என்றென்றும் நலமே சேர்த்தார்.
மணிவிழாவில் திளைக்கின்ற மாபெரும் கவிஞன்
மாசற்ற நல்முகத்தோன் மன்றில் நாளும்
துணிவோடு ஆற்றுகின்ற தொடர் உழைப்பில்
துணையானார் தமிழருக்குத் தோளும் தந்தார்,
பணியாற்றும் நாளெல்லாம் பைந்தமிழ் மூச்சாய்ச்
படைத்திட்டார் இலக்கியங்கள் பலரும் போற்ற
கணினிபோல நினைவாற்றல் காலம் தந்த
கவிப்பேரரசு வைரமுத்துக் கவிஞர் வாழ்க!